Friday, July 31, 2009

திருக்குறள்: 57


அதிகாரம்

: 6

வாழ்க்கைத் துணை நலம்

திருக்குறள்

: 57
Chapter : 6

Wife, Life's Partner

Thirukkural

: 57


சிறை காக்கும் காப்பு எவன் செய்யும்? மகளிர்
நிறை காக்கும் காப்பே தலை.


பொழிப்புரை (Meaning) :
மகளிரைச் சிறை வைத்துக் காக்கும் காப்பு என்ன பயனைத் தரும்? அவர் தம் நெஞ்சில் நிறைந்து நின்று காக்கும் காப்பே தலையானது.


விரிவுரை (Explanation) :
பெண்டிரைக் கணவர் சிறை வைத்துக் காக்கும் காப்பு என்ன பயனைத் தரும்? அவரின் நெஞ்சில் நிறைந்து நின்று அதனால் தற் காப்பில் அவர் தன் கற்பைக் காத்துக் கொள்ளுதலே தலையான காவல் ஆகும்.

கணவன் என்பவன் முன் சொன்னதே போல், கற்பெனும் கண்ணியக் காவலன் என்று இல்லாளுக்கு இருப்பினும் அதற்குப் பொருள் பிறரால் மனைவியருக்குத் துன்பம் வராது காப்பவர் என்று பொருள். அதைத் தவறாகப் புரிந்து கொண்டு இல்லாளை மனைக்குள் வைத்துச் சிறைப்படுத்திக் காவல் காத்து அவர் தம் கற்பைக் காவல் புரிவது என்பது ஒரு பயனையும் தராது. ஏனென்றால் பெண்ணின் கற்பிற்குக் காவல் உண்மையில் அவரது மனத் திடனே. எனவே அம் மனத் திடத்திற்குத் தக்க வகையில் கணவன் நல்லோனாய் அவர்தம் மனம் நிறையும்படி நடந்து கொண்டானேயானால் மடந்தை ஏன் வேறு எண்ணங்களுக்கோ அன்றில் வேறு யாரையோ நாடிச் செல்லப் போகின்றாள்? கணவனே தனக்கு எல்லாம் என்று நெஞ்சம் நிறைந்து அவர் கற்பென்னும் திண்மையுற்று விழங்குவார் என்பது நிச்சயம்.

பெண் பிள்ளைகளை வீட்டில் பூட்டி வைத்து கற்பைக் காப்பாற்ற இயலாது என்பதே உண்மை. அவர்கள் தங்களைக் தாங்களே காத்துக் கொள்ளுமளவிற்கு மனத் திடன் கொள்ளுமாறு செய்தலே இல்லத் தலைவனின் கடமை ஆகும்.

இக்குறளின் மூலம் பெண்ணடிமை செய்தல் ஆகாது என்பதைத் திருவள்ளுவர் தெளிவு செய்கின்றார். உண்மையில் ஒருவருக்குத் தலையாயக் காப்பு என்பது அவர் தம் உள்ளமே, வெளியில் இருந்து பெறுபவையெல்லாம் அதற்கு அப்புறமே.

ஒரு பெண் கற்பு நெறி தவறிச் செல்ல மனத்தே தவறி எண்ணிவிட்டால் எந்தச் சிறையாலும் காவல் காக்கவும் இயலாது, தடுக்கவும் இயலாது. எனவேதான் மனத்திட்பம் கொள்ளுதல் பெண்ணிற்கு அவசியம்.

அதே போல் பெண்ணே தன்னைச் சிறையில் அடைத்துக் கொண்டு உலகத்துடன் ஒன்றி வாழாது இருப்பதும் பயன் தராது. அது பிறத்தியான் தனக்குக் கெடுதலை எளிதாகச் செய்து கொள்ளும்படி அமைய வாய்ப்புண்டு. எனவே தன் உள்ளத்தில் திடத்துடன் விளங்குவதே எந்தச் சூழ்நிலையிலும் தன் கற்பைத் தானே காத்துக் கொள்ளும் வலிமையைப் பெண்ணிற்குக் கொடுக்கும்.


குறிப்புரை (Message) :
மகளிர் தம்மைக் தாமே காத்துக் கொள்ள மனத் திடத்துடன் நிறைந்திருப்பதே கற்பிற்குச் சிறந்த காவல், சிறையில் அடைத்துக் கொள்ளும் காப்பு பயனற்றது.


அருஞ்சொற் பொருள் (Synonyms) :
நிறை - மிகுதி, பூரண, முழுவதும்


ஒப்புரை (References) :

திருமந்திரம்: 435
தெருளும் உலகிற்குந் தேவர்க்கும் இன்பம்
அருளும் வகைசெய்யும் ஆதிப் பிரானுஞ்
சுருளுஞ் சுடருறு தூவெண் சுடரும்
இருளும் அறநின் றிருட்டறை யாமே

திருமந்திரம்: 436
அரைகின் றருள்தரும் அங்கங்கள் ஓசை
உரைக்கின்ற ஆசையும் ஒன்றோடொன் றொவ்வாப்
பரக்கும் உருவமும் பாரகந் தானாய்க்
கரகின் றவைசெய்த காண்டகை யானே.

திருமந்திரம்: 437
ஒளித்துவைத் தேனுள் ளுறவுணர்ந் தீசனை
வெளிப்பட்டு நின்றருள் செய்திடு மீண்டே
களிப்பொடுங் காதன்மை என்னும் பெருமை
வெளிப்பட் டிறைஞ்சினும் வேட்சியு மாமே

***


Thursday, July 30, 2009

திருக்குறள்: 56

அதிகாரம்

: 6

வாழ்க்கைத் துணை நலம்

திருக்குறள்

: 56
Chapter : 6

Wife, Life's Partner

Thirukkural

: 56


தற்காத்து, தற்கொண்டாற் பேணி, தகை சான்ற
சொற்காத்து, சோர்வு, இலாள்-பெண்.


பொழிப்புரை (Meaning) :
தன்னைக் காத்து, தன்னைக் கொண்டவரைப் பேணி, தம்குலப் பெருமை சொல்லும் புகழ் சொற்களைக் காத்து, இல்லறக் கடமைகளில் சோர்வற்றுத் திகழ்பவளே பெண்.


விரிவுரை (Explanation) :
தன்னை உடல் வழியிலும், உள வழியிலும், தனது கற்பையும் காத்துக் கொண்டு, தன்னைக் கொண்டவனையும் பேணிக் காத்து, சமுதாயத்தில் தம் குலத்தின் பெருமை காத்து, இல்லறப் பணிகளில் சோர்விலாது கடமை ஆற்றுபவளே இல்லறத்துக்குரிய பெண்.

இதன் வாயிலாக குடும்பப் பெண்ணிற்கு உரிய அடிப்படைத் தகுதிகளையும், கடமைகளையும் பட்டியலிட்டு, இல்லறத்தில் பெண்மைக்கு உரிய முக்கியத்துவத்தை ஒருங்கே விளக்கியிருக்கிறார் வள்ளுவர்.

பெண் என்பவள் மற்றவரைச் சாராது தனித்து வாழக் கூடாது என்பதே நுட் பொருள். அது தற்கொண்டாற் பேணி என்பதன் மூலம் விளங்கும். தன்னைக் கொண்டவர் என்றினும் சரி அன்றில் தன்னைச் சார்ந்தோர் என்று கொண்டாலும் சரியே. மேலும் பெண் என்பவள் திருமணம் செய்து இல்லறம் செய்ய வேண்டும் என்பதும் நுட் பொருள். திருமணமற்றோ அன்றில் திருமணம் ஆகி மண முறிவு பெற்றோ அன்றில் கணவனை இழந்து விதவை ஆகினும் பெண் தனித்து வாழ்வதைக் காட்டிலும் மற்றோரைச் சார்ந்தே வாழுதல் கடமை ஆகும். இல்லறத்தில் வாழும் வாய்ப்புப் பெற்றோர் இயற்கையாகவே சிறப்புப் பெறுகின்றனர்.

இல்லம் சிறப்புடன் விளங்க வேண்டுமானால் கணவனும், மனைவியும் தத்தம் கடமைகளைச் செய்ய வேண்டும். இங்கே மனைவியின் கடமை தன்னைக் காத்துக் கொள்வதோடு கணவனையும் பேண வேண்டும் என்பது, கூடி வாழ வேண்டிய வாழ்வில் செய்ய வேண்டிய கடமை என்று கொள்ள வேண்டும். அவரவர் தத்தம் காப்பை மட்டுமே கொண்டால் இணக்கமற்ற எந்திரத் தனமான வாழ்வாகிவிடும். எனவேதான் கணவனை பேணுவதென்பது ஒரு கடமை என்றாகிவிட்டால் இல்லறத்தில் ஒருங்கே வாழும் தன்மை பெருகும் என்பது இல்லற நுணுக்கம். பேணுவது என்பது உணவளித்தல், உடல் நலம் காத்தல், மருந்து கொடுத்தல் என்பனவற்றுடன் அவன் மனதிற்குத் துணையாகவும் விளங்குவது.

கணவன் என்பவன் தானே குடும்பத்தைக் காக்க வேண்டியவன். அவன் சம்பாரிப்பது மட்டுமல்ல, குடும்ப நலத்தைப் பேண வேண்டாமா? என்பதெல்லாம் மீண்டும் பொறுப்புக்களைத் தவிர்த்துப் பெண் சோம்பிவிடவும், இல்லறத்தில் கணவனை எந்திரமாக்கி அதனால் இணக்கமற்ற தன்மை உண்டாக்கிவிடக் கூடாதே என்பது தான், பெண்ணிற்கான கடமைகளைச் சொல்ல வேண்டிய அவசியம் ஆனது. ஆனால் இதன் நோக்கம் கணவனை அல்லது இல்லத்தலைவனை அவன் கடமையிலிருந்து விடுத்து சோம்பர் படுத்தத்தானே என்று எண்ணவும் கூடாது. வாழ்வில் இணக்கம் என்பது தலைவனும், தலைவியும் ஒன்றிச் செயல் படுவது, சோம்புவதல்ல.

