Monday, June 29, 2009

திருக்குறள்: 28


அதிகாரம்: 3. நீத்தார் பெருமை. திருக்குறள்: 28



நிறைமொழி மாந்தர் பெருமை நிலத்து
மறைமொழி காட்டி விடும்.


பொழிப்புரை (Meaning) :

பயன் நிறை மொழி தந்த மாந்தரின் பெருமையை, நிலத்தின் கண் அவர் ஆற்றிய மறை மொழிகளே காட்டி விடும்.


விரிவுரை (Explanation) :

பொருள் நிறைந்த மொழி கொண்ட துறவியரின் பெருமை, நில உலகத்தில் அவர் இயற்றிய அல்லது ஆற்றிய அல்லது ஆணையிட்ட மந்திரங்களே காட்டி விடும்.

சான்றோர்களின் பெருமையை இவ் உலகத்தில் அவர் ஆற்றிய மறை மொழிகளே பறை சாற்றி விடும். உதாரணத்திற்கு திருக்குறள், திருமந்திரம், திருமுறை, திவ்வியப் பிரபந்தம் இவற்றைச் சொல்லலாம்.

மேலும் குறை மொழி அதாவது பயனிலாச் சொல் ஆற்றுவோர் சான்றோர் அல்லர் என்பதும் குறளின் மறைபொருள்.


குறிப்புரை (Message) :

துறவியரின் மொழிகள் பொய்ப்பதில்லை.


அருஞ்சொற் பொருள் (Synonyms) :

நிறைமொழி - பயன் நிறைந்த சொல்


ஒப்புரை (References) :


தொல்காப்பியம் :1484
நிறைமொழி மாந்தர் ஆணையிற் கிளந்த
மறைமொழி தானே மந்திரம் என்ப.

திருமந்திரம்: 52
வேதம் உரைத்தானும் வேதியன் ஆகிலன்
வேதம் உரைத்தானும் வேதா விளங்கிட
வேதம் உரைத்தானும் வேதியர் வேள்விக்காய்
வேதம் உரைத்தானும் மெய்ப்பொருள் காட்டவே.

திருமந்திரம்: 54
திருநெறி யாவது சித்தசித் தன்றிப்
பெருநெறி யாய பிரானை நினைந்து
குருநெறி யாம்சிவ மாம்நெறி கூடும்
ஒருநெறி ஒன்றாக வேதாந்தம் ஓதுமே.

திருமந்திரம்: 55
ஆறங்க மாய்வரும் மாமறை ஓதியைக்
கூறங்க மாகக் குணம்பயில் வாரில்லை
வேறங்க மாக விளைவுசெய்து அப்புறம்
பேறங்க மாகப் பெருக்குகின் றாரே.

திருமந்திரம்: 85
யான்பெற்ற இன்பம் பெறுக இவ் வையகம்
வான்பற்றி நின்ற மறைப்பொருள் சொல்லிடின்
ஊன்பற்றி நின்ற உணர்வுறு மந்திரம்
தான்பற்றப் பற்றத் தலைப்படுந் தானே.


Sunday, June 28, 2009

திருக்குறள்: 27


அதிகாரம்: 3. நீத்தார் பெருமை. திருக்குறள்: 27



சுவை ஒளி, ஊறு, ஓசை, நாற்றம் என்று ஐந்தின்
வகை தெரிவான்கட்டே - உலகு.


பொழிப்புரை (Meaning) :

சுவை, ஒளி, ஊறு, ஓசை, நாற்றம் எனும் ஐந்து புலன் நுகர்வுகளால் அவற்றின் இயல்புக் கூறுபாட்டு வகைகளை ஆய்ந்து, அறிந்து, உணர்ந்து அதை அடக்கி ஆளத் தெரிந்தவனின் அறிவிற்கே மட்டுப்படும் உலகம்.


விரிவுரை (Explanation) :

ஐம்புலன் உணர்வுகளைக் கட்டுபடுத்தவும் அதன் வகைகளை அறிந்த யோகியர் போன்றும் துறவிகளுக்கே அவற்றை ஐம்பூதங்களுக்குத் தொடர்புப் படுத்தி அண்டத்தின் நிலையும், உலகின் நிலை விளங்குவதோடு கட்டுப்படுத்தவும் இயலும்.

உலகைக் கட்டுப்படுத்துவது என்பது அதன் ஐம்பூதங்களுக்குரிய இயல்புகளை மட்டுப்படுத்த அல்லது மாற்ற இயலும் என்பதாகும். அதாவது நிலம், நீர், நெருப்பு, காற்று, வெளி (ஆகாயம்) க்கும் ஐம்புலன் நுகர்சிக்கும் உள்ள இயற்கைத் தொடர்பினை உணர்ந்து கட்டுப்படுத்தத் தெரிந்த துறவிக்கு, பிண்டத்திலிருந்து அண்டத்தைக் கட்டுப்படுத்த இயலும் என்பதாகும். உதாரணத்திற்கு யோகிகளால் உஷ்ணத்தை உண்டாக்கவும், மழையை வருத்தவும் இயலும் என்பது அறிந்ததே. உண்மையில் யோகிகளுக்கான தலைமையாகிய இறையின் கட்டுப்பாட்டிலேதான் இறுதியில் இயற்கை இயங்குகின்றது என்பதும் மறை பொருள்.

