Saturday, June 20, 2009

திருக்குறள்: 19


அதிகாரம்: 2. வான் சிறப்பு. திருக்குறள்: 19



தானம் தவம் இரண்டும் தங்கா, வியன் உலகம்
வானம் வழங்காது எனின்.


பொழிப்புரை (Meaning) :
தானமும் தவமும் ஆகிய இரண்டும் தங்காது, விரிந்த உலகத்தில் வானம் வழங்காது என்றால்.


விரிவுரை (Explanation) :

வானம் பொய்த்தே வழங்காது போய்விடின், விரிந்த உலகத்தின் பால் தானமும், தவமும் ஆகிய இரண்டு அறங்களும் தங்காது அற்றுப் போய்விடும்.

தானம் எனப்படும் அறம் பிறர் பொருட்டு கருணை கொண்டு செய்வது. தவம் எனும் அறம் தன் பொருட்டு செய்யப் படும் நோன்பு அதாவது எதையேனும் வேண்டிப் பெறுதல். அவை இரண்டும் மனிதனை, உலகத்தை உய்விக்கும் அறங்கள். ஆனால் அவை இரண்டும், உலகம் எவ்வளவுதான் விசாலமானதாக இருப்பினும், மழையின்றிப் போனால் வழக்கொழிந்து, ஒழுகாது போய்விடும்.

தானமு, தவமும் அடிப்படையில் மழையினாலேயே அமைகின்றன என்று அவற்றின் மூலக் காரணத்தைச் சொல்கிறார் வள்ளுவர்.

தானமும், தவமும் உலகின் நல் அறங்கள். அவை நடை பெற வேண்டுமாயின் பொய்க்காத மழை வேண்டும் என்பது கருத்து.


குறிப்புரை (Message) :

மழை இன்றிப் போனால் தானமும், தவமும் கெடும்.


அருஞ்சொற் பொருள் (Synonyms) :

வியன் - விரிந்த, படர்ந்த, பரந்த, அகன்ற, வியத்தகு அளவிலான


ஒப்புரை (References) :


தானமும், தவமும் பற்றிய கருத்துக்கள்:

திருமந்திரம்: 250
ஆர்க்கும் இடுமின் அவரிவர் என்னன்மின்
பார்த்திருந்து உண்மின் பழம்பொருள் போற்றன்மின்
வேட்கை உடையீர் விரைந்தொல்லை உண்ணன்மின்
காக்கை கரைந்துண்ணும் காலம் அறிமினே.


திருமந்திரம்: 251
தாமறி வார்அண்ணல் தாள்பணி வார்அவர்
தாமறி வார்அறம் தாங்கிநின் றார்அவர்
தாமறி வார்சில தத்துவர் ஆவர்கள்
தாமறி வார்க்குத் தமர்பர னாமே.


திருமந்திரம்: 252
யாவர்க்கு மாம்இறை வற்குஒரு பச்சிலை
யாவர்க்கு மாம்பசு வுக்கொரு வாயுறை
யாவர்க்கு மாம் உண்ணும் போதொரு கைப்பிடி
யாவர்க்கு மாம்பிறர்க்கு இன்னுரை தானே.


திருமந்திரம்:254
அழுக்கினை ஓட்டி அறிவை நிறையீர்
தழுக்கிய நாளில் தருமமும்செய்யீர்
விழித்திருந்து என்செய்வீர் வெம்மை பரந்து
விழிக்கஅன்று என்செய்வீர் ஏழைநெஞ்சீரே.


சிவவாக்கியம்:282
கயத்துநீர் இறைக்குறீர் கைகள்சோர்ந்து நிற்பதேன்?
மனத்துள்ஈரம் ஒன்றிலாத மதிஇலாத மாந்தர்காள்;
மனத்துள்ஈரம் கொண்டுநீர் அழுக்கறுக்க வல்லீரேல்
நினைத்திருந்த சோதியும் நீயும்நானும் ஒன்றலோ?

ஔவையார்:
தண்ணீர் நிலநலத்தால் தக்கோர் குணம்கொடையால்
கண்ணீர்மை மாறாக் கருணையால் - பெண்ணீர்மை
கற்பழியா ஆற்றல் கடல்சூழ்ந்த வையகத்துள்
அற்புதமாம் என்றே அறி.

0 comments:

Post a Comment

குறைகளைச் சுட்டினால் நிறை செய்ய இயலும்...