அன்பும், பண்பும் சேர்ந்து பெண்ணும், ஆணும் இல்லறக் கடமைகளை ஆற்றும்போது அங்கே இனிமை பெருகும். இணக்கம் மலரும். ஒருவரை ஒருவர் சார்ந்த இயற்கை வாழ்வு மலர்ந்து பரிமளிக்கும். நன் மக்கள் பிறப்பும், வளர்ப்பும் நிகழும். கணவன் இல்லறத்துக்குத் தேவையான பொருளீட்டத்தில் கவனத்தையும், குடும்ப நலனின் அக்கறையும், வெளி விவகாரங்களில் அக்கறையும் காட்ட, பெண் குடும்ப உள் விவகாரங்களிலும், மக்களின் வளர்ப்பிலும், குடும்பத்தினரின் உடல் நலத்திலும் அன்றாடப் பணிகளிலும் கவனத்துடன் கணவனுக்கும் ஏதுவாக இருக்க குடும்ப வாழ்வு செழிக்கும். ஒருவருக்கொருவர் விட்டுக் கொடுத்தல், ஒருவர்தம் பணியைக் குறைக்க உதவிக்கொள்ளுதல் என்பவை அடிப்படையில் அன்புடன் நிகழ்ந்தால் இல்லறம் மிகவும் இனிமையுடன் விளங்கும். அன்பு என்பதே அனைவரையும் இணைக்கும் அருமருந்து. நல்ல குடும்பம் உண்மையில் ஒரு பல்கலைக் கழகம்.


குறிப்புரை (Message) :
தன்னையும், தன்னைச் சார்ந்தோரையும், குடும்ப நற்பெயரையும் காப்பதுடன் சோர்வற்று இனிமையுடன் இல்லறத்தை நடத்தவேண்டியது இல்லாளின் கடமையாகும்.


அருஞ்சொற் பொருள் (Synonyms) :
தகை - தகைமை, நன் மதிப்பு, மேன்மை, புகழ், கௌரவம்


ஒப்புரை (References) :

திருமந்திரம்: 438
நின்றது தானாய் நிறைந்த மகேசுரன்
சென்றங் .(1).கியங்கும் அரந்திரு மாலவன்
மன்றது செய்யும் மலர்மிசை மேலயன்
என்றிவ ராகி இசைந்திருந் தானே
.(1). கியங்கி யயந்திரு

திருமந்திரம்: 439
ஒருங்கிய பாசத்துள் உத்தமச் .(1).சித்தன்
இருங்கரை மேலிருந் தின்புற நாடி
வருங்கரை ஓரா வகையினிற் கங்கை
அருங்கரை பேணில் அழுக்கற லாமே
.(1). சித்தின்

திருமந்திரம்: 440
மண்ணொன்று தான்பல நற்கல மாயிடும்
உண்ணின்ற யோனிகட் கெல்லாம் ஒருவனே
கண்ணொன்று தான்பல காணுந் தனைக்காணா
அண்ணலும் இவ்வண்ண மாகிநின் றானே.

ஔவையார். ஆத்திச்சூடி:
சோம்பித் திரியேல். 53
தக்கோன் எனத்திரி. 54
தூக்கி வினைசெய். 59
தேசத்தோடு ஒத்து வாழ். 61.
நன்மை கடைப்பிடி. 65
நாடொப்பன செய். 66
நேர்பட ஒழுகு. 72
நோய்க்கு இடங் கொடேல். 75.
பீடுபெற நில். 79
பெரியாரைத் துணைக்கொள். 82
மனந்தடு மாறேல். 87
மாற்றானுக்கு இடம் கொடேல். (பகைவனுக்கு இடம் கொடேல்) 88
வைகறைத் துயில் எழு. 106

ஔவையார். கொன்றைவேந்தன்: 15
காவல்தானே பாவையற்கு அழகு

ஔவையார். மூதுரை :3
இன்னா இளமை வறுமைவந் தெய்தியக்கால்
இன்னா அளவில் இனிமையவும் - இன்னாத
நாளல்லா நாள்பூத்த நன்மலரும் போலுமே
ஆளில்லா மங்கைக் கழகு.

***

Wednesday, July 29, 2009

திருக்குறள்: 55


அதிகாரம்

: 6

வாழ்க்கைத் துணை நலம்

திருக்குறள்

: 55
Chapter : 6

Wife, Life's Partner

Thirukkural

: 55


தெய்வம் தொழா அள், கொழுநன் - தொழுது எழுவாள்
’பெய்’ என, பெய்யும் மழை.


பொழிப்புரை (Meaning) :
தெய்வத்தைத் தொழாது, கொண்ட கணவனையே தெய்வமெனத் தொழுது துயில் எழுவாள், பெய்யென்றுச் சொன்னால் மழை பெய்யும்.


விரிவுரை (Explanation) :
பிற தெய்வத்தைத் தொழாது, தான் கொண்ட கணவனையே தொழுது துயில் எழுபவள், பெய் என்றால் மழை பெய்யும்.

தூய உள்ளத்தோடு நம்பிக்கைகளின் உச்சத்தில் ஒருவர் சொல்லும் அறம் பலிக்கும். பத்தினியின் சொல் பலிக்கும் என்பதும் நம்பிக்கை. முனிவர்கள் வார்த்தைகள் எப்படிப் பலிக்குமோ, சாபங்கள் எப்படிப் பலிக்குமோ அதைப் போன்றே கணவனையே தெய்வமாகத் தொழும் மாதரசிகளின் வார்த்தைகளும் பலிக்கும். அவை அவர் மழையை விரும்பி வருமாறு பணித்தாலும் நிகழும் என்று நன்மை பயக்கும் அறத்தைச் சொல்கின்றார் வள்ளுவர். உண்மையில் பத்தினிப் பெண்டிர் விடும் சாபமும் பலிக்கும். உதாரணம் கண்ணகி மதுரையை எறித்த காதை பிறகு நிகழ்ந்ததே. ஐம்பெரும் காப்பியத்தில் தலையானதாய், சிலப்பதிகாரமாகத் திகழ்கிறது தமிழில். இது நடந்த கதையென்பதில் யாருக்கும் சந்தேகம் இருக்க முடியாது.

இக்குறள் பெண்ணடிமைக்குச் சொல்லப்பட்டதல்ல மாறாக கற்பின் மேன்மைக்கும், அதன் திறத்திற்கும் நம்பிக்கை தரும் சொல்லே. எனவேதான் கணவன் துயில்கின்ற போழ்து, தான் முன் துயில் நீங்கித் தொழுது எழுவாள் என்றார். இதனால் கணவன் விழித்திருக்கும்போது தொழுதால் அவனிடத்தில் எதிர் பார்ப்புக்களை கொண்டிருக்கலாம் என்று பொருள் படும். எனவே இதயத்துள் கணவனைக் கண்கண்ட தெய்வமெனக் கொண்டு, காலை அவன் பாதங்களைத் தொழுது, அவனைத் தொடருதல் எவ்விதத்திலும் தவறான செய்கையாக இருக்க முடியாது. நாம் முன்னமேயே பாதத்தைத் தொழுதல் என்பதற்கு அவர் வழி நிற்றல் என்ற பொருளில் கடவுள் வாழ்த்தில் விளக்கியிருப்பதை ஒப்பு நோக்கவும்.

இசையால் மழையை வரவழைக்க முடியும்போது, இசைந்தொழுகி வாழும் பத்தினிச் சொல்லுக்கு ஏன் மழை வாராது? நம்பிக்கையில் எதுவும் சாத்தியமே.

தெய்வம் தொழாதே கொண்டவனைத் தொழுது எழுபவள் என்பாள் கணவன் ’பெய் எனப் பெய்யும் மழை’ போல்வாள் என்று கொள்வதிலும் தவறில்லை. ஆனால் அவ்விதம் சொல்வதால் வள்ளுவர் பெண்ணிற்கு அதில் சொல்லவரும் கருத்து யாதும் இருப்பதாய் தெரியவில்லை.


குறிப்புரை (Message) :
கொண்ட கணவனையே தெய்வம் என்று தொழுது ஒழுகும் இல்லத்தரசியின் சொல் பலிக்கும்.


அருஞ்சொற் பொருள் (Synonyms) :
தொழா அள் - தொழாதவள்
கொழுநன் - கொண்ட கணவன், (கை) பற்றியோன், சார்ந்தோன்.


ஒப்புரை (References) :

திருமந்திரம்: 431
உள்ளத் தொருவனை உள்ளுறு சோதியை
உள்ளம்விட் டோ ரடி .(1).நீங்கா ஒருவனை
.(2).உள்ளமுந் தானும் உடனே இருக்கினும்
உள்ளம் அவனை உருவறி யாதே
.(1).நீங்கா தொருவனை
.(2).உள்ளமும் அவனும் உறவா யிருந்தும்

திருமந்திரம்: 432
இன்பப் பிறவி படைத்த இறைவனுந்
துன்பஞ்செய் பாசத் துயருள் .(1).அடைத்தனன்
என்பிற் கொளுவி இசைந்துறு தோற்றசை
முன்பிற் கொளுவி முடிகுவ தாமே
.(1).அடைந்தனன்

திருமந்திரம்: 433
இறையவன் மாதவன் இன்பம் படைத்த
மறையவன் மூவரும் வந்துடன் கூடி
இறையவன் செய்த இரும்பொறி யாக்கை
மறையவன் வைத்த .(1).பரிசறி யாதே
.(1).பரிசறி யாரே

திருமந்திரம்: 434
காண்கின்ற கண்ணொளி காதல்செய் தீசனை
ஆண்பெண் அலியுரு வாய்நின்ற ஆதியை
ஊண்படு நாவுடை நெஞ்சம் உணர்ந்திட்டுச்
சேண்படு பொய்கைச் செயலணை யாரே

ஔவையார். ஆத்திச்சூடி:
காப்பது விரதம். 33
சீர்மை மறவேல். 46
செய்வன திருந்தச் செய். 49
சேரிடம் அறிந்து சேர். 50
தெய்வம் இகழேல். 60.
தொன்மை மறவேல். 63.
மனந்தடு மாறேல். 87
மாற்றானுக்கு இடம் கொடேல். (பகைவனுக்கு இடம் கொடேல்) 88
மேன்மக்கள் சொல்கேள். 94.

***

Tuesday, July 28, 2009

திருக்குறள்: 54


அதிகாரம்

: 6

வாழ்க்கைத் துணை நலம்

திருக்குறள்

: 54
Chapter : 6

Wife, Life's Partner

Thirukkural

: 54


பெண்ணின் பெருந்தக்க யா உள-கற்பு என்னும்
திண்மை உண்டாகப்பெறின்?


பொழிப்புரை (Meaning) :
மனைவியாகிய பெண்ணினும் பெருந் தகைமையானது யாது உள்ளது; கற்பு என்னும் திடமான உறுதிநிலை இருக்குமானால்.