பிண்டம் எனப்படும் மனிதனின் உடம்பும், அண்டமும் ஐம்பூதங்களாலேயே உருவாக்கப்பட்டது என்பதும், எனவே சுவை, ஒளி, ஊறு, ஓசை, நாற்றம் எனப்படும் ஐம்புலன் குணங்களுக்கும் நிலம், நீர், நெருப்பு, காற்று, வெளி (விசும்பு) ஆகிய ஐம்பூதங்களுக்கும் இயற்கையிலேயே தொடர்பு உண்டு என்பது சித்தர் சித்தாந்தம். அதாவது ஐம்புலன்களுக்கான ஐம்பொறிகளும் ஐம்பூதங்களின் கலவையால் ஏற்படுத்தப்பட்டவை என்பது சித்தர்களின், யோகிகளின் துணிபு. ஐம்புலன் குணங்கள் தன் மாத்திரைகள் எனவும், சைவ தத்துவங்கள் 96 எனவும், அதில் ஆன்ம தத்துவங்கள் 24 ம், அதனுடன் சேர்த்த மூலத்துடன் (பிரக்ருதி) தத்துவங்கள் 25 என்று சுருக்கியும் திருமூலர் குறித்துள்ளார். இவற்றின் விளக்கத்தை சித்தர் நெறிக் களஞ்சியம் எனும் பகுதியில் காணவும்.

இவ்வாறாக அத் தத்துவங்களையும், பிரபஞ்சத்தின் தத்துவங்கள் அனைத்தையும் வள்ளுவர் சுருக்கி ஐம்புலன் தன்மாத்திரைகளைக் கட்டுப்பட அறிந்தவர் உலகத்தைக் கட்டுப்படுத்தும் வல்லமை பெறுவர் என்று சூட்சும சூத்திரத்தைக் கூறுகின்றார்.

ஆக ஐம்புலனைக் கட்டுப்படுத்த அறிந்தவனிற்கு உலகத்தோடு இசைந்து ஒழுகவும், தனக்குச் சாதகமாக ஐம்பூதங்களை இயக்கவும் தெரியும். எனவே உலகைக் கட்டுப்படுத்துவது என்பது, அதை நேரெதிராகச் சுழற்றக் கோருவது போன்ற வாதங்களை ஐம்புலன் அறிந்தவர் ஒழுகார் என்பதும் துணிபு.

அன்றில் எளிதாக, ஐம்புலன் தன்மாத்திரைகளின் வகை தெரிந்தோருக்கே அதாவது கட்டுப்படுத்தத் தெரிந்த பற்றற்ற துறவியருக்கே உலகையும் அறியவும் இசைந்து ஒழுகவும் தெரியும் என்றும் கொள்ளலாம்.


குறிப்புரை (Message) :

ஐம்புலனைக் கட்டுப்படுத்த அறிந்த யோகிகளாகிய துறந்தோருக்கு இவ் உலகம் வசப்படும்.


அருஞ்சொற் பொருள் (Synonyms) :

கட்டே - கட்டுப்பாட்டிலே


ஒப்புரை (References) :

திருமந்திரம்: 135
சத்த முதல் ஐந்துந் தன்வழித் தான்சாரில்
சித்துக்குச் சித்தன்றி சேர்விடம் வேறுண்டோ
சுத்த வெளியிற் சுடா஢ற் சுடர்சேரும்
அத்தம் இதுகுறித் தாண்டுகொள் அப்பிலே.

திருமந்திரம்: 136
அப்பினில் கூர்மை ஆதித்தன் வெம்மையால்
உப்பெனப் பேர்ப்பெற்று உருச்செய்த அவ்வுரு
அப்பினிற் கூடிய தொன்றாகு மாறுபோல்
செப்பினிற் சீவன் சிவத்துள் அடங்குமே.

திருமந்திரம்: 137
அடங்குபேர் அண்டத்து அணுஅண்டம் சென்றங்கு
இடங்கொண்டது இல்லை இதுவன்றி வேறுண்டோ
கடந்தொறும் நின்ற உயிர்க்கரை காணில்
திடம்பெற நின்றான் திருவடி தானே.

திருமந்திரம்: 140
தானே புலன்ஐந்துந் தன்வசம் ஆயிடும்
தானே புலன்ஐந்துந் தன்வசம் போயிடும்
தானே புலன்ஐந்துந் தன்னில் மடைமாறும்
தானே தனித்துஎம் பிரான்தனைச் சந்தித்தே.

திருமந்திரம்: 735
அண்டஞ்f சுருங்கில் அதற்கோ ரழிவில்லை
பிண்டஞ்f சுருங்கிற் பிராணன் நிலைபெறும்
உண்டி சுருங்கில் உபாயம் பலவுள
கண்டங் கறுத்த கபாலியு மாமே

திருமந்திரம்: 736
பிண்டத்துள் உற்ற பிழக்கடை வாசலை
அண்டத்துள் உற்று அடுத்தடுத் தேகிடில்
வண்டிச் சிக்கு மலர்க்குழல் மாதரார்
கண்டிச் சிக்குநற் காயமு மாமே

திருமந்திரம்: 1675
தானன்ற தன்மையுந் தானவ னாதலும்
ஏனைய வச்சிவ மான இயற்கையுந்
தானுறு சாதக முத்திரை சாத்தலு
மேனமும் நந்தி பதமுத்தி பெற்றதே.

