Monday, July 20, 2009

திருக்குறள்: 46

அதிகாரம்

:

5 இல் வாழ்க்கை திருக்குறள்

:

46


அறத்து ஆற்றின் இல்வாழ்க்கை ஆற்றின், புறத்து ஆற்றில்
போஒய்ப் பெறுவது எவன்?


பொழிப்புரை (Meaning) :
அற நெறியில் இல்லற வாழ்க்கையை நடத்த வல்லவனாயின், மற்றைய நெறியின் பால் சென்று பெறுவது யாதோ?


விரிவுரை (Explanation) :
ஒருவன் இல்லற வாழ்க்கையை அற நெறியில் செலுத்துவன் ஆயின், புற நெறியின் பால், அதாவது இல்லறத்துக்குப் புறமாகிய துறவறத்தின் பால் சென்று பெறுவது என்ன? என்றால் ஏதுமில்லை என்பது சொல்லாப் பொருள்.

இல்லறத்தின் கண் நல் ஒழுக்கத்தை மேற்க் கொண்டவற்கு அதைக் காட்டிலும் ஒரு மேன்மையைப் பிற நெறிகள் தர இயலாது என்பது ஈண்டு பெறத் தக்க பொருள்.

அதாவது நல்ல இல்லறத்தின் கண் இருப்போன் துறவறம் மேற்கொண்டு பெறும் சிறப்பான பயன் ஏதும் இல்லை. இரண்டும் ஒன்றுதான் என்பதும் பொருள். இரண்டு முறைகளின் முடிவும் முக்திப் பேறே.

எனவே நன்னெறியில் நின்று ஓம்பும் இல்லறத்தினின்று கிட்டாதது ஒன்றும் துறவறத்தின் மூலம் கிட்டப் போவதில்லை என்பதும் தெளிவு.

வாழ்வின் நிகழ்வுத் திகட்டலால், ஆயாசத்தால் சில சமயங்களில் நாம் பேணும் முறைகளில் இருந்து பேணாத முறை சிறப்பே போலும், தேவலை போலும் தோன்றும். உண்மையில் அவை பெரும்பாலும் பொய்தோற்றமாகவே இருக்கும். அதையே எப்போதும் ’இக்கரைக்கு அக்கரை பச்சை’ என்பது. அங்கேச் சென்றால் மீண்டும் பழைய கரை பச்சையாகத் தோன்றும். அதைப் போலவே இல்லறத்தின் பால் துறவறமும், துறவறத்தின் பால் இல்லறமும் சிறப்பானவை போன்ற தோற்றங்களை ஏற்படுத்தும். அவையெல்லாம் சோர்வுற்ற, திடமற்ற மனதால் விளைபவை. அத்தகைய மனத்தே ஏற்படும் இல்லற வாழ்வின் ஆயாச நிலைக்குத் தெளிவே இக் குறள் மூலம் வள்ளுவர் தருவது.


குறிப்புரை (Message) :
இல்லற வாழ்க்கையை நல் அற நெறியில் நடத்தினாலேயே போதும்; வேறு நெறிகளைப் பின்பற்றத் தேவையே இல்லை.


அருஞ்சொற் பொருள் (Synonyms) :
ஆறு - ஒழுக்கம்
ஆற்றுதல் - நிகழ்த்துதல், நடத்துதல்
போஒய்ப் - போய்ப்


ஒப்புரை (References) :

திருமந்திரம்: 251
தாமறி வார்அண்ணல் தாள்பணி வார்அவர்
தாமறி வார்அறம் தாங்கிநின் றார்அவர்
தாமறி வார்சில தத்துவர் ஆவர்கள்
தாமறி வார்க்குத் தமர்பர னாமே.

திருமந்திரம்: 256
துறந்தான் வழிமுதல் சுற்றமும் இல்லை
இறந்தான் வழிமுதல் இன்பமும் இல்லை
மறந்தான் வழிமுதல் வந்திலன் ஈசன்
அறந்தான் அறியும் அளவறி வாரே.

திருமந்திரம்: 262
அறம்அறி யார்அண்ணல் பாதம் நினையுந்
திறம்அறி யார்சிவ லோக நகர்க்குப்
புறம்அறி யார்பலர் பொய்மொழி கேட்டு
மறம்அறி வார்பகை மன்னிநின் றாரே.

***




0 comments:

Post a Comment

குறைகளைச் சுட்டினால் நிறை செய்ய இயலும்...