விரிவுரை (Explanation) :
இல் வாழ்க்கையில் இல்லத்தாளிடம் கற்பு எனும் திடமான உறுதிநிலை இருக்கப் பெற்றால், பெண்ணை விடப் பெருமை உடையது ஏது?

இல்லத்தாள் கற்புடைய பெண்ணாக இருத்தல் அவசியம். இல்லை என்றால் அதைவிடச் சிறுமை அன்றில் கேடு இல் வாழ்க்கையில் வேறு ஏது?

வாழ்வியலின், கலாச்சாரத்தின், இல்லறத்தின் ஒழுக்கம் தாய்மையில் இருந்தே துவங்குகின்றது. எனவே பெண்ணிற்குக் கற்பு என்பது மிக அவசியமாகின்றது. கற்பு என்பது
சொற் திறம்பாமை என்று பின்னர் ஔவையாரால் சொல்லப்பட்டாலும், மனம் திறம்பாமை என்பதே உண்மையில் கற்பு என்பது. அதாவது காமத்தின்பால் உளம் கலங்கா உறுதிப்பாடு.

தாம் பெற்ற கணவனோடு மட்டுமே உளத்தாலும், உடலாலும் உடன்பட்டு இல்லற இன்பத்தில் பங்கு பெறுவதே கற்பு எனும் ஒழுக்கமாய், இல்லறத்தின் முக்கிய ஒழுங்காய் போற்றப் படுவது. நற்குடிப் பெண்களுக்குக் கற்பு என்பது அணிகலனாகப் போற்றப்படுவது இல்லத்தின் அனைவரின் வாழ்விற்கும் அது ஆணி வேறாக இருப்பதால்.

கண்ணதாசன் சொல்லும்,
’மனைவி அமைவதெல்லாம் இறைவன் கொடுத்த வரம் பாடலில்’; ’கணவனின் துணையோடு தானே காமனை வென்றாக வேண்டும்’ என்பார். அது கற்புடைப் பெண்களுக்கான இலக்கணம்.

அனைத்துப் பெண்களிடமும் கற்பு என்பது திடமான உண்மை ஒழுங்காக இருக்கும்பட்சத்தில் ஆண்கள் இல்லறத்தை மீறித் தவறு செய்ய இயலாது என்பதும் விளங்கும். எனவே கற்பு என்பது பெண்ணின் அடிப்படை அவசிய ஒழுங்காயும், இல்லற வாழ்க்கையின் அடிப்படைத் தேவையாகவும் உள்ள ஒழுங்காகும். குலத்தின் பெருமை, குடும்பத்தின் பெருமை என்பவற்றின் துவக்கம், அச்சாணி இல்லத்தரசியின் ஒழுக்கமே என்பது வாழ்வியலின், மனிதக் கலாச்சாரத்தின் மேன்மையான பண்பாடாகும்.

கற்பு என்பது கல்போன்றும் கண்ணிய மனத் திறம் என்பதன் சுருக்கம். இவை இருபாலருக்கும் பொது என்றினும், ஒரு வேளை தவறின் இயற்கைத் தண்டனை பெண்ணிற்கே அமைவதால் இது பெண்மைக்கு வலியுறுத்தப்பட்டது. அதாவது இங்கும் கண்ணதாசனின் “
கற்பாம் மானமாம்” எனும் பாடலில் வரும் வரிகளைச் சுட்டிக் காட்டுதல் அவசியமாகின்றது. “வண்டு வந்து தேன் குடித்தால் மலருக்குத்தான் தண்டனை”. எனவே பெண் திருமணத்திற்கு முன்னர் காதல் வயப்பட்டாலும் கற்பு நிலை தவறாது அவனையே மணம் முடித்து இல்லறத்திற்குப் பின்னரேயே கலவி இன்பம் பெறலாம் என்பதே ஒழுங்கு.

ஒழுக்கமற்ற பெண்டிரைச் சோரம் போனவர் என்பார். ஒரு பெண் சோரம் போவதால் குல, குடும்ப, மற்றும் தானும் நாசம் அடைவார் என்பதற்கே கற்பிற்கு இத்தனை முக்கியத்துவம் கொடுக்கப்பட்டுள்ளது. சோரம் என்பது சோகம். ஒரு துளி விடம் பாலை முறித்துப் பாழாக்கி விடும் என்பதே போல், கற்புக் களங்கம் கேட்டை உண்டாக்கிவிடும். கற்பு எனும் எழுதப்படாத விதியை மீறுவது சுலபம். ஆனால் அதை மீண்டும் பெற இயலாது என்பதை உணர்ந்தால் அதன் முக்கியத்துவம் விளங்கும்.

மேலை நாகரீகங்கள் பெண்ணிற்குச் சுதந்திரம் தருவதாயும், பழைமை, பண்டைக் கலாச்சாரங்களே கற்புப் பற்றிப் பேசும் என்பதெல்லாம், கற்பைத் தவற விட்டவர்களின் வாதமாகத்தான் இருக்க முடியும். ஏன் என்றால் ஒவ்வொருவரும் தன் தாய் கற்புடையவராக இருக்க வேண்டும் என்பதில் மட்டும் எவ்வாறு உறுதியுடன் உள்ளார்களோ அதே போன்று இல்லப் பெண்டிர் அனைவரும் ஒழுக்க முற்றோர் என்பதிலும், ஒழுக்கமுற்ற குலம், குடும்பம் என்று பெருமை கொள்ளுவதற்கும் பெண்ணின் பால் கற்பு அவசியம் என்பதை அறிவார்களாக.
பல ஆண்களுடன் வாழ்வதும், திருமண முறிவு செய்து பல மண வாழ்க்கையும் நிம்மதி தருவதாக மேலை நாட்டினரின் நாகரீகத்தில் சொல்லப்படும் வாழ்வு முறை, உண்மையில் போலித்தனமான, தவறவிட்ட வாழ்க்கைக்கான வடிகால்களே. சமூக அமைதிக்காகவும், உடைந்து போன உறவுகளின் வாழ்வு ஆதாரங்களுக்காகவும் அவர்களால் காணப்பட்ட தீர்வு வாழ்வை முறைமையே தவிர அவற்றில் மன அமைதி என்பது இழந்துவிட்ட ஒன்றுக்காக வருந்தாது வாழ முயலும் திறமே அன்றி உண்மையில் இயற்கை அமைதிக்கான வாழ்வு முறையல்ல அது.

மனிதர்கள் மிருகங்களிலிருந்து மேம்பட்டவர்கள். சமூக வாழ்வைச் சமைத்து கலாச்சாரத்தையும், பண்பாட்டையும் வளர்த்தெடுத்தவர்கள். ஒருவனுக்கு ஒருத்தி எனும் உயர் நெறியை ஒழுகினால் உயர் சமுதாயமும், நற் சிந்தனையும், ஆக்கங்களும் உண்டாகும் என்பதில் யாருக்கும் இரு வேறு கருத்து இருக்க இயலாது. மிருகங்களில் ஜோடிகளாக வாழும் இயல்பு கொண்டவையும் உண்டு. மிருகங்களினும் மேன்மையுற்ற பறவைகள் ஜோடிகளாக, ஒன்றுக்கு ஒன்று என்ற வகையில் வாழுகின்றன. ”அன்றில்” பறவை என்பது ஒன்று இல்லை என்றால் இன்னொன்றும் உயிரை மாய்த்துக் கொள்ளும் பறவை இனம். இவற்றின் ஒழுங்குகள் எல்லாம் எழுதப்படாத சட்டமாக மனிதனிற்குப் பாடம் சொல்பவை.

எனவே கற்பு என்பது ஆணாதிக்கத்தின் வெளிப்பாடு என்றெல்லாம் பேசுபவர்கள் இயற்கையின் அடிப்படைத் தத்துவத்தை அறியாமல் பேசுகின்றார்கள் என்பதை அறிந்து உணரவேண்டும். கணவன் எனும் வார்த்தைக்கு கற்பிற்குக் காவலன் என்பது பொருள்.

எனவே ஒரு மேம்பட்ட கலாச்சாரம் என்பது பெண்கள் கற்போடு விளங்குவதும், அவர்க்கு கணவர்கள் காவலர்களாய் இனிதே இல்லறம் செய்தல் வேண்டும் என்பதும் திருவள்ளுவர் காலத்திற்கு மட்டுமல்ல என்றையக் காலத்திற்கும் பொருந்துவதே.

களவின்பம், கற்பின்பம் என்று அத்தியாயங்களில் வள்ளுவர் இன்பத்துப் பாலில் பேசுவதை அறியாதவர்கள், நமது கலாச்சாரத்தில் களவின்பம் உண்டுதானே என்று கற்புக் களங்கத்திற்குத் துணை தேடுவார்கள். உண்மையில் களவின்பம் என்பது கணவனிற்கும், மனைவிக்கும் இடையில் உள்ள புனிதமான, தனிப்பட்ட, மற்றவர்களின் முன் செயத்தகாத செயல்கள் என்று பொருள். எனவே களவின்பம் என்பது திருமணத்திற்கு முன்னர் கொள்ளும் உறவோ அன்றில் பிறன்மனை விளைவதோ அன்றில் பிறனில் மனம் கொள்வதோ அல்ல என்று தெளியவும்.

மேலும் கற்பு நிலை என்பது இரு பாலருக்கும் பொது. ஆணும் மனைவியை அன்றி வேறு பெண்ணைச் சேரல் என்பதும் ஒழுங்கீனமே. ஆயினும் இக்குறள் பேசுவது பெண் கற்பு பற்றியே என அறியவும். அதுவும் திருமணத்திற்குப் பின் பெண் கணவனையன்றி அரசனே ஆயினும் நோக்காப் பண்பாகும். கற்பு என்னும் திண்மை உண்டாகப் பெறின் என்பது, அதை ஒழுகுவதால் தோன்றித் திடப்படுவது எனும் பொருளால் அஃது என்றுமே பேணி வளர்க்கப்படும் ஓர் ஒழுங்கு எனும் வள்ளுவரின் நயம் உணர்வோமாக.


குறிப்புரை (Message) :
இல் வாழ்வில் இல்லத்தாள் கற்போடு இருத்தல் பெண்மைக்கே பெருமை அன்றில் அஃது அனைவருக்கும் சிறுமை, கேடு.