திருமந்திரம்: 2589
செவிமெய்வாய் கண்மூக்குச் சேரிந் திரியம்
அவியின் றியமன மாதிகள் ஐந்துங்
குவிவொன் றிலாமல் விரிந்து குவிந்து
தவிர்வொன் றிலாத சராசரந் தானே.

திருமந்திரம்: 2671
உண்ணும் வாயும் உடலும் உயிருமாய்க்
கண்ணுமா யோகக் கடவுள் இருப்பது
மண்ணு நீரனல் காலொடு வானுமாய்
விண்ணு மின்றி வெளியானோர் மேனியே.

***

Saturday, June 27, 2009

திருக்குறள்: 26

அதிகாரம்: 3. நீத்தார் பெருமை. திருக்குறள்: 26


செயற்கு அரிய செய்வார் பெரியர்; சிறியர்
செயற்கு அரிய செய்கலாதார்.


பொழிப்புரை (Meaning) :

செய்வதற்கு அரியனவற்றைச் செய்வார் பெரியோர், சிறியோர் செய்வதற்கு அரியனவற்றைச் செய்ய இயலாதார்.


விரிவுரை (Explanation) :
செய்வனவற்றுள் அரிதான செயல்களைச் செய்து முடிப்போர் பெரியோர் ஆவர். அவற்றைச் செய்ய மாட்டாதார் சிறியோரே. எளிய காரியங்களைச் செய்பவர் சிறியவர் என்பது ஈண்டு பெறத்தக்கது.

செயற்கரிய செயல்கள் பற்றற்று ஒழுகுவோருக்கே, துறந்தோருக்கே சாத்தியம் ஆகுவது இயல்பு. எனவே அவர்களே பெரியோர் எனப்படுபவர். உதாரணத்திற்குச் சித்தர்கள் ஐம்புலன்களைக் கட்டுப்படுத்தி இயமம், நியமம் செய்து மனத்தை அடக்கிப் பெறும் அட்டமா சித்திகளைச் சொல்லலாம்.

செயற்கெளிய செயல்கள் நாம் அன்றாடம் செய்பவை, உலகத்தொழில், பொருளீட்டல், இன்ப துன்பம் துய்த்தல், எளியாரை வாட்டுதல் போன்றவை. இவ்வகைச் செயற்கு உரியனவற்றைச் செய்ய இயலாதவர் சிறியாரிலும் சிறியார் என்பதும் சொல்லாது கூறிய உட்பொருள் எனக் கொள்க.

எனவே அரிய செயல்களைச் செய்துமுடித்துப் பெரியோர் எனப் பெயர் பெற முதலில் அதற்குத் தக்க முறையில் புலன்களை அடக்கி, அற ஒழுக்கத்தின் பால் நின்று மன அடக்கம் கொண்டு தகுதி பெற்றுப் பிறகு செயலினைச் சிந்தித்து, அறிந்து, ஆய்ந்து, திட்டமிட்டு வென்று முடிக்க வேண்டும் என்பது பொருள். கூடவே முற்றும் துறந்தும் அரிய செயல் செய்ய இயலாதவர்கள் பெரியோர் எனப்பட மாட்டார்கள் என்பதும் நுண்பொருள்.

ஆக ஒருவர் பெரியோர் அல்லது சிறியோர் எனும் பாகுபாடு அவர் செய்து முடித்த காரியத்தினாலே மட்டுமே தவிர அவரது வயதாலோ அல்லது மற்றைய வேறு காரணங்கள் எதனாலுமோ அல்ல என்பது இங்கே முக்கியமாக கவனத்தில் கொள்ளத் தக்கது.


குறிப்புரை (Message) :
செயற்கரிய செயல்களைச் செய்வோர் பெரியோர்; மாட்டாதவர் சிறியோர்.


அருஞ்சொற் பொருள் (Synonyms) :
செயல் - செய்து முடிப்பது, காரியம்.


ஒப்புரை (References) :

செயற்கரியவாவன இயமம், நியமம் முதலாய எண் வகை யோக உறுப்புக்கள். கடிவு (இமயம்), நோன்பு (நியமம்), இருக்கை (ஆசனம்), வளிநிலை (பிராணயாமம்), ஒருக்கம் (பிரத்தியாகாரம்), நிறை (தாரணை), ஊழ்கம் (தியானம்) , ஒன்றுகை (சமாதி) என்பன. இவற்றுள் ஒருக்கமும், மனவடக்கமும் சிறந்ததாம்.

தாயுமான அடிகள்:
வெந்தழலி விரதம்வைத் தைந்துலோ கத்தையும்
வேதித்து விற்றுண்ணலாம்
வேறொருவர் காணாம லுலகத் துலாவலாம்
விண்ணவரை யேவல் கொள்ளல்லாம்
சந்ததமு மிளமியோ டிருக்கலா மற்றொரு
சரீரத்தினும் புகுதலாம்
சலமே னடக்கலாம் கனன்மே லிருக்கலாம்
தன்னிகரில் சித்திபெறலாம்
சிந்தையை யடக்கியே சும்மா விருக்கின்ற திறமரிது.


