Friday, June 19, 2009

திருக்குறள்: 18


அதிகாரம்: 2. வான் சிறப்பு. திருக்குறள்: 18



சிறப்பொடு பூசனை செல்லாது-வானம்
வறக்குமேல், வானோர்க்கும், ஈண்டு.


பொழிப்புரை (Meaning) :
சிறப்பு செய்யப்படும் பூசனை நடவாது, வானம் வறட்சியுற்றால், தேவர்களுக்கும் ஈங்கு.


விரிவுரை (Explanation) :

வானம் மழை பொழியாது வறட்சி ஏற்பட்டால், இவ் உலகத்தில் வானவர்களாகிய தேவர் பொருட்டு செய்யப்படும் சிறப்புக்களும், விழாக்களும், பூசனைகளும் நடைபெறாது.

தெய்வங்களுக்கும், வானவர்களுக்கும், இயற்கைக்கும் செய்யப்படுகின்ற நன்றி தெரிவிக்கும் விழாக்களும், பூசைகளும், நித்திய வழிபாடும், பூசித்தலும் மழை இல்லையென்றால் நடக்காது. ஊர்களில் நடவு இல்லை என்றால் அவ்வருடம் திருவிழா நடக்காது போவதைக் காணலாம்.

ஆக வானம் பொய்த்தால், வானோரும் போற்றுவாரின்றி வழிபடப் படாது போவார்கள். எனவே உட்பொருளாக உணரத் தக்கது மழையில்லை என்றால் தெய்வமும் இல்லை. ஆக மழையே தெய்வத்திற்கும் மேல் முக்கியமானது.

வள்ளுவர் வானோர் என்பதால் பல கடவுளர் வழிபாட்டை ஆதரிக்கிறார் என்பது தவறு. வானோர் என்பதற்கு நீத்தார் என்றும், முன்னோர் என்றும் அடுத்த அத்தியாயத்தில் சொல்கிறார். எனவே இங்கே பூசனை என்பது வானோர்க்கு அளிக்கும் படையல்களையும் அதற்கான இயம, நியமங்களையும் ஆகும். இறையை அவர் எப்போதும் ஒன்றே தேவன் எனும் பொருளிலேயே பயன் படுத்துகின்றார்.


குறிப்புரை (Message) :

தேவர்களை வணங்குவதற்கும் மழை பொழிய வேண்டும்.


அருஞ்சொற் பொருள் (Synonyms) :

பூசனை - பூ கொண்டு சாத்திச் செய்யும் பூசை வழிபாடுகள்


ஒப்புரை (References) :

சேக்கிழார், பெரியபுராணம்: 74
சாலியின் கற்றை துற்ற தடவரை முகடு சாய்த்துக்
காலிரும் பகடு போக்கும் கரும்பெரும் பாண்டில் ஈட்டம்
ஆலிய முகிலின் கூட்டம் அருவரைச் சிமயச் சாரல்
மேல் வலங் கொண்டு சூழுங் காட்சியின் மிக்கதன்றே.


ஆண்டாள், திருப்பாவை:
ஓங்கி உலகளந்த உத்தமன் பேர்பாடி
நாங்கள் நம் பாவைக்குச் சாற்றிநீர் ஆடினால்,
தீங்கின்றி நாடெல்லாம் திங்கள்மும் மாரிபெய்து
ஓங்கு பெருஞ்செந்நெ லூடு கயல் உகளப்
பூங்குவளைப் போதில் பொறிவண்டு கண்படுப்ப,
தேங்காதே புக்கிருந்து சீர்த்த முலைபற்றி
வாங்கக் குடம் நிறைக்கும் வள்ளல் பெரும்பசுக்கள்
நீங்காத செல்வம் நிறைந்தேலோ ரெம்பாவாய்.

0 comments:

Post a Comment

குறைகளைச் சுட்டினால் நிறை செய்ய இயலும்...