அருஞ்சொற் பொருள் (Synonyms) :
பெருந்தக்க - பெருமை உடைய, பெருந் தகைமையான


ஒப்புரை (References) :

திருமந்திரம்: 476
வகுத்த பிறவியை மாதுநல் லாளுந்
தொகுத்திருள் நீக்கிய சோதி யவனும்
பகுத்துணர் வாக்கிய பல்லுயிர் எல்லாம்
வகுத்துள்ளும் நின்றதோர் மாண்பது வாமே

திருமந்திரம்: 477
மாண்பது வாக வளர்கின்ற .(1).வன்னியுங்
காண்பது ஆண்பெண் அலியெனுங் கற்பனை
பூண்பது மாதா பிதாவழி போலவே
ஆம்பதி செய்தானச் சோதிதன் ஆண்மையே
.(1). வன்னியைக்

திருமந்திரம்: 487
இன்புற நாடி இருவருஞ் .(1).சந்தித்துத்
துன்புறு பாசத்தில் தோன்றி வளர்ந்தபின்
முன்புற நாடி நிலத்தின்முன் தோன்றிய
தொன்புற நாடிநின் றோதலு மாமே

ஔவையார். ஆத்திச்சூடி:
இணக்கமறிந்து இணங்கு. 19
இயல்பலாதன செயேல்.24
அழகலாதன செயேல். 28
காப்பது விரதம். 33
கீழ்மை அகற்று. 35
குணமது கைவிடேல். 36
கூடிப் பிரியேல். 37
கெடுப்பது ஒழி. 38
தீவினை அகற்று. 57
துன்பத்திற்கு இடங்கொடேல். 58.
நொய்ய உரையேல். 74
பழிப்பன பகரேல். 76
பிழைபடச் சொல்லேல். 78.
மனந்தடு மாறேல். 87
மாற்றானுக்கு இடம் கொடேல். (பகைவனுக்கு இடம் கொடேல்) 88
மெல்லினல்லாள் தோள் சேர். (மனையாட்டியைச் சேர்). 93
உத்தமனாயிரு. 102

ஔவையார். கொன்றைவேந்தன்: 14
கற்பெனப் படுவது சொற்றிறம் பாமை

ஔவையார். நல்வழி :16
தண்ணீர் நிலநலத்தால் தக்கோர் குணம்கொடையால்
கண்ணீர்மை மாறாக் கருணையால் - பெண்ணீர்மை
கற்பழியா ஆற்றல் கடல்சூழ்ந்த வையகத்துள்
அற்புதமாம் என்றே அறி.

ஔவையார். நல்வழி :31
இழுக்குடைய பாட்டிற்(கு) இசைநன்று சாலும்
ஒழுக்கம் உயர்குலத்தின் நன்று - வழுக்குடைய
வீரத்தின் நன்று விடாநோய் பழிக்கஞ்சாத்
தாரத்தின் நன்று தனி.

***

Monday, July 27, 2009

திருக்குறள்: 53

அதிகாரம்

:

6 வாழ்க்கைத் துணை நலம் திருக்குறள்

:

53


இல்லது என், இல்லவள் மாண்பு ஆனால்? உள்ளது என்
இல்லவள் மாணாக்கடை?


பொழிப்புரை (Meaning) :
இல்லாதது யாது, இல்லத்தவள் நற்பண்புகள் உடையவள் ஆனால்? உள்ளதுதான் யாது இல்லத்தவள் நற்பண்புகள் இல்லாதவள் ஆனால்?


விரிவுரை (Explanation) :
இல்லத்தவள் மாட்சிமை உள்ளவள் ஆனால் வாழ்க்கையில் இல்லாததுதான் என்ன? அவள் மாண்பற்றவள் ஆனால் அவனது வாழ்வில் இருப்பதுதான் என்ன?

மனைவியிடம் மாட்சிமை இருந்தால் வாழ்க்கை நிறைந்து விழங்கும். அன்றேல் வாழ்வில் யாதுமே இல்லை.

எனவே இல்லத்தவளின் மாண்பே வாழ்வில் முக்கியமானது என்பது பொருள்.

இல்லத்தவளின் மாண்பு என்பது அவளது கற்பு மாத்திரம் அல்ல மேலும் இருக்க வேண்டிய அனைத்து நற் குணங்களையும் குறிக்கும்.

இல்லற வாழ்க்கை இன்பத்திற்கு, ஒன்றித் திகழுவதற்கு, அமைதிக்கு, அன்பைப் பரிமாறி இன்புற நல்ல பண்புகளும் ஒன்றிய மனமும் போதும். இருப்பதற்குள் நிம்மதி கொள்வதற்கும், சிறப்பதற்கும் நல்ல பண்புள்ள மனைவியே போதும்.

நற்பண்பற்ற மனைவியின் நடத்தை என்பது கற்புக் களங்கம் என்பது மட்டுமல்ல. கணவனை இம்சித்தும், துன்புறுத்தியும், ஒத்துழையாமை செய்வதும், இணக்கமற்று இருத்தலும், கொடுமைப் படுத்துவதும், பெண் தன்மை அற்று, மென்மை அற்று நடப்பதும், அடங்காப் பிடாரியாகத் திகழ்வதும், பெண்ணின் இயற்கைக் குணமான இரக்கம் அற்றுத் திகழ்வதும், பொறாமையும், வஞ்சகத்தன்மையும் கொண்டு இல்லத்தைப் பிரிப்பதும், எதிரிகள் என்று உருவாக்குவதும், கூட்டணிகள் அமைப்பதும், கணவனையும் அனைவரையும் அதிகாரம் செய்து திகழ்வதும், இல்லத்திற்குக் கெட்ட பெயர் வரும் செயல்களைச் செய்வதும், பிறந்த வீட்டின் பெருமை என்று சொல்லி புகுந்த வீட்டை இகழ்வதும், அவமானப் படுத்துவதும், பொய் சொல்லுவதும், ஓரம் பேசுதலும், பெருங்குரல் எடுத்துப் புலம்புதலும், மாற்றார் முன் அழுது பிறர் காணும் படி காட்சி அமைப்பதும், இல்லத்தில் தன் விருப்பப்படியே அனைவரும் நடக்க வேண்டும் என்பதும், தான் இட்டதே சட்டம் என்பதுவும், அழுதே காரியம் சாதித்தலும், குறைபாடுகளைப் பேச விடாதலும், பொய் உரைபேசி நம்பவைக்க முயலுதலும், அவ்வாறே பொய் வழக்குகள் ஜோடித்து நீதி மன்றம் செல்லுவதும், கெடுதல் செய்பவரோடு இணங்குதலும், கோபத்தைக் கட்டுப் படுத்தாது அனைவரிடமும் எரிந்து விழுதலும், அன்பற்று நடத்தலும், தான் பெற்ற பிள்ளைகளைத் துன்புறுத்தலும் எனும் அனைத்துக் கெட்ட குணச் செயல்களுமாகும்.

எனவே நற்பண்புகளற்ற, நற் குணமற்ற மனைவியினால் முதலில் வாழ்க்கையில் நிம்மதி போய் விடும். சுற்றம் அறும். கெட்ட பெயர் மிகும். செல்வம் எத்தனை இருப்பினும், பெயர் எத்தனை இருப்பினும் நாளாக நாளாக அனைத்தும் மறைந்து வாழ்வில் வேதனை மிகும். எனவேதான் இல்லத்தவள் சரி இல்லை என்றால் மற்றவை இருந்து பயன் என்ன என்று கேட்டார். எதுவுமே பயன் தராது என்பது அக்கேள்விக்குப் பதில்.

நற்பண்புள்ள மனைவியரில் உதாரணம் சொல்லப்படுவது கண்ணகி, சீதை, காரைக்கால் அம்மையார், திருநீலகண்டரின் மனைவியார், வள்ளுவனாரின் மனைவியாகிய வாசுகி அம்மையார் போன்றோர். அதாவது நற்பண்புள்ள மனைவியர் தெய்வம் போலும் போற்றப் படுகின்றனர் என்பதை அறியவும்.

கண்ணதாசன் சொல்லும்,
’உன் கண்ணில் நீர் வழிந்தால் என் நெஞ்சில் உதிரம் கொட்டுதடி’ பாடலில்

உன்னைக் கரம் பிடித்தேன் வாழ்க்கை ஒளி மயமானதடி
பொன்னை மணந்ததினால் சபையில் புகழும் வளர்ந்ததடி.
...
...
ஆலம் விழுதுகள் போல் உறவு ஆயிரம் வந்துமென்ன
வேறென நீ இருந்தாய் அதில் நான் வீழ்ந்து விடாதிருந்தேன்.
...
பேருக்குப் பிள்ளை உண்டு, பெறும் பேச்சுக்குச் சொந்தமுண்டு
என் தேவையை யார் அறிவார் உன்னைப் போல் தெய்வம் ஒன்றே அறியும்.

என்று தெய்வத்தைப் போன்றவள் மனைவி என்பார். இது வாழ்ந்து சிறந்து, வயோதிகத்தில் மனைவியின் சிறப்பைப் பேசுவதாய் அமைந்த அற்புதமான பாடல்.


குறிப்புரை (Message) :
இல்லத்தவளின் மாண்பே வாழ்வில் மிக முக்கியமானது. இல்லாவிடில் எதுவுமே தேறாது.


அருஞ்சொற் பொருள் (Synonyms) :
மாண்பு - மாட்சிமை, நற் பண்புகள், நற் குணங்கள், பெருமை.
மாணாக்கடை - மாண்பற்ற கடை நிலை


ஒப்புரை (References) :

திருமந்திரம்: 472
பூவுடன் மொட்டுப் பொருந்த அலர்ந்தபின்
காவுடைத் தீபங் கலந்து பிறந்திடும்
நீரிடை நின்ற குமிழி நிழலதாய்ப்
பாருடல் எங்கும் பரந்தெட்டும் பற்றுமே

திருமந்திரம்: 474
கண்ணுதல் நாமங் கலந்துடம் பாயிடைப்
பண்ணுதல் செய்து பசுபாசம் நீங்கிட
எண்ணிய வேதம் இசைந்த பரப்பினை
மண்முத லாக வகுத்துவைத் தானே

திருமந்திரம்: 511
உள்ளத்தின் உள்ளே உணரும் ஒருவனைக்
கள்ளத்தி னாரும் கலந்தறி வார்இல்லை
வெள்ளத்தை நாடி விடும்அவர் தீவினைப்
பள்ளத்தல் இட்டதோர் பத்துள் ளாமே.