மனம் அடக்குதலும், அவா அறுத்தலுமே செயற்கரிய செயல்கள் என அறிக.

திருமந்திரம்: 1426
ஞானி புவியெழு நன்னூ லனைத்துடன்
மோன திசையும் முழுஎண்ணெண் சித்தியும்
ஏனை நிலமும் எழுதா மறையீறுங்
கோனொடு தன்னையுங் காணுங் குணத்தனே.

திருமந்திரம்: 1602
வைத்தேன் அடிகள் மனத்தினுள் ளேநான்
பொய்த்தே யெரியும் புலன்வழி போகாமல்
எய்த்தேன் உழலும் இருவினை மாற்றிட்டு
மெய்த்தேன் அறிந்தே னவ்வேதத்தின் அந்தமே.



***

Friday, June 26, 2009

திருக்குறள்: 25


அதிகாரம்: 3. நீத்தார் பெருமை. திருக்குறள்: 25



ஐந்து அவித்தான் ஆற்றல், அகல் விசும்புளார் கோமான்
இந்திரனே சாலும், கரி.


பொழிப்புரை (Meaning) :
ஐம்புலன்வழிச் சார்ந்த ஆசைகள் அனைத்தையும் அடக்கி அணைத்தவனது ஆற்றலுக்கு, அகன்ற விண்ணகத்தே உள்ளவர்களின் கோமான் இந்திரனே போதிய சான்று.


விரிவுரை (Explanation) :
ஐம்புலன் நுகர்ச்சிகளையும் துறந்தவனது வலிமைக்கு, அகன்ற வானுலக நாயகன் இந்திரனே போதுமான சான்று.

கோமான் என்பதிலேயே நாயகன், வேந்தன் என்பது அடங்கி விடுவதால்

இந்திரன் என்பதற்கு மீண்டும் வேந்தன் என்பது பொருந்தாது. எனவே
இந்திரன் எனும் பெயர் கொண்ட ஒருவரையே திருவள்ளுவர் குறிப்பிடுகின்றார் என்பது தெளிவு.

இதுகாறும் எந்தச் சமயத்தையும் தழுவாத வள்ளுவனார், இந்திரன் என்னும் புராண நாயகனை ஏன் குறிப்பிட்டார்? இது மிக முக்கியமான கேள்வி. வேத காலங்களுக்கு முன்னரே இருந்தே மழைக்கும், தமிழர்களின் மருத நிலத்துத் தேவனாகவும் இந்திரன் கருதப்பட்டான். மதங்களே உருவாகாத காலத்தே குறிக்கப்பட்ட தலைவன் இந்திரன் என்பதே பொருந்தும்.

தமிழர்களின் ஐந்திணைகள் குறிஞ்சி, பாலை, முல்லை, மருதம், நெய்தல் என்பவை. இவற்றுள் மலையும், மலை சார்ந்த இடமும் குறிஞ்சி, காடும் காடு சார்ந்த இடமும் முல்லை, குறிஞ்சியும் முல்லையும் திரிந்த் இடம் பாலை, வயலும் வயல் சார்ந்த நிலமும் மருதம், கடலும் கடல் சார்ந்த நிலமும் நெய்தல். அவற்றின் தெய்வங்கள் விபரம்: குறிஞ்சிக்கு முருகன், பாலைக்குத் துர்கை, முல்லைக்கு திருமால், மருதத்திற்கு இந்திரன், நெய்தலுக்கு வருணன்.

பிற்காலத்தில் தோன்றிய அல்லது வேதகாலத்தில் குறிப்பிடப்பட்ட அகலிகை-இந்திரன் மற்றும் அதில் இந்திரன் சபிக்கப்பட்ட கதையையும் இங்கு சிலர் பொருத்துகின்றார்கள். அதாவது தவத்தின்பால் சிறந்திருந்த துறவி கௌதமரின் மனைவி அகலிகையை தேவர்களுக்கு அதிபதியான இந்திரன் அபகரித்ததால் துறவியின் சாபத்திற்கு ஆட்பட்டான். பிறன் மனை விளைந்தவன் எவனாக இருப்பினும், துறவியின் வலிமைக்கு ஆட்பட்டதையே இங்கு வள்ளுவர் சுட்டிய்தாகக் குறிப்பார்கள்.

ஆயின் மதங்களின் சார்பு நிலையற்ற வள்ளுவர், இந்திரனே போதிய சான்று என்பதன் காரணம், தவத்தின், அறத்தின், துறவின் வலிமையால் ஒரு சாதாரண இந்திரன், வானுலகத்தாருக்குத் தலைவனாக, கோமகன் பதவியைப் பெற்றுப் புகழ் பெற்றான் என்று சொல்லுவதாகவே தோன்றுகின்றது. சமயக் காலங்களுக்கு முந்தையக் கதைகளில் இந்திரன் தவமிருந்து அப்பதவியைப் பெற்றான் என்று வழங்கி வருதல் குறிப்பிடத் தக்கது.

