Friday, January 15, 2010

திருக்குறள்:189 (புறங்கூறுபவரையும் பொறுக்கிறதே பூமி...)

அதிகாரம்

: 19

புறங்கூறாமை

திருக்குறள் : 189

புறங்கூறுபவரையும் பொறுக்கிறதே பூமி...

In English

அறன் நோக்கி ஆற்றும்கொல் வையம் - புறன் நோக்கிப்
புன்சொல் உரைப்பான் பொறை.

பொழிப்புரை :
[தம்] அறம் கருதிப் பொறுக்கும் போலும் வையம்; புறம் பார்த்துப் பழிச்சொல்லை உரைப்பவனின் பாரத்தை.

விரிவுரை :
ஒருவரின் புறம் பார்த்துப் பழிச்சொல்லை உரைப்பவனின் பாரத்தை, தம் அறம் கருதிப் பொறுக்கிறது போலும் வையம்.

அறம் காப்பது தன் கடனே என்றுதான் பூமி புறம் சொல்லுபவரையும் தாங்கி நிற்கிறது போலும். வேறென்ன? அன்றில் கண்டிப்பாக அவரைத் தண்டித்திருக்க மாட்டாதோ? என்பது இங்கே ஆதங்கம் மற்றும் கூறாப் பொருள்.

தன்னை அகழ்வாரைத் தாங்கும் நிலம், பிறரைப் பழிபேசும் இழிவானவரையும் தனது அறம் தவறாக் கொள்கையினால்தான் தாங்கி நிற்கிறது. இல்லை என்றால் புறங்கூறும் வஞ்சக மனத்தினர் இந்தப் பூமியில் வாழ்ந்து விடத்தான் முடியுமா?

ஆதலின் புறங்கூறும் பழக்கம் உடையவர்களே, அப்பழக்கத்தை விடுத்து, பூமிக்குத் தாய்க்குத் தேவையற்ற பாரமாக இல்லாது நல்லறத்தின் பக்கம் சார்ந்து நில்லுங்கள் என்பது உட்பொருள்.

குறிப்புரை :
பழிச்சொல்லைப் புறங்கூறுபவனையும் பொறுத்துச் சுமக்கின்றதே பூமி, தன் அறத்தைக் காப்பதற்காகவோ?

அருஞ்சொற் பொருள் :
புன்சொல் - பழிச்சொல், அவதூறு, பொல்லாங்கு
பொறை - பொறுமை, சகிப்பு, அமைதி, அடக்கம், வலிமை, கனம், பாரம், பூமி, மலை, குன்று, கருப்பம்

ஒப்புரை :

திருமந்திரம்: 1532
உள்ளத்தும் உள்ளன் புறத்துள்ளன் என்பவர்க்
குள்ளத்தும் உள்ளன் புறத்துள்ளன் எம்மிறை
உள்ளத்தும் இல்லை புறத்தில்லை என்பவர்க்
குள்ளத்தும் இல்லை புறத்தில்லை தானே.

திருமந்திரம்: 1541
வழியரண் டுக்குமோர் வித்தது வான
பழியது பார்மிசை வாழ்தல் உறுதல்
சுழியறி வாளன்றன் சொல்வழி முன்னின்
றழிவழி வார்நெறி நாடநில் லாரே.

திருமந்திரம்: 2523
ஆன புகழும் அமைந்த தோர் ஞானமுந்
தேனு மிருக்குஞ் சிறுவரை யொன்றுடண்
டூனமொன் றின்றி யுணர்வுசெய் வார்கட்கு
வானகஞ் செய்யு மறவனு மாமே. 12

திருமந்திரம்: 2524
மாமதி யாமதி யாய்நின்ற மாதவர்
தூய்மதி யாகுஞ் சுடர்பர மானந்தந்
தாமதி யாகச் சகமுணச் சாந்திபுக்
காமல மற்றார் அமைவுபெற் றாரே. 13

மாணிக்க வாசகர். திருவாசகம்.
9. திருப்பொற் சுண்ணம் - ஆனந்த மனோலயம்:
(தில்லையில் அருளியது - அறுசீர் ஆசிரிய விருத்தம்)

பூவியல் வார்சடை எம்பிராற்குப்
பொற்றிருச் சுண்ணம் இடிக்கவேண்டும்
மாவின் வடுவகி ரன்ன கண்ணீர்
வம்மின்கள் வந்துடன் பாடுமின்கள்
கூவுமின் தொண்டர் புறநிலாமே
குனிமின் தொழுமினெங் கோனெங்கூத்தன்
தேவியுந் தானும்வந்தெம்மையாளச்
செம்பொன்செய் சுண்ணம் இடித்துநாமே. 196

ஔவையார். ஆத்திசூடி:
98. வல்லமை பேசேல்.
99. வாதுமுற் கூறேல்.

ஔவையார். கொன்றை வேந்தன்:
75. மூத்தோர் சொல் வார்த்தை அமிர்தம்

பட்டினத்தார். பொது:
அழுதால் பயனென்ன? நொந்தால் பயனென்ன? ஆவதில்லை
தொழுதால் பயனென்ன? நின்னை ஒருவர் சுடவுரைத்த
பழுதால் பயனென்ன? நன்மையும் தீமையும் பங்கயத் தோன்
எழுதாப்படி வருமோ? சலியாதுஇரு என்ஏழை நெஞ்சே! 37

செல்வரைப் பின்சென் றுபசாரம் பேசித் தினந்தினமும்
பல்லினைக் காட்டி பரிதவி யாமல் பரமா னந்தத்தின்
எல்லையில் புக்குநல் ஏகாந்த மாய் எனக் காமிடத்தே
அல்லல் அற்றுஎன்றிருப் பேன் ஆலநீழல் அரும் பொருளே! 38

***

In English:

Chapter : 19

Non-Slandering

Thirukkural : 189

The earth sustains yet the slanderer...




In Tamil

aRan nOkki ARRumkol vaiyam - puRan nOkkip
punsol uraippAn poRai.

Meaning :
Hope the earth is sustaining the load of slanderer who disgraces one in behind only to save its own good virtue.

Explanation :

Hope this earth is bearing on the load of the slanderer who disgraces one in behind, just to keep up its own good virtue.

The earth is sustaining the slanderer only because the bearing seems to be its duty. What else? Otherwise, won't it have certainly punished the slanderer? is the implied feeling and meaning here.

The same earth which bears those who dig on her, through its principles of good virtues also bears and sustains those mean minded slanderers. Otherwise, is it possible for the slanderers to live and continue on this earth?

Therefore those who have the habits of slandering, by leaving that habit turn as no unnecessary load to the mother earth and stand on the side of good virtues, is the implied meaning here.


Message :
The earth is bearing on the slanderer's disgrace and load, is it to save its own good virtue?

***

0 comments:

Post a Comment

குறைகளைச் சுட்டினால் நிறை செய்ய இயலும்...