ஔவையார். ஆத்திச்சூடி:
இயல்பலாதன செயேல்.24
வஞ்சகம் பேசேல். 27
அழகலாதன செயேல். 28
அறனை மறவேள். 30
கிழமைப்பட வாழ். (உடலும் பொருளும் பிறருக்கென வாழ்). 34
கீழ்மை அகற்று. 35
குணமது கைவிடேல். 36
கூடிப் பிரியேல். 37
கெடுப்பது ஒழி. 38
கேள்வி முயல். (நூற் பொருளைக் கேட்க முயல்) 39
கைவினை கரவேல். 40
கொள்ளை விரும்பேல். 41
சித்திரம் பேசேல். (பொய்மொழிகளைப் பேசேல்) 45.
சுளிக்கச் சொல்லேல். 47
சையெனத் திரியேல். 51
தீவினை அகற்று. 57
துன்பத்திற்கு இடங்கொடேல். 58.
நிலையிற் பிரியேல். 67
நைவினை நணுகேல். 73
நொய்ய உரையேல். 74
பழிப்பன பகரேல். 76
பாம்பொடு பழகேல். 77
பிழைபடச் சொல்லேல். 78.

நன்றி மறவேல்.21
காப்பது விரதம். 33
சான்றோர் இனத்திரு. 43
சீர்மை மறவேல். 46
செய்வன திருந்தச் செய். 49
சேரிடம் அறிந்து சேர். 50
மேன்மக்கள் சொல்கேள். 94.
மோகத்தை முனி. 97
வல்லமை பேசேல். 98
வாதுமுற் கூறேல். 99
வீடுபெற நில். 101
ஊருடன் கூடி வாழ். 103
வெட்டெனப் பேசேல். 104
வேண்டி வினை செயேல். 105
ஓரஞ் சொல்லேல். 108

ஔவையார். கொன்றைவேந்தன்:
ஔவியம் பேசுதல் ஆக்கத்திற்கு அழிவு. 12
குற்றம் பார்க்கில் சுற்றம் இல்லை. 18
தீராக் கோபம் போராய் முடியும். 40
துடியாப் பெண்டிர் மடியில் நெருப்பு.41

ஔவையார். நல்வழி: 23
வேதாளம் சேருமே வெள்ளெருக்குப் பூக்குமே
பாதாள மூலி படருமே - மூதேவி
சென்றிருந்து வாழ்வளே சேடன் குடிபுகுமே
மன்றோரம் சொன்னார் மனை.

***


Sunday, July 26, 2009

திருக்குறள்: 52

அதிகாரம்

:

6 வாழ்க்கைத் துணை நலம் திருக்குறள்

:

52


மனை மாட்சி இல்லாள்கண் இல் ஆயின், வாழ்க்கை
எனைமாட்சித்து ஆயினும், இல்.


பொழிப்புரை (Meaning) :
இல் வாழ்க்கைக்குத் தக்க ஒழுக்கம் மனைவியிடம் இல்லை ஆனால், அவனது வாழ்க்கை எத்துணை மாட்ச்சிகள் உடைத்தாயினும் பயன் இல்லை.


விரிவுரை (Explanation) :
இல்லறத்திற்கு ஏற்ற நற்குணங்கள் மனையாளிடம் இல்லாவிடின் அவனது இல் வாழ்க்கையில் வேறு எத்தனை மாட்ச்சிகள் இருப்பினும் அவை சிறப்பு அற்றதே.

இல்லாளின் ஒழுக்கத்தின் அவசியம் இல்லாளுக்குச் சொல்லப்பட்டது நேர் பொருள். எனவே நற்பண்புள்ள மனைவி அமையுமாறு ஒருவன் நற்குடியில் பிறந்தவளை, குணங்கள் அறிந்து, எச்சரிக்கையுடன் தேர்வு செய்து மணம் புரிந்து, தன் வாழ்க்கை சிறக்க அவள் குணம் குன்றாதவாறு இல் வாழ்வைச் செய்ய வேண்டும் என்பதும் உட் பொருள்.

மனைவி அமைவதெல்லாம் இறைவன் கொடுத்த வரம் என்பதும் இதற்கே.

விவாக ரத்து என்பது இக் காலத்தில் இதிலிருந்து தப்புவதற்கு இரு பாலருக்கும் இருப்பினும், ஒருவரின் வாழ்க்கையில் ஒழுக்கமற்ற மனைவியினால் ஏற்படும் இழுக்கும், அவமானமும், வலியும் சுலபத்தில் அழிந்துவிடுவதில்லையே.

இல்லத்தின் மாண்பு இல்லாதவளாகப் பெண் இருப்பாளேயானால், அவனுக்கு மாத்திரம் அல்ல அவளிற்கும் எத்தனைதான் வேறு மாட்சிகள் இருப்பினும் பயன் இல்லை. இல்லத்தின் மாண்பு அற்றவளாய் மணவிலக்குப் பெற்று பெண் தனித்துச் சென்றினும் பெறப் போவது எந்த மாட்சியும் இல்லை என்பதும் ஆழ்ந்து நோக்கில் விளங்கும்.


குறிப்புரை (Message) :
ஒழுக்கமற்ற மனையாள் உள்ளவனிற்கு இல்லற வாழ்வில் பெருமை என்பதே கிடையது.


அருஞ்சொற் பொருள் (Synonyms) :
மனை மாட்சி - இல்லறப் பாங்கு, இல்லறப் பண்பு, இல் ஒழுக்கம்


ஒப்புரை (References) :

திருமந்திரம்: 452
அறிகின்ற மூலத்தின் மேல்அங்கி அப்புச்
செறிகின்ற ஞானத்துச் செந்தாள் கொளுவிப்
பொறைநின்ற இன்னுயிர் போந்துற நாடிப்
பறிகின்ற பத்தெனும் பாரஞ்செய் தானே

திருமந்திரம்: 453
இன்புறு காலத் திருவர்முன் பூறிய
துன்புறு பாசத் துயர்மனை வானுளன்
பண்புறு காலமும் பார்மிசை வாழ்க்கையும்
அன்புறு காலத் தமைத்தொழிந் தானே

திருமந்திரம்: 456
பூவின் மணத்தைப் பொருந்திய வாயுவுந்
தாவி உலகில் தரிப்பித்த வாறுபோல்
மேவிய சீவனில் மெல்லநீள் வாயுவுங்
கூவி அவிழுங் குறிக்கொண்ட போதே

ஔவையார். ஆத்திச்சூடி:
நன்றி மறவேல்.21
இயல்பலாதன செயேல்.24
வஞ்சகம் பேசேல். 27
அழகலாதன செயேல். 28
அறனை மறவேள். 30
கீழ்மை அகற்று. 35
குணமது கைவிடேல். 36
கூடிப் பிரியேல். 37
கெடுப்பது ஒழி. 38
கேள்வி முயல். (நூற் பொருளைக் கேட்க முயல்) 39
கைவினை கரவேல். 40
கொள்ளை விரும்பேல். 41
சித்திரம் பேசேல். (பொய்மொழிகளைப் பேசேல்) 45.
சுளிக்கச் சொல்லேல். 47
சையெனத் திரியேல். 51
தீவினை அகற்று. 57
துன்பத்திற்கு இடங்கொடேல். 58.
தெய்வம் இகழேல். 60.
தொன்மை மறவேல். 63.
நைவினை நணுகேல். 73
நொய்ய உரையேல். 74
பழிப்பன பகரேல். 76
பாம்பொடு பழகேல். 77
பிழைபடச் சொல்லேல். 78.

ஔவையார். கொன்றைவேந்தன்:
தூற்றும் பெண்டிர் கூற்றெனத் தகும். 42
பையச் சென்றால் வையந் தாங்கும். 67
பொல்லாங்கு என்பவை எல்லாம் தவிர். 68

***

Saturday, July 25, 2009

திருக்குறள்: 51


அதிகாரம்

:

6 வாழ்க்கைத் துணை நலம் திருக்குறள்

:

51


மனைத் தக்க மாண்பு உடையள் ஆகி, தற் கொண்டான்
வளத்தக்காள் வாழ்க்கைத் துணை.


பொழிப்புரை (Meaning) :
இல்லறத்திற்கு தக்க மாட்சிமைகள் உடையவள் ஆகி, தன்னை மணந்து கொண்டவனது பொருள் வளத்திற்குத் தக்கவளாய் வாழ்க்கை நடத்துபவளே இல் வாழ்க்கைக்குச் சிறந்த துணையாவாள்.


விரிவுரை (Explanation) :
இல்லறத்திற்குத் தக்க ஒழுக்கத்துடன், நற் குணங்களுடன், பெருமையுடன, தன்னை மணந்து கொண்டவரின் பொருள் வளத்திற்குத் தக்கவாறு, இல் வாழ்வை நடத்துபவளே, அவளின் கணவனின் வாழ்க்கைக்குத் துணை ஆவாள்.

குடியின் மேன்மை அறியாமலோ, ஒழுக்கங் கெட்டோ அன்றில் கணவனின் பொருள் நிலையை மீறிச் செயல்படுபவளோ கணவனிற்குத் துணையாக இருக்க முடியாது என்பது தெளிவு. இல்லத்தவள் மனை மாட்சிக்குக் கணவனிற்குத் துணை நிற்க வேண்டுமே தவிர ஊறு செய்வது அவர்களது இல்லற வாழ்விற்குக் கேடாகும். வருவாய்க்கு மீறிச் செலவு செய்பவர் நிச்சயம் துன்பமடைவர் என்பது சொல்லாப் பொருள்.

பெண்ணானவள் தான் செல்வச் சீமான் வீட்டில் பிறந்தவளாக இருந்தாலும் சரி, அன்றில் ஏழை வீட்டில் பிறந்தவளாக இருப்பினும் புகுந்த வீட்டின் பெருமைக்கும் வளத்திற்கும் தக்கபடி தன்னை மாற்றிக்கொண்டு வாழக் கடமைப்பட்டவள். கணவனின் வளமோ அன்றில் புகுந்த வீட்டின் வளமோ தனக்கு உகந்ததல்ல என்று எண்ணுபவள் அத் திருமணத்தைத் தவிர்த்தல் நலம். மாறாக பிறந்த வீட்டின் பெருமை பேசி, கணவனின் பொருள் வளத்தை மீறியோ, குறைத்தோ செயல் படும் பெண் கணவனிற்கு உகந்த துணை அல்ல. அந்த இல்லறம் இனிமையாக விளங்காது.

இல்லம் எனப்படுவது வெறும் கட்டிடத்தை அல்ல, அங்குள்ள தலைவனையும், இல்லத்தரசியையும், அவர் தம் மக்களையும், இதுகாறும் அவர்களின் குடும்பம் பெற்ற நற்பெயரையும் குறிக்கும் சொல். எனவே இதில் எதற்கும் ஊறு விளைவிக்காது, கண்ணியத்துடன், பெருமையைக் குன்றச் செய்யாது எல்லா நல் அறங்களையும் ஒழுகி, கணவனின் வருவாய்க்குள் குடும்பம் நடத்துபவளே இல்லத் தலைவனிற்குத் துணையாக இருக்க முடியும். அவ்வாறு இருப்பதும் அவளுக்குத்தானே பெருமை.


