Sunday, January 3, 2010

திருக்குறள்:180 (வேட்காமை வெற்றி தரும்...)

அதிகாரம்

: 18

வெஃகாமை

திருக்குறள் : 180

வேட்காமை வெற்றி தரும்...

In English

இறல் ஈனும், எண்ணாது வெஃகின்; விறல் ஈனும்,
வேண்டாமை என்னும் செருக்கு.

பொழிப்புரை :
[பின் விளைவை] எண்ணாது பிறர் பொருளை அபகரிக்க வேட்கை உற்றால் அஃது அழிவைப் பெற்றுத் தரும். அதனை வேண்டாமை எனும் மனத் திண்மை பெற்றால் அஃது வெற்றியைப் பெற்றுத் தரும்.

விரிவுரை :
பின் விளைவைச் சிந்தியாது பிறர் பொருளை அபகரிக்கும் எண்ணம் கொண்டால் அஃது இறுதியை அதாவது முற்றிலுமான அழிவைக் கொடுத்து விடும். ஆனால் பிறர் பொருள் வேண்டாமை எனும் திடமனது பெற்றால் அஃது வாழ்க்கை வெற்றியைப் பெற்றுத் தரும்.

இக வாழ்வின் நோக்கம் வெற்றியும் இறுதியில் முக்தியை வேண்டும் இயற்கை மரணமுமே.

பிறரின் பொருளை அபகரிப்போர், அதனால் பிறர் கோபத்திற்கும் பகைக்கும் ஆட்பட்டு இடருற்று இறுதியில் இறக்கவும் கூட நேரலாம். ஏன் அபகரித்த பொருளாலோ, வஞ்சிக்கப்பட்டவராலோ கூட மரணம் ஏற்படலாம். பேராசை பெரு நட்டத்தையே உண்டாக்கும். அதிலும் முறையற்ற பிறன் பொருள் வேட்கை தீதைத்தானே நல்கும்.

அதே சமயத்தில் பிறர் பொருள் வேண்டாமை எனும் உறுதிப்பாடு உடையோருக்கும், ஆசை அற்றோருக்கும் அவரது கொள்கைப் பிடிப்பு வெற்றியைப் பெற்றுத் தரும். அவரது நல் ஒழுக்கம் உழைப்பையே நம்பும். அவரது தேவைகளுக்காக உழைக்கத் தூண்டும். ஆசைக் குறைவு மன ஆட்டத்தைக் குறைத்து, தமது முக்கிய நோக்கங்களில் திறம்படத் திகழ உதவும். குறைந்த அளவு நோக்கங்களும், உள உறுதியும், ஒருமுகப்பட்ட முன் முனைப்பும், நேரிய சிந்தனையும் நிச்சயமாக வெற்றியைத் தான் பெற்றுத் தரும்.

ஆகவே வாழ்வில் வெற்றியையும், இயற்கை மரணத்தையும் பெற்று வாழ்க்கை நோக்கமாகிய முக்தியைப் பெற பிறர் பொருளை வேட்காமை எனும் மன உறுதியே மனிதருக்கு வேண்டும்.

குறிப்புரை :
பிறன் பொருள் வேட்கை அழிவையும், வேண்டாமை வெற்றியையும் நல்கும்.

அருஞ்சொற் பொருள் :
இறல் - இறுதி, அழிவு
விறல் - வெற்றி, வலிமை, சிறப்பியல்பு, உடலில் தோன்றும் உணர்வு வெளிப்பாடு
செருக்கு - எழுச்சி, கருவம், இறுமாப்பு, களிப்பு, துய், அனுபவி, துணிவு, மனத்திண்மை, உறுதி, மயக்கம், செல்வம்

ஒப்புரை :

திருமந்திரம்: 1844
பெருந்தன்மை நந்தி பிணங்கிருள் நேமி
இருந்தன்மை யாலும் என் நெஞ்சுஇடங் கொள்ள
வருந்தன்மை யாளனை வானவர் தேவர்
தருந்தன்மை யாளனைத் தாங்கிநின் றாரே.

