Friday, July 3, 2009

திருக்குறள்: 30


அதிகாரம்: 3. நீத்தார் பெருமை. திருக்குறள்: 30



அந்தணர் என்போர் அறவோர்-மற்று எவ் உயிர்க்கும்
செந் தண்மை பூண்டு ஒழுகலான்.


பொழிப்புரை (Meaning) :
அந்தணர் எனும் துறவியோர் ஒழுக்க நெறி பேணுவோர்; மற்றும் எல்லா உயிரடத்தும் செழுந் தண்மையை, செம்மையான குளிர்ந்த அன்பைப் (கருணையைப்) பூண்டு ஒழுகுவதால்.


விரிவுரை (Explanation) :

எந்த உயிர்க்கும் கருணை கொண்டு, நல் அன்பு கொண்டு, அருள் கொண்டு ஒழுகும் செழுமையான வழக்கத்தை பற்றற்ற ஒழுக்க நெறியோடு மேலும் பேணும் துறவியோரே அந்தணர் எனப்படுவர்.

ஆக பிறவியின் பால் ஒருவர் பெறுவதோ, அல்லது சாதியால் தங்களை சமூகத்தில் அடையாளப் படுத்திக் கொள்வதையோ, அல்லது பிறரின் மேல் வெறுப்பை உமிழுந்து தம்மை உயர்ந்தோர் எனக் கூறிக் கொள்பவரோ, அகத்தே தண்மையற்றவரோ அந்தணர் ஆகார்.

நல் அறங்களை ஒழுகும் துறவியரே, மேலும் எவ்வுயிரின் பாலும், ஓரறிவு உயிரிலிருந்து ஆறறிவு உயிர்வரைக்கும் பேதமில்லாதே இரக்கம் கொண்டு அதாவது அருளுடைமை கொண்டு, தன்னுயிரே போல் அன்பு செய்யும் குண நலம் கொண்டு, அகத்தே தண்மைத் தன்மை கொண்டு, அவர்தம் நெஞ்சில் ஈரம் கொண்டு, குளிர்ச்சியை, அமைதியை, அடக்கத்தைக் கொள்வதைத் தமது வாழ்வின் சீரிய நோன்பாக, செழுமையாக மேற்கொண்டு ஒழுகுபவரே அந்தணர் எனப்படுவர். மற்றவர் அல்லர்.


குறிப்புரை (Message) :

நல் ஒழுக்கமும், எல்லா உயிரிடத்து அன்பும் சிறந்த துறவியருக்கான, அந்தணருக்கான அடிப்படைத் தகுதிகள்.


அருஞ்சொற் பொருள் (Synonyms) :
அந்தணன் - அகத்தே தண்மை கொண்டவன்


ஒப்புரை (References) :


திருமந்திரம்: 224
அந்தணர் ஆவோர் அறுதொழில் பூண்டுளோர்
செந்தழல் ஓம்பிமுப் போதும் நியமஞ்செய்
தந்தவ நற்கரு மத்துநின்று ஆங்கிட்டுச்
சந்தியும் ஓதிச் சடங்கறுப் போர்களே.

திருமந்திரம்: 228
சத்திய மும்தவம் தானவன் ஆதலும்
எய்த்தரும் இந்தியம் ஈட்டியே வாட்டலும்
ஒத்த உயிர்கள் உண்டா யுணர்வுற்று
பெத்தம் அறுத்தலும் ஆகும் பிரமமே.

திருமந்திரம்: 1471
அறிவும் அடக்கமும் அன்பும் உடனே
பிறியா நகர்மன்னும் பேரரு ளாளன்
குறியுங் குணமுங் குரைகழல் நீங்கா
நெறியறி வார்க்கிது நீர்த்தொனி யாமே.

ஔவையார் - மூதுரை: 7
நீரளவே யாகுமாம் நீராம்பல் தான்கற்ற
நூலளவே யாகுமாம் நுண்ணறிவு - மேலைத்
தவத்தளவே யாகுமாந் தான்பெற்ற செல்வம்
குலத்தளவே யாகுங் குணம்.


***

0 comments:

Post a Comment

குறைகளைச் சுட்டினால் நிறை செய்ய இயலும்...