இந்திரன் பற்றிய குறிப்பு மேலும் சமணம், புத்த, சைவ, வைணவ இந்து மதங்களிலும் காணப்படுவதையும் கவனத்தில் கொண்டால், திருவள்ளுவர் ஒரு குறிப்பிட்ட சமயத்தைக் குறிப்பிடவில்லை எனப்து விளங்கும்.

எனவே இக்குறளுக்குப் பொருள், புலன்களை அடக்கினால் இந்திர பதவி கிட்டும் எனக் கொள்ளுவதே பொருந்தும்.


குறிப்புரை (Message) :
ஐம்புலன்களை வென்றவர்களுக்கு கிட்டும் பதவிக்கு வானுலக இந்திரனே சான்று.


அருஞ்சொற் பொருள் (Synonyms) :
ஆற்றல் - வலிமை, திறமை
விசும்பு - விண், வானம்
கோமான் - அரசன், நாயகன், வேந்தன், தலைவன்
கரி - சாட்சி, இருத்தை, அடுப்புக்கரி, நிலக்கரி, வைரம், யானை


ஒப்புரை (References) :

திருமந்திரம்: 118
மலங்கள்ஐந் தாமென மாற்றி அருளித்
தலங்கள்ஐந் தானற் சதாசிவ மான
புலங்களைந் தான்அப் பொதுவினுள் நந்தி
நலங்களைந் தான்உள் நயந்தான் அறிந்தே.

திருமந்திரம்: 119
அறிவுஐம் புலனுட னேநான் றதாகி
நெறியறி யாதுற்ற நீர்ஆழம் போல
அறிவுஅறி வுள்ளே அழிந்தது போலக்
குறியறி விப்பான் குருபர னாமே.

திருமந்திரம்: 363
அலைகடல் ஊடறுத் தண்டத்து வானோர்
தலைவன் எனும்பெயர் தான்றலை மேற்கொண்டு
உலகார் அழற்கண் டுள்விழா தோடி
அலைவாயில் வீழாமல் அஞ்சலென் றானே

திருமந்திரம்: 977
அஞ்சுள வானை அடவியுள் வாழ்வன
அஞ்சுக்கும் அஞ்செழுத்து அங்குசம் ஆவன
அஞ்சையும் கூடத் தடுக்கவல் லார்கட்கே
அஞ்சாதி ஆதி அகம்புக லாமே.

திருமந்திரம்: 69
மந்திரம் பெற்ற வழிமுறை மாலாங்கன்
இந்திரன் சோமன் பிரமன் உருத்திரன்
கந்துருக் காலாங்கி கஞ்ச மலையனோடு
இந்த எழுவரும் என்வழி யாமே.

திருமந்திரம்: 2589
செவிமெய்வாய் கண்மூக்குச் சேரிந் திரியம்
அவியின் றியமன மாதிகள் ஐந்துங்
குவிவொன் றிலாமல் விரிந்து குவிந்து
தவிர்வொன் றிலாத சராசரந் தானே.

***

Thursday, June 25, 2009

திருக்குறள்: 24

அதிகாரம்: 3. நீத்தார் பெருமை. திருக்குறள்: 24


உரன் என்னும் தோட்டியான், ஓர் ஐந்தும் காப்பான்
வரன் என்னும் வைப்பிற்கு ஓர் வித்து.


பொழிப்புரை (Meaning) :

நெஞ்சுரம் என்னும் திடமான அங்குசத்தால், ஐந்து புலன்களையும் கட்டுப்படுத்திக் காப்பவன், நன் வரங்களைத் தரும் சேமிப்பு இருப்பிற்கு ஒரு விதை போல்வான்.


விரிவுரை (Explanation) :
அறிவாகிய திட அங்குசக் கருவியால், ஐம் பொறிகளையும் அடக்கிக் காக்கின்றவன், வரன் என்னும் சேகரமாகிய இறைவனைச் சேர்வதற்குரிய ஓர் வித்து.

வரன் என்பதற்கு மேலுலகமாகிய வீட்டு நிலத்திற்போய் முளைத்தற்குரிய என்று அனைவரும் குறிப்பிடுகின்றார்கள்; வித்து என்பது மணி முத்துக்களையும் சேரும் என்பதனாலும், வரன் எனும் வைப்பு நிதியினைச் சாரும் என்றும், வைப்பிற்குரிய வித்து என்பதை நிதியத்திற்குரிய வித்து என்றும் கொள்ளலாம் அல்லவா?

ஆக ஐம்புலன்களையும் தத்தம் புலன் மேற் செல்லாது அடக்கிக் காக்கும் வல்லமை பொருந்தியவர்கள், அதாவது இன்ப, துன்ப நுகர்ச்சிகளைத் துறந்த துறவிகள், மேல் வரம் தரும் வைப்பிற்குரிய வித்து. எனவே சிறு வரம் தரும் சித்தி பெற்றவர்கள் என்றும் வரனாகிய, பெருநிதியாகிய, ஈஸ்வரனாகிய இறைவனைச் சேரும் முத்துக்கள் ஆவார்கள். வரன் எனும் கற்பகத் தாருவிற்கான வித்தாகும் தகுதி பெற்றவர்கள் இவர்கள் என்பதும் கருத்து.