குறிப்புரை (Message) :
கணவனின் வருமானத்திற்குள், மாண்புடன் இல்லறத்தை நடத்தத் தெரிந்தவளே, அவனிற்குப் பொருத்தமான துணையாவாள்.


அருஞ்சொற் பொருள் (Synonyms) :
மாண்பு - மாட்சிமை, ஒழுக்கமுடைமை


ஒப்புரை (References) :

திருமந்திரம்: 448
அகன்றான் .(1).அகலிடம் ஏழுமொன் றாகி
இவன்றா னெனநின் றெளியனும் அல்லன்
சிவன்றான் பலபல .(2).சீவனும் ஆகி
நவின்றான் உலகுறு நம்பனு மாமே
.(1). கடலிடம்
.(2). சீவரும்

திருமந்திரம்: 449
உண்ணின்ற சோதி உறநின்ற ஓருடல்
விண்ணின் றமரர் விரும்பும் விழுப்பொருள்
மண்ணின்ற வானோர் புகழ்திரு மேனியன்
கண்ணின்ற மாமணி .(1).மாபோத மாமே
.(1). மாபோதகமே

திருமந்திரம்: 450
ஆரும் அறியாத அண்டத் திருவுருப்
பார்முத லாகப் பயிலுங் கடத்திலே
நீரினிற் பால்போல நிற்கின்ற நேர்மையைச்
சோராமற் காணுஞ் சுகம்அறிந் தேனே

ஔவையார். ஆத்திச்சூடி:
ஒப்புரவு ஒழுகு (உலக நடையை அறிந்து ஒழுகு). 10
ஞயம்பட உரை (இனிமையுடன் பேசு). 17
இணக்கமறிந்து இணங்கு. 19
அறனை மறவேள். 30
குணமது கைவிடேல். 36
சீர்மை மறவேல். 46
செய்வன திருந்தச் செய். 49
நன்மை கடைப்பிடி. 65
நாடொப்பன செய். 66
பொருள்தனைப் போற்றி வாழ். 85

ஔவையார். கொன்றைவேந்தன்:
ஒருவனைப் பற்றி யோரகத் திரு. 10
அஃகமும் காசும் சிக்கெனத் தேடு 13
வளவன் ஆயினும் அளவறிந்து அழித்து உண். 81


ஔவையார். நல்வழி : 25
ஆன முதலில் அதிகம் செலவானால்
மானம் இழந்து மதிகெட்டுப் - போனதிசை
எல்லார்க்கும் கள்ளனாய் ஏழ்பிறப்பும் தீயனாய்
நல்லார்க்கும் பொல்லனாம் நாடு.

ஔவையார். நல்வழி : 34
கல்லானே ஆனாலும் கைப்பொருள் ஒன் றுண்டாயின்
எல்லாரும் சென்றங் கெதிர்கொள்வர் - இல்லானை
இல்லாரும் வேண்டாள் மற் றீன்றெடுத்த தாய்வேண்டாள்
செல்லா(து) அவன் வாயிற் சொல்.

***

அதிகாரம்: 6. வாழ்க்கைத் துணை நலம்.

அதிகாரம்: 6. வாழ்க்கைத் துணை நலம்



இல்லற வாழ்விற்கு இல்லத் தலைவனும், தலைவியும் ஒருவருக் கொருவர் துணைவர் ஆவர். இல் வாழ்க்கை பற்றி சென்ற அதிகாரத்தில் பேசியவர், ஆதலின் இங்கே அடுத்ததாக இல் வாழ்வின் துணை நலம் பற்றிப் பேச விளைகின்றார்.

உலகில் இல்லற வாழ்வின் பங்குதாரரை துணைவர் என்றும், அதன் குணத்தை இங்கே துணை நலம் என்றும் விளக்குகின்றார். இல்லத் தலைவனிற்கு அவன் வாழ்வில் துணை நிற்கும் பெண்ணின் பெருமை இல்லத்திற்கு அரசியென்றும், மனையாள் என்றும் குறிக்கப்படும். அத்தகைய துணைவியாரின் குண நலன்களே இங்கே பேசப் படுகின்றது.


ஒப்புரை (Reference)
ஔவையார். மூதுரை: 21
இல்லா ளகத்திருக்க இல்லாத தொன்றில்லை
இல்லாளும் இல்லாளே யாமாயின் - இல்லாள்
வலிகிடந்த மாற்ற முரைக்குமேல் அவ்வில்
புலிகிடந்த தூறாய் விடும்.

ஔவையார். நல்வழி: 24
நீறில்லா நெற்றிபாழ் நெய்யில்லா உண்டிபாழ்
ஆறில்லா ஊருக்(கு) அழகுபாழ் - மாறில்
உடன்பிறப் பில்லா உடம்புபாழ் பாழே
மடக்கொடி இல்லா மனை.



குறிப்பு:

இந்த அதிகாரத்தில் உள்ள குறள்களுக்கு மற்றவர்களிடம் இருந்து அதிகம் மாறுபட்ட விளக்கங்கள் தரப்பட்டுள்ளது என்பதை அறிந்து நோக்கவும்.

Friday, July 24, 2009

அதிகாரம்: 5. இல்வாழ்க்கை - முடிவுரை


அதிகாரம்

:

5 இல்வாழ்க்கை முடிவுரை


அத்தியாயத்தில் பெற்றவை:

41. இல்லறத்தை மேற் கொண்டவரே மற்றையோர் அனைவருக்கும் நல்லறத்தின் கண் துணை
ஆவார்.

42. துறவிகளுக்கும், வறியவருக்கும், இறந்தாருக்கும் இல்லற வாழ்வினனே துணை ஆக இருக்க
வேண்டியவன்.

43. முன்னோர், தெய்வம், விருந்தினர், சுற்றத்தார் மற்றும் தன்னைப் பேணுதல் இல்லறம்
ஒழுகுபவரின் தலையாய கடமை.

44. பகுத்து உண்ணுதல் எப்போதும் நிறைவான வாழ்வைத் தரும்.

45. இல்லற வாழ்க்கையில் பண்பும், பயனும் எனப்படுவது எல்லோரிடத்தும் அன்பும், நற்
செயல்களையும் உடையவராக இருத்தலே.

46. இல்லற வாழ்க்கையை நல் அற நெறியில் நடத்தினாலேயே போதும்; வேறு நெறிகளைப்
பின்பற்றத் தேவையே இல்லை.

47. ஒழுங்கான இல்லற வாழ்வே வீடு பேற்றினைத் தரும் சிறந்த வழி.

48. அறம் தவறாத நல் இல்லற ஒழுக்கமே மேன்மை பொருந்திய தவம்.

49. நல் அறமான இல் வாழ்வில் யாரையும் பழித்தல் கூடாது; யாரும் பழிக்கும்படி நடக்கவும்
கூடாது.

50. முறையான இல் வாழ்வைச் சிறப்பாக மேற்கொண்டவர் அனைவராலும், தெய்வம் போல்
போற்றப்படுவர்.



குறிப்புரை (Message) :
இல்லற வாழ்க்கையே ஏனையோருக்கும் துணை தருவது, மேன்மையானது. இல்லறம் மேற்கொண்டவரே அனைவருக்கும் துணையாவர், அனைவரையும் பேணுதல் அவரது கடமை. பகுத்து உண்ணுதல், அன்பும், அறனும் கொள்ளுதல், ஒழுக்கத்துடன் வாழுதல் அவருக்குப் பெருமையையும், வீடு பேற்றையும், தெய்வத்தை ஒக்கும் புகழையும் நல்கும்.


***

திருக்குறள்: 50

அதிகாரம்

:

5 இல்வாழ்க்கை திருக்குறள்

:

50


வையத்துள் வாழ்வாங்கு வாழ்பவன் வான் உறையும்
தெய்வத்துள் வைக்கப்படும்.


பொழிப்புரை (Meaning) :
வையகத்தில் இல்லறத்தில் வாழ்வாங்கு வாழ்பவன், வான் உறையும் தெய்வத்துள் ஒன்றாக வைக்கப்படுவார். தெய்வத்திற்கு இணையாக போற்றப் படுவார்.


விரிவுரை (Explanation) :
இவ்வுலகத்தில் இல்லறத்தை ஒழுகி மிகச் சிறப்போடு வாழ்கின்றவன், இந்த் உலகத்திலேயே, வானுலகத்துத் தெய்வத்திற்கு நிகராகப் போற்றப் படுவார்.

அதாவது துறவறம் மேற்கொண்டவர் பெறும் மேம்பாடுகளைக் காட்டிலும், இல்லறத்தை அதன் இயல்புகளோடு, சிறப்போடு ஒழுகி வாழ்பவர் வான் உறைத் தெய்வம் போல் போற்றும்படி மதிக்கப்படுவார் என்கின்றார்.

எனவே சிறப்பான இல்லற வாழ்வானது தெய்வ நிலையையும் தரும் வல்லமை கொண்டது என்பது பொருள்.


குறிப்புரை (Message) :
முறையான இல் வாழ்வைச் சிறப்பாக மேற்கொண்டவர், அனைவராலும் தெய்வம் போல் போற்றப்படுவர்.


அருஞ்சொற் பொருள் (Synonyms) :
வையம் - உலகம்
வாழ்வாங்கு - வாழும் முறைப்படி, வாழும் இயல்புகளோடு
உறையும் - வாழும், நிலைத்திருக்கும்


ஒப்புரை (References) :

திருமந்திரம்: 257
தான்தவம் செய்வதாம் செய்தவத்து அவ்வழி
மான்தெய்வ மாக மதிக்கும் மனிதர்கள்
ஊன் தெய்வ மாக உயிர்க்கின்ற பல்லுயிர்
நான்தெய்வம் என்று நமன்வரு வானே.

திருமந்திரம்: 259
பற்றது வாய்நின்ற பற்றினைப் பார்மிசை
அற்றம் உரையான் அறநெறிக் கல்லது
உற்று உங்களால் ஒன்றும் ஈந்தது வேதுணை
மற்றண்ணல் வைத்த வழிகொள்ளு மாறே

திருமந்திரம்: 269
செல்வம் கருதிச் சிலர்பலர் வாழ்வெனும்
புல்லறி வாளரைப் போற்றிப் புலராமல்
இல்லங் கருதி இறைவனை ஏத்துமின்
வில்லி இலக்கெய்த விற்குறி யாமே.

திருமந்திரம்: 285
கண்டேன் கமழ்தரு கொன்றையி னான்அடி
கண்டேன் கரியுரி யான்தன் கழலிணை
கண்டேன் கமல மலர்உறை வானடி
கண்டேன் கழலதென் அன்பினுள் யானே.

ஔவையார். நல்வழி: 8
ஈட்டும் பொருண்முயற்சி எண்ணிறந்த வாயினும் ஊழ்
கூட்டும் படியன்றிக் கூடாவாம்-தேட்டம்
மரியாதை காணு மகிதலத்தீர் கேண்மின்
தரியாது காணுந் தனம்.

ஔவையார். நல்வழி: 21
நீரு நிழலு நிலம்பொதியும் நெற்கட்டும்
பேரும் புகழும் பெருவாழ்வும் - ஊரும்
வருந்திருவும் வாழ்நாளும் வஞ்சமிலார்க்கு என்றுந்
தருஞ்சிவந்த தாமரையாள் தாள்.

***

Thursday, July 23, 2009

திருக்குறள்: 49

அதிகாரம்

:

5 இல்வாழ்க்கை திருக்குறள்

:

49


அறன் எனப்பட்டதே இல்வாழ்க்கை; அஃதும்
பிறன் பழிப்பது இல்ஆயின் நன்று.


பொழிப்புரை (Meaning) :
சிறந்த அறன் எனப்பட்டதே இல்லற வாழ்க்கை; அதுவும் பிறர் பழித்தல் இல்லை என்றால் மிக நன்று.


விரிவுரை (Explanation) :
இரு வகை அறனுள்ளும், சிறந்த அறன் எனப்பட்டதே இல்லற வாழ்க்கை. அத்தகைய வாழ்விலும் பிறரைப் பழிப்பது இல்லை என்று ஆனால் அஃது மிகவும் நன்று.

அதாவது தாம் நல்லறமாகிய இல்லறத்தில் ஒழுகுகிறோம் என்பதற்காக, மற்றைய அறத்தோரை இழிவு செய்தலோ, பழித்தலோ நன்றன்று. பழித்தல் என்பது தகாத ஒழுங்காகும். எனவே அது இல்லாத இல்லற வாழ்வு மிகச் சிறந்ததாகும்.

மேலும் பிறர் பழிக்கும்படியான இல் வாழ்வைக் கொள்ளாதிருத்தலும் ஆகும். அதாவது பழிக்கு அஞ்சி நல்லற வாழ்வையே, ஒழுக்கமான வாழ்வையே இல்லறத்தில் மேற் கொள்ளுவதுமாகும். பிறர் பழிக்கும் படியான வாய்ப்பை இல்லற வாழ்வில் ஏற்படாதவாறு நடந்தால் இல் வாழ்விலும் அது மிகவும் நன்றானதாகும்.

எனவே இல்வாழ்வில் பழித்தல் என்பதே கூடாது. அதாவது யாரையும் பழித்தலும், பழிக்கப் படுதலும் கூடாது. பிறர் நமக்கு என்ன செய்ய வேண்டும் என்று விரும்புகின்றோமோ அதையே நாம் முதலில் கடைப் பிடித்தல் அவசியம். எனவே பிறரைப் பழியாது மாறாக அவரிடம் காணும் நல்லதைப் போற்றிப் பாராட்டும் பண்பை, இனியவை கூறலை நல்லறமாக ஒழுகுவோமாக.


குறிப்புரை (Message) :
நல் அறமான இல் வாழ்வில் யாரையும் பழித்தல் கூடாது; யாரும் பழிக்கும்படி நடக்கவும் கூடாது.


அருஞ்சொற் பொருள் (Synonyms) :
பழித்தல் - பழி சொல்லுதல், இழிவு பேசுதல், ஓரம் பேசுதல், கிண்டல் செய்தல்.


ஒப்புரை (References) :

திருமந்திரம்: 330
மயங்குந் தியங்கும் கள்வாய்மை அழிக்கும்
இயங்கும் மடவார்தம் இன்பமே எய்தி
முயங்கும் நயங்கொண்ட ஞானத்து முந்தார்
இயங்கும் இடையறா ஆனந்தம் எய்துமே.

திருமந்திரம்: 331
இராப்பகல் அற்ற இடத்தே இருந்து
பராக்கற ஆனந்தத் தேறல் பருகார்
இராப்பகல் அற்ற இணையடி இன்பத்து
இராப்பகல் மாயை இரண்டிடத் தேனே.

திருமந்திரம்: 332
சத்தியை வேண்டிச் சமயத்தோர் கள்ளுண்பர்
சத்தி அழிந்தது தம்மை மறத்தலால்
சத்தி சிவஞானம் தன்னில் தலைப்பட்டுச்
சத்திய ஞானஆ னந்தத்திற் சார்தலே.

ஔவையார். நல்வழி: 25
மானக் குலங்கல்வி வண்மை அறிவுடைமை
தானந் தவம் உயர்ச்சி தாளாண்மை - தேனின்
கசிவந்த சொல்லியர்மேல் காமுறுதல் பத்தும்
பசிவந் திடப்பறந்து போம்.

***




Wednesday, July 22, 2009

திருக்குறள்: 48


அதிகாரம்

:

5 இல்வாழ்க்கை திருக்குறள்

:

48


ஆற்றின் ஒழுக்கி, அறன் இழுக்கா இல்வாழ்க்கை
நோற்பாரின் நோன்மை உடைத்து.


பொழிப்புரை (Meaning) :
ஒழுக்கத்தை ஒழுகி, அறம் வழுவாத இல்லற வாழ்க்கையானது, தவம் செய்வோரின் நோன்பை விட மேன்மை உடையது.


விரிவுரை (Explanation) :
நல் ஒழுக்கத்தின் பால் ஒழுகி நின்று, அறம் வழுவாது நடத்தப் படும் இல்லற வாழ்க்கை என்பது தவம் செய்வோரின் தவத்தினும்; தவ நோன்பினும் மேன்மை உடையது.

அதாவது ஒழுக்கம் தவறாத இல்லற நல்லறமானது தவத்தோரின் தவத்தைக் காட்டிலும் மேன்மை உடைய தவமாகும்.

இரைச்சல்களுக்கு நடுவே அமைதி காணும் இல்லறமே மிகச் சிறந்த தவமாகும். உலக இயல்பு வாழ்வு அலைகளுக்கு நடுவிலும் அமைதி, ஆக்கம், பொறுமை, சகிப்புத்தன்மை, நல் ஒழுக்கம், கடமை என்று பண்படுத்தப் படும் இல்லறத்தானின் வாழ்க்கையே தவமாக, துறவியரின் தவங்களைக் காட்டிலும் சிறப்பானது.


குறிப்புரை (Message) :
அறம் தவறாத நல் இல்லற ஒழுக்கமே மேன்மை பொருந்திய தவம்.


அருஞ்சொற் பொருள் (Synonyms) :
ஆறு - ஒழுக்கம்
இழுக்கா - வழுவா, தவறா


ஒப்புரை (References) :

திருமந்திரம்: 201
ஆத்த மனையாள் அகத்தில் இருக்கவே
காத்த மனையாளைக் காமுறுங் காளையர்
காய்ச்ச பலாவின் கனியுண்ண மாட்டாமல்
ஈச்சம் பழத்துக்கு இடருற்ற வாறே.

திருமந்திரம்: 202
திருத்தி வளர்த்ததோர் தேமாங் கனியை
அருத்தமென் றெண்ணி அறையில் புதைத்துப்
பொருத்தம் இலாத புளிமாங் கொம்பேறிக்
கருத்தறி யாதவர் காலற்ற வாறே.

திருமந்திரம்: 203
பொருள்கொண்ட கண்டனும் போதத்தை யாளும்
இருள்கொண்ட மின்வெளி கொண்டுநின் றோரும்
மருள்கொணட மாதர் மயலுறு வார்கள்
மருள்கொண்ட சிந்தையை மாற்றகில் லாரே.

திருமந்திரம்: 265
வழிநடப் பாரின்றி வானோர் உலகம்
கழிநடப் பார்நடந் தார்கருப் பாரும்
மழிநடக் கும்வினை மாசற ஓட்டிட்டு
வழிநடப் பார்வினை ஓங்கிநின் றாரே.

திருமந்திரம்: 283
புணர்ச்சியுள் ஆயிழை மேல்அன்பு போல
உணர்ச்சியுள் ஆங்கே ஒடுங்கவல் லாருக்கு
உணர்ச்சியில் லாது குலாவி உலாவி
அணைத்தலும் இன்பம் அதுவிது வாமே.

ஔவையார். கொன்றைவேந்தன்: 78
மைவிழியார் தம் மனை அகன்று ஒழுகு.

***

Tuesday, July 21, 2009

திருக்குறள்: 47


அதிகாரம்

:

5 இல் வாழ்க்கை திருக்குறள்

:

47


இயல்பினான் இல்வாழ்க்கை வாழ்பவன் என்பான்
முயல்வாருள் எல்லாம் தலை.


பொழிப்புரை (Meaning) :
இல் வாழ்க்கையை நல் இயல்பான நன் நெறிகளோடு வாழ்பவன் என்போன், முக்தியாகிய வீடு பேற்றை முயல்வோர் எல்லாருள்ளும் தலைமையானவன் ஆவான்.


விரிவுரை (Explanation) :
இல்லற வாழ்க்கையை அதன் நல் இயல்போடு; நல் அறத்தோடு வாழ்கின்றவன், வீடு பேறு முக்தியினை முயல்கின்ற அனைவருள்ளும் தலைமை ஆனவன் ஆவான். அதாவது இல் வாழ்வை நல் இயல்போடு வாழும் முறைமையே முக்தியைப் பெறும் வழிகளில் தலை சிறந்தது என்பது பொருள்.

முக்தியினைப் பெறுவதே மனித வாழ்வின் நோக்கம். எனவே அதுவே அனைவரின் முயற்சியும் ஆகும். ஆயின் அதை அனைத்தையும் துறந்து முயற்சிப்பதைக் காட்டிலும் அன்றில் இல்லறமற்ற வேறு எத்தகைய முயற்சிகளைக் காட்டிலும், நல் இல்லற வாழ்வோடு முயற்சிப்பதே மிகவும் சிறப்பு மிக்கதாகும். பற்றறுத்தவர்கள், பிரம்மச்சாரிகள், தவசிகள் இவர்கள் எல்லாரையும் விட இல்லறத்தானின் முயற்சியே தலை சிறந்தது என்பது பொருள்.

