Showing posts with label குணம். Show all posts
Showing posts with label குணம். Show all posts

Friday, July 3, 2009

திருக்குறள்: 29


அதிகாரம்: 3. நீத்தார் பெருமை. திருக்குறள்: 29



குணம் என்னும் குன்று ஏறி நின்றார் வெகுளி
கணம் ஏயும், காத்தல் அரிது.



பொழிப்புரை (Meaning) :
குணம் என்னும் குன்றின் மேல் ஏறி நின்ற சான்றோருக்கு, கோபம் கணப் பொழுதே கோபம் வரக்கூடும், ஆனால் அதிலிருந்து வரும் தீமையிலிருந்து காத்தல் அரிது.


விரிவுரை (Explanation) :

குணம் என்னும் குன்றின் மேல் நல்ல பண்புகளால் ஏறி நிற்கும் பெரியோருக்கு கோபமே வாராது. அவர்களுக்கு ஒரு வேளை கோபம் ஏற்பட்டால் அது ஒரு கணப் பொழுதே வரக் கூடும். ஆனால் அந்த கணப் பொழுது வரும் சினத்தால் ஏற்படும் விளைவை, சினத்திற்குக் காரணம் ஆனவர்களால் தடுத்துக் காத்தல் இயலாது. முனிவர்களின் சினம் கடும் விளைவுகளை ஏற்படுத்தி விடும்.

ஆக, குணக் குன்றின் மேல் நிற்கும் சான்றோரைத் துறவிகளைப் பகைத்தல் கூடாது, பகைத்தால் அவரது சினத்திற்கு ஆளாகக் கூடும். அவ்வமயம் அச் சினத்திலிருந்து அவரைக் காப்பாற்ற யாராலும் இயலாது என்பது பொருள்.

மேலும் குணக் குன்றின் மேல் நிற்கும் பண்பாளர், கோபம் ஏற்படின் கணப் பொழுதும் அதைப் பேண மாட்டார் என்றும் பொருள் கொள்ளலாம். எனவே பண்பாளருக்குக் கோபம் என்பது தொடராமல், கணப்பொழுது கூட நிற்காமல் மறைந்துவிடும்.


குறிப்புரை (Message) :

சான்றோர்கள் கோபத்தைப் பேண மாட்டார். இருப்பினும் சான்றோர்களின் சினத்திற்கு ஆளாதல் கூடாது.


அருஞ்சொற் பொருள் (Synonyms) :

கணம் - நொடிப் பொழுது


ஒப்புரை (References) :


திருமந்திரம்: 1624
ஒடுங்கி நிலைபெற்ற வுத்தமர் உள்ளம்
நடுங்குவ தில்லை நமனுமங் கில்லை
இடும்பையும் இல்லை இராப்பகல் இல்லை
படும்பயன் இல்லை பற்றுவிட் டோர்க்கே.

திருமந்திரம்: 1627
இருந்து வருந்தி எழிறவஞ் செய்யும்
பெருந்தன்மை யாளரைப் பேதிக்க வென்றே
இருந்திந் திரனே யெவரே வரினுந்
திருந்துந்தஞ் சிந்தை சிவனவன் பாலே.

திருமந்திரம்: 1630
அமைச்சரும் ஆனைக் குழாமும் அரசும்
பகைத்தெழும் பூசலுட் பட்டார் நடுவே
அமைத்ததோர் ஞானமும் ஆத்தமும் நோக்கி
இமைத்தழி யாதிருந் தார்தவத் தாரே.

திருமந்திரம்: 1631
சாத்திரம் ஓதுஞ் சதுர்களை விட்டுநீர்
மாத்திரைப் போது மறித்துள்ளே நோக்குமின்
பார்த்தவப் பார்வை பசுமரத் தாணிபோல்
ஆர்த்த பிறவி அகலவிட் டோடுமே.

திருமந்திரம்: 1703
சற்குணம் வாய்மை தயாவிவே கந்தண்மை
சற்குரு பாதமே சாயைபோல் நீங்காமே
சிற்பர ஞானந் தெளியத் தெளிவோர்தல்
அற்புத மேதோன்ற லாகுஞ்சற் சீடனே.

திருமந்திரம்: 1976
பகலவன் மாலவன் பல்லுயிர்க்கு எல்லாம்
புகலவ னாய்நின்ற புண்ணிய நாதன்
இகலற ஏழுல கும்உற வோங்கும்
பகலவன் பல்லுயிர்க்கு ஆதியும் ஆமே.

ஔவையார்: மூதுரை: 4
அட்டாலும் பால்சுவையிற் குன்றா தளவளாய்
நட்டாலும் நண்பல்லார் நண்பல்லர்
கெட்டாலும் மேன்மக்கள் மேன்மக்க ளேசங்கு
சுட்டாலும் வெண்மை தரும்.

ஔவையார்: மூதுரை: 23
கற்பிளவோ டொப்பர் கயவர் கடுஞ்சினத்துப்
பொற்பிளவோ டொப்பரும் போல்வாரே - விற் பிடித்து
நீர் கிழிய எய்த வடுப்போல மாறுமே
சீரொழுகு சான்றோர் சினம்.


***