குறிப்புரை (Message) :
நெஞ்சுரத்தோடு ஐம்புலனைக் கட்டுபடுத்திக் காக்கும் துறவியே வரம் தரும் நிலைக்கான வித்தாவான.


அருஞ்சொற் பொருள் (Synonyms) :

உரன் - உள்ளமிகுதி, ஊக்கம், அறிவு, திண்மை, ஞானம், பலம், மாண்பு, வயிரம், உறுதி, வெற்றி
வரன் - கணவன், மருமகன், சிவன், ஈஸ்வரன், முனிவன்


ஒப்புரை (References) :

திருமந்திரம்: 120
ஆமேவு பால்நீர் பிரிக்கின்ற அன்னம்போல்
தாமே தனிமன்றில் தன்னந் தனிநித்தம்
தீமேவு பல்கர ணங்களுள் உற்றன
தாமேழ் பிறப்பெரி சார்ந்தவித் தாமே.

திருமந்திரம்: 121
வித்தைக் கெடுத்து வியாக்கிரத் தேமிகச்
சுத்தத் துரியம் பிறந்து துடக்கற
ஒத்துப் புலனுயிர் ஒன்றாய் உடம்பொடு
செத்திட் டிருப்பார் சிவயோகி யார்களே.

திருமந்திரம்: 1692
பதைக்கின்ற போதே பரமென்னும் வித்தை
விதைக்கின்ற வித்தினை மேல்நின்று நோக்கிச்
சிதைக்கின்ற சிந்தையைச் செவ்வே நிறுத்தி
இசைக்கின்ற அன்பருக் கீயலு மாமே.

திருமந்திரம்: 2316
ஆனைகள் ஐந்தம் அடங்கி அறிவென்னும்
ஞானத் திரியைக் கொளுவி அதனுட்புக்கு
ஊனை இருளற நோக்கும் ஒருவற்கு
வானகம் ஏற வழிஎளி தாமே.

திருமந்திரம்: 2622
உய்ந்தனம் என்பீர் உறுபொருள் காண்கிலீர்
கந்த மலரிற் கலக்கின்ற நந்தியைச்
சிந்தையில் வைத்துத் தெளிவுறச் சேர்த்திட்டால்
முந்தைப் பிறவிக்கு மூலவித் தாமே.

***

Wednesday, June 24, 2009

திருக்குறள்: 23

அதிகாரம்: 3. நீத்தார் பெருமை. திருக்குறள்: 23


இருமை வகை தெரிந்து ஈண்டு அறம் பூண்டார்
பெருமை பிறங்கிற்று, உலகு.


பொழிப்புரை (Meaning) :

இகம், பரம் எனும் இரண்டின் வாழ்வு வகை அறிந்து ஆராய்ந்து அறமாகிய துறவறத்தைப் பூண்டவர்களின் பெருமையே நிறைந்து விளங்குகின்றது இவ் உலகில்.


விரிவுரை (Explanation) :

பிறப்பு, வீடு என்னும் இரண்டினால் நல்லவை, கெட்டவை, இன்பம், துன்பம், மறம் அறம் என்ற வகைகளை, அவற்றின் கூறுபாட்டை ஆராய்ந்து அறிந்து, இப்பிறப்பில் துறவறத்தைப் பூண்டவர்களின் பெருமையே, இவ் உலகத்தில் உயர்ந்து நிறைந்து நிற்கின்றது.


குறிப்புரை (Message) :

அறிவின்பால் உணர்ந்து துறவறம் மேற்கொண்டவர்களே உலகின்பால் உயர்ந்த பெருமைக்கு உரியவர்கள்.


அருஞ்சொற் பொருள் (Synonyms) :

பிறங்குதல் - உயர்தல், பிரகாசித்தல், ஒலித்தல், நிறைதல்


ஒப்புரை (References) :


திருமந்திரம்: 143
மண்ணொன்று கண்டீர் இருவகைப் பாத்திரம்
திண்ணென்று இருந்தது தீவினைச் சேர்ந்தது
விண்ணின்று நீர்விழின் மீண்டுமண் ணானார்ப்போல்
எண்ணின்றி மாந்தர் இறக்கின்ற வாறே.

திருமந்திரம்: 1614
இறப்பும் பிறப்பும் இருமையும் நீங்கித்
துறக்குந் தவங்கண்ட சோதிப் பிரானை
மறப்பில ராய்நித்தம் வாய்மொழி வார்கட்
கறப்பதி காட்டும் அமரர் பிரானே.

திருமந்திரம்: 2338
எய்தினர் செய்யும் இருமாயா சத்தியின்
எய்தினர் செய்யும் இருஞான சத்தியின்
எய்தினர் செய்யும் இருஞால சத்தியின்
எய்தினர் செய்யும் இறையருள் தானே.

ஒவையார். நல்வழி: 28
உண்பது நாழி உடுப்பது நான்குமுழம்
எண்பது கோடிநினைந்து எண்ணுவன-கண்புதைந்த
மாந்தர் குடிவாழ்க்கை மண்ணின் கலம்போலச்
சாந்துணையுஞ் சஞ்சலமே தான்.