காரணம் இல் வாழ்வானே இயற்கை நியதியாகிய மனிதத் தொடர்ச்சிக்கு வித்திடுபவன். அத்தோடு இல் வாழ்க்கையையே தவமாகச் செய்கின்றவன். சந்தடி வாழ்க்கையை ஒதுக்கி அமைதி தேடப் பற்றறுக்காமல், வாழ்வியல் பிரச்சினைகளின் ஊடே அமைதியைப் பேணி வாழ்வதே இயல்பான வாழ்க்கை முறை. அம்முறையிலும் ஒழுக்கத்துடன் திகழ்ந்து அனைவரையும் பேணி, தன்னை நம்பியோருக்கும் வாழ்வு அளித்து, மற்றையோரைக் காட்டிலும் அதிகச் சுமைகளைத் தாங்கி செயல்படுகின்றான். எனவே அவன் முக்திக்கு முயலுவானே ஆகில் அவனுக்கே முன்னுரிமை என்பது நியாயம் தானே.


குறிப்புரை (Message) :
ஒழுங்கான இல்லற வாழ்வே வீடு பேற்றினைத் தரும் சிறந்த வழி.


அருஞ்சொற் பொருள் (Synonyms) :
இயல்பினான் - இயல்பை ஒழுகினான்


ஒப்புரை (References) :

திருமந்திரம்: 326
காமமும் கள்ளும் கலதிகட் கேயாகும்
மாமல மும்சம யத்துள் மயலுறும்
போமதி யாகும் புனிதன் இணையடி
ஓமய ஆனந்தத் தேறல் உணர்வுண்டே.

திருமந்திரம்: 327
வாமத்தோர் தாமும் மதுவுண்டு மாள்பவர்
காமத்தோர் காமக்கள் ளுண்டே கலங்குவர்
ஓமத்தோர் உள்ளொளிக் குள்ளே உணர்வர்கள்
நாமத்தோர் அன்றே நணுகுவர் தாமே.

திருமந்திரம்: 328
உள்ளுண்மை ஓரார் உணரார் பசுபாசம்
வள்ளன்மை நாதன் அருளினன் வாழ்வுறார்
தெள்ளுண்மை ஞானச் சிவயோகம் சேர்வுறார்
கள்ளுண்ணும் மாந்தர் கருத்தறி யாரே.

திருமந்திரம்: 329
மயக்கும் சமய மலமன்னு மூடர்
மயக்கு மதுவுண்ணும் மாமூடர் தேரார்
மயக்குறு மாமாயை மாயையின் வீடு
மயக்கில் தெளியின் மயக்குறும் அன்றே.

***

Monday, July 20, 2009

திருக்குறள்: 46

அதிகாரம்

:

5 இல் வாழ்க்கை திருக்குறள்

:

46


அறத்து ஆற்றின் இல்வாழ்க்கை ஆற்றின், புறத்து ஆற்றில்
போஒய்ப் பெறுவது எவன்?


பொழிப்புரை (Meaning) :
அற நெறியில் இல்லற வாழ்க்கையை நடத்த வல்லவனாயின், மற்றைய நெறியின் பால் சென்று பெறுவது யாதோ?


விரிவுரை (Explanation) :
ஒருவன் இல்லற வாழ்க்கையை அற நெறியில் செலுத்துவன் ஆயின், புற நெறியின் பால், அதாவது இல்லறத்துக்குப் புறமாகிய துறவறத்தின் பால் சென்று பெறுவது என்ன? என்றால் ஏதுமில்லை என்பது சொல்லாப் பொருள்.

இல்லறத்தின் கண் நல் ஒழுக்கத்தை மேற்க் கொண்டவற்கு அதைக் காட்டிலும் ஒரு மேன்மையைப் பிற நெறிகள் தர இயலாது என்பது ஈண்டு பெறத் தக்க பொருள்.

அதாவது நல்ல இல்லறத்தின் கண் இருப்போன் துறவறம் மேற்கொண்டு பெறும் சிறப்பான பயன் ஏதும் இல்லை. இரண்டும் ஒன்றுதான் என்பதும் பொருள். இரண்டு முறைகளின் முடிவும் முக்திப் பேறே.

எனவே நன்னெறியில் நின்று ஓம்பும் இல்லறத்தினின்று கிட்டாதது ஒன்றும் துறவறத்தின் மூலம் கிட்டப் போவதில்லை என்பதும் தெளிவு.

வாழ்வின் நிகழ்வுத் திகட்டலால், ஆயாசத்தால் சில சமயங்களில் நாம் பேணும் முறைகளில் இருந்து பேணாத முறை சிறப்பே போலும், தேவலை போலும் தோன்றும். உண்மையில் அவை பெரும்பாலும் பொய்தோற்றமாகவே இருக்கும். அதையே எப்போதும் ’இக்கரைக்கு அக்கரை பச்சை’ என்பது. அங்கேச் சென்றால் மீண்டும் பழைய கரை பச்சையாகத் தோன்றும். அதைப் போலவே இல்லறத்தின் பால் துறவறமும், துறவறத்தின் பால் இல்லறமும் சிறப்பானவை போன்ற தோற்றங்களை ஏற்படுத்தும். அவையெல்லாம் சோர்வுற்ற, திடமற்ற மனதால் விளைபவை. அத்தகைய மனத்தே ஏற்படும் இல்லற வாழ்வின் ஆயாச நிலைக்குத் தெளிவே இக் குறள் மூலம் வள்ளுவர் தருவது.


குறிப்புரை (Message) :
இல்லற வாழ்க்கையை நல் அற நெறியில் நடத்தினாலேயே போதும்; வேறு நெறிகளைப் பின்பற்றத் தேவையே இல்லை.


அருஞ்சொற் பொருள் (Synonyms) :
ஆறு - ஒழுக்கம்
ஆற்றுதல் - நிகழ்த்துதல், நடத்துதல்
போஒய்ப் - போய்ப்


ஒப்புரை (References) :

திருமந்திரம்: 251
தாமறி வார்அண்ணல் தாள்பணி வார்அவர்
தாமறி வார்அறம் தாங்கிநின் றார்அவர்
தாமறி வார்சில தத்துவர் ஆவர்கள்
தாமறி வார்க்குத் தமர்பர னாமே.

திருமந்திரம்: 256
துறந்தான் வழிமுதல் சுற்றமும் இல்லை
இறந்தான் வழிமுதல் இன்பமும் இல்லை
மறந்தான் வழிமுதல் வந்திலன் ஈசன்
அறந்தான் அறியும் அளவறி வாரே.

திருமந்திரம்: 262
அறம்அறி யார்அண்ணல் பாதம் நினையுந்
திறம்அறி யார்சிவ லோக நகர்க்குப்
புறம்அறி யார்பலர் பொய்மொழி கேட்டு
மறம்அறி வார்பகை மன்னிநின் றாரே.

***




Sunday, July 19, 2009

திருக்குறள்: 45

அதிகாரம்

:

5 இல் வாழ்க்கை திருக்குறள்

:

45


அன்பும் அறனும் உடைத்து ஆயின், இல்வாழ்க்கை
பண்பும் பயனும் அது.


பொழிப்புரை (Meaning) :
அன்பையும் அறத்தையும் உடையதாக இருக்குமாயின், இல்லற வாழ்க்கையின் பண்பும், பயனும் அதுவே.


விரிவுரை (Explanation) :
ஒருவரின் இல்லற வாழ்க்கை, எல்லோரிடத்தும் அன்பையும், நல் அறத்தையும் செய்யும் தன்மை உடையாதாக இருக்குமானால், அந்த வாழ்க்கையின் உண்மையான குணமும், அதன் பயனாவதும் அவ்விரண்டையும் கொண்டதுவே ஆகும்.

வாழ்வின் இன்பம் என்பதே அனைவரிடத்தும் அன்போடும், நற் பண்போடும் விளங்குதல் தானே. எனவே அதன் பால் அவையே இல்லற வாழ்வில் கடைப்பிடிக்க வேண்டியவை என்பது பொருள்.


குறிப்புரை (Message) :
இல்லற வாழ்க்கையில் பண்பும், பயனும் எனப்படுவது எல்லோரிடத்தும் அன்பும், நற் செயல்களையும் உடையவராக இருத்தலே.


அருஞ்சொற் பொருள் (Synonyms) :
பண்பு - பணிவான அன்பு. நாகரீகம். தன்மையான முறைமை.


ஒப்புரை (References) :

திருமந்திரம்: 276
முன்படைத்து இன்பம் படைத்த முதலிடை
அன்புஅடைத்து எம்பெரு மானை அறிகிலார்
வன்படைத்து இந்த அகலிடம் வாழ்வினில்
அன்புஅடைத் தான்தன் அகலிடத் தானே.

திருமந்திரம்: 279
அன்பின் உள் ளான்புறத்தான் உட லாயுளான்
முன்பின்உள் ளான்முனி வர்க்கும் பிரானவன்
அன்பின்உள் ளாகி அமரும் அரும்பொருள்
அன்பினுள் ளார்க்கே அணைதுணை யாமே.

திருமந்திரம்: 280
இகழ்ந்ததும் பெற்றதும் ஈசன் அறியும்
உகந்தருள் செய்திடும் உத்தம நாதன்
கொழுந்தன்பு செய்தருள் கூரவல் லார்க்கு
மகிழ்ந்தன்பு செய்யும் அருளது வாமே.

திருமந்திரம்: 281
இன்பப் பிறவிக்கு இயல்வது செய்தவன்
துன்பப் பிறவித் தொழில்பல என்னினும்
அன்பிற் கலவிசெய்து ஆதிப் பிரான்வைத்த
முன்பிப் பிறவி முடிவது தானே.

திருமந்திரம்: 282
அன்புறு சிந்தையின் மேலெழும் அவ்வொளி
இன்புறு கண்ணியொடு ஏற்க இசைந்தன
துன்புறு கண்ணி ஐந் தாடும் துடக்கற்று
நண்புறு சிந்தையை நாடுமின் நீரே.

ஔவையார். நல்வழி: 32
ஆறிடும் மேடும் மடுவும்போல் ஆஞ்செல்வம்
மாறிடும் ஏறிடும் மாநிலத்தீர் - சோறிடுந்
தண்ணீரும் வாரும் தருமமே சார்பாக
உண்ணீர்மை வீறும் உயர்ந்து.

***