திருமந்திரம்: 1884
எட்டுத் திசையும் இறைவன் அடியவர்க்கு
கட்ட அடிசில் அழுதென்று எதிர்கொள்வர்
ஒட்டி ஒருநிலம் ஆள்பவர் அந்நிலம்
விட்டுக் கிடக்கில் விருப்பறி யாரே.

திருமந்திரம்: 2052
பாசத்தை நீக்கிப் பரனோடு தன்னையும்
நேசத்து நாடி மலமற நீக்குவோர்
ஆசற்ற சற்குரு வாவோர் அறிவற்றுப்
பூசற்கு இரங்குவோர் போதக் குருவன்றே.

மாணிக்கவாசகர். திருவாசகம்:
12. திருச்சாழல் - சிவனுடைய காருணியம் :

கானார் புலித்தோல் உடைதலைஊண் காடுபதி
ஆனா லவனுக்கிங் காட்படுவார் ஆரேடி?
ஆனாலும் கேளாய் அயனுந் திருமாலும்
வானாடர் கோவும் வழியடியார் சாழலோ. 266

மலையரையன் பொற்பாவை வாள்நுதலான் பெண்திருவை
உலகறியத் தீவேட்டான் என்னுமது என்னேடீ
உலகறியத் தீவேளே தொழிந்தனனேல் உலகனைத்துங்
கலைநவின்ற பொருள்களெல்லாங் கலங்கிடுங்காண் சாழலோ. 267

தேன்புக்க தண்பனைசூழ் தில்லைச்சிற் றம்பலவன்
தான்புக்கு நட்டம் பயிலுமது என்னேடீ?
தான்புக்கு நட்டம் பயின்றிலனேல் தரணியெல்லாம்
ஊன்புக்க வேற்காளிக் கூட்டாங்காண் சாழலோ. 268

ஔவையார். மூதுரை:
நெல்லுக்கு இறைத்த நீர் வாய்க்கால் வழி ஓடிப்
புல்லுக்கும் ஆங்கே பொசியுமாம் - தொல் உலகில்
நல்லார் ஒருவர் உளரேல் அவர் பொருட்டு
எல்லார்க்கும் பெய்யும் மழை. 10

***

In English:

Chapter : 18

Non-Covetousness

Thirukkural : 180

Non-covetousness triumphs the victory...




In Tamil

iRal Inum, eNNAthu veHkin; viRal Inum,
vENdAmai ennum serukku.

Meaning :
Inconsiderate covetousness gives birth to ultimate destruction. But the strong non covetousness attitude will give birth to victory.

Explanation :

Without considering the consequences if one gains covetousness it would give birth to the ultimate destruction. At the same time the strong attitude of not wishing others properties will give birth to the victory.

The aim of the Life in this world is to be victorious and natural death at the end for the ultimate goal of liberation.

Those who greed for others properties and steal get subject to the affecter’s anger and enmity and thus could perhaps meet the anguish and even the death. The death even could happen through the stolen goods or by the deceived person or persons. The greater desire only gives greater loss. Hence the un-virtuous desire only can give the evil result.

At the same time, for those with strong attitude on non-covetousness and with no desires their commitment gets them the victory. Their good virtuousness shall believe only on good work. For their needs it will make them to work hard. Their lesser desires remove unnecessary diversions and help them to focus more on their important goals. Lesser goals, strong and focused mind and straightforward thinking certainly take them only to success and victory.
Therefore in life to achieve the success and victory and to get the natural death for the ultimate goal of liberation one should maintain only the non covetousness.


Message :
Covetousness will give destruction and non covetousness will give victory.

***

0 comments:

Post a Comment

குறைகளைச் சுட்டினால் நிறை செய்ய இயலும்...