***

Tuesday, June 23, 2009

திருக்குறள்: 22


அதிகாரம்: 3. நீத்தார் பெருமை. திருக்குறள்: 22



துறந்தார் பெருமை துணைக் கூறின், வையத்து

இறந்தாரை எண்ணிக் கொண்டற்று.


பொழிப்புரை (Meaning) :

துறந்தவர்களின் பெருமையை எத்துணை எனக் கூறுவதாயின், வையகத்தில் இதுவரையில் இறந்தவர்களை எண்ணிக் கணக்கிடுவது போன்றதாகும்.


விரிவுரை (Explanation) :
வையகத்தில் இதுவரையில் இறந்தவர்களின் எண்ணிக்கை என்று கணக்கிட சாத்தியம் அற்றது போன்றே துறந்து வாழும் சான்றோர்களின் பெருமையையும் அளக்கவே இயலாது.

இந்த உலகில் இதுவரையில் பிறந்தவர்களையும், இறந்தவர்களையும் கணக்கெடுப்பது இயலாதது. அதைப் போன்றே துறந்தவர்களின் பெருமையையும் கணக்கெடுக்க இயலாது.

இதில் ஈண்டு பெற வேண்டியது, அத்தகைய அளவிடற்கரிய சிறப்பானது முற்றும் துறந்த துறவிகளின், பற்றற்ற வாழ்வை ஒழுகும் சான்றோர்களின் பெருமையாகும்.

எதிலும் பற்றுடன் திகழும் சராசரி மனிதனின் வாழ்வில் பெருமைப்பட என்ன இருக்கிறது?


குறிப்புரை (Message) :
பற்றற்ற வாழ்வின் மேன்மை அளவிடற்கரியது.


அருஞ்சொற் பொருள் (Synonyms) :
துணை - அளவு, ஆதரவு, ஆயுதம், இணை, உதவி, ஒப்பு, சகாயம், சல்லியம், சோடு


ஒப்புரை (References) :

திருமந்திரம்: 1615
பிறந்தும் இறந்தும்பல் பேதைமை யாலே
மறந்து பலஇருள் நீங்க மறைந்து
சிறந்த சிவனருள் சேர்பரு வத்துத்
துறந்த வுயிர்க்குச் சுடரொளி யாமே.

திருமந்திரம்: 1616
அறவன் பிறப்பிலி யாரும் இலாதான்
உறைவது காட்டகம் உண்பது பிச்சை
துறவனுங் கண்டீர் துறந்தவர் தம்மைப்
பிறவி யறுத்திடும் பித்தன்கண் டீரே

திருமந்திரம்: 2336
உயிரிச்சை யூட்டி உழிதரும் சத்தி
உயிரிச்சை வாட்டி ஒழித்திடும் ஞானம்
உயிரிச்சை யூட்டி யுடனுறலாலே
உயிரிச்சை வாட்டி உயர்பதஞ் சேருமே.

திருமந்திரம்: 2865
பற்றற் றவர்பற்றி நின்ற பரம்பொருள்
சுற்றற் றவர்சுற்றுக் கருதிய கண்ணுதல்
சுற்றற் றவர்சுற்றி நின்றான் சோதியைப்
பெற்றுற் றவர்கள் பிதற்றொழிந் தாரே.


Monday, June 22, 2009

திருக்குறள்: 21

அதிகாரம்: 3. நீத்தார் பெருமை. திருக்குறள்: 21


ஒழுக்கத்து நீத்தார் பெருமை விழுப்பத்து
வேண்டும் பனுவல் துணிவு.


பொழிப்புரை (Meaning) :

ஒழுக்கத்தின் பால் நின்று துறந்தவர்களின் பெருமை, பெருமைகளில் எல்லாம் சிறந்தது எனக் கொள்ள வேண்டும் என்பது அற நூல்களின் துணிபு.


விரிவுரை (Explanation) :

உலகப்பற்றை நீத்து நல் ஒழுக்கங்களை ஒழுகி வாழ்ந்த துறந்தவர்களாகிய சான்றோர்களின் பெருமையானது, பெருமைகளிலெல்லாம் தலை சிறந்ததென அறநூல்கள் துணிந்து சொல்லும்.

ஒழுக்க நெறி நின்ற பற்றற்ற சான்றோர்களின் பெருமையையே சிறப்பானது என்றும் தேவையானது என்றும் அற நூல்கள் துணிந்து கூறும்; மற்றவர்கள் எல்லாம் அத்தகைய நூல்களால் கருதப்பட மாட்டார்கள் என்பது உட்பொருள்.

ஒழுக்கத்தையே நீத்தார் என்போர் உலகத்தாலேயே மறக்கப்பட்டு விடுவர். அவரிடம் ஏது பெருமை அறநூல்கள் பேச?

நூல்களில் எழுதி வைத்தல் வருங்காலச் சந்ததியினர் முன்னோரின் பெருமைகளைப் படித்து அதன் மூலங்களையும் உணரத்தானே.


குறிப்புரை (Message) :

காலங்களைத் தாண்டிய நூல்கள் கூறும் சிறப்பான பெருமை, அற நெறிகளை ஒழுகி பற்றற்ற வாழ்வினைப் பேணும் பெருந்தகையாருக்கே உண்டு.


அருஞ்சொற் பொருள் (Synonyms) :

விழுப்பம் - ஆசை, குலம், நன்மை, மேன்மை, சிறப்பு
பனுவல் - நூல், ஆகமம், பஞ்சிநூல், கல்வி, புலமை, கேள்வி


ஒப்புரை (References) :


திருமந்திரம்: 1457
நெறிவழி யேசென்று நேர்மையுள் ஒன்றித்
தறியிருந் தாற்போல் தம்மை யிருத்திச்
சொறியினுந் தாக்கினுந் துண்ணென் றுணராக்
குறியறி வாளர்க்குக் கூடலு மாமே.

திருமந்திரம்: 1620
மேல்துறந் தண்ணல் விளங்கொளி கூற்றுவன்
நாள்துறந் தார்க்கவன் நண்ப னவாவிலி
கார்துறந் தார்க்கவன் கண்ணுத லாய்நிற்கும்
பார்துறந் தார்க்கே பதஞ்செய லாமே.

திருமந்திரம்: 1702
வேட்கை விடுநெறி வேதாந்த மாதலால்
வாழ்க்கைப் புனல்வழி மாற்றிச்சித் தாந்தத்து
வேட்கை விடுமிக்க வேதாந்தி பாதமே
தாழ்க்குந் தலையினோன் சற்சீட னாமே.

திருமந்திரம்: 2615
ஆசை யறுமின்கள் ஆசை யறுமின்கள்
ஈசனோ டாயினும் ஆசை யறுமின்கள்
ஆசை படப்பட ஆய்வருந் துன்பங்கள்
ஆசை விடவிட ஆனந்த மாமே.

ஔவையார். நல்வழி: 3
இடும்பைக்கு இடும்பை இயலுடம்பி தன்றே
இடும்பொய்யை மெய்யென் றிராதே-இடுங் கடுக
உண்டாயி னுண்டாகும் ஊழிற் பெருவலிநோய்
விண்டாரைக் கொண்டாடும் வீடு.

ஔவையார். நல்வழி: 7
எல்லாப் படியாலும் எண்ணினால் இவ்வுடம்பு
பொல்லாப் புழுமலிநோய்ப் புன்குரம்பை-நல்லார்
அறிந்திருப்பார் ஆதலினால் ஆங்கமல நீர்போற்
பிறிந்திருப்பார் பேசார் பிறர்க்கு.

அதிகாரம்: 3. நீத்தார் பெருமை


உயர்ந்த குணங்களுடன் வாழ்ந்து சிறந்து விழங்கும் சான்றோர், உலகத்தின் பொருட்டு வழிகாட்டும், தந்நலம் நீத்தார் பெருமை.

ஒப்புரை (References) :

திருமந்திரம்: 2448
பற்றறப் பற்றில் பரம்பதி யாவது
பற்றறப் பற்றில் பரனறி வேபரம்
பற்றறப் பற்றினில் பற்றவல் லோர்கட்கே
பற்றறப் பற்றில் பரம்பர மாமே.

***

சித்தர் நெறிக் களஞ்சியம்


பிரபஞ்ச தத்துவம்:
இறைவன் படைக்கும் முன் இந்தப் பிரபஞ்சம் பெயர் உருவமற்று சுத்த வெளியாய், நிர்க்குண்மாய், சின்மாத்திரைப் பரப்பிரம்மமாக இருந்தது.

அதிலிருந்து பிரமையினால் கானல் நீர் தோன்றுவது போல் மூலப் பிரகிருதி என்னும் இல் மாயை ஒன்று தோன்றியது. அந்த மூலப் பிரகிருதி வெண்மை, சிகப்பு, கறுப்பு என்னும் மூன்றுவித நிறங்களோடு மூன்றுவிதச் சக்திகளாயிற்று. வெண்மை நிறத்தே மாயா சக்தி. சிகப்பு நிறத்தது அவித்தா சக்தி. கறுப்பு நிறத்தது ஆவரண விக்‌ஷேப சக்தி. இவற்றை முறையே மாயை, அறியாமை (அஞ்ஞானம்); முனைப்பு (அகங்காரம்) எனச் சொல்லலாம்.

மாயா சக்தி சத்துவ குணத்தை முதன்மையாகக் கொண்டு விளங்க்கும் அதில் பரப்பிரம்மம் பிரதி பலிப்பதினால் தோன்றிய பிரதிபிம்பமே ஈஸ்வரன் என்று கூறப்படும். ஈஸ்வரன் அந்த மாயைத் தன் வசப்படுத்திக் கொண்டு நம் அறிவிற்கு மேம்பட்டவனாய் படைத்தல், காத்தல், துடைத்தல், மறைத்தல், அருளல் என்னும் ஐந்தொழில்களுக்கும் அப்பாற்பட்டவனாய் மனம், புத்தி, சித்தம், அகங்காரம் என்னும் நான்கு அந்தக் கரணங்களுக்கும் எட்டாதவனாய்த் தனது அருளினால் பிரும்மா, திருமால், உருத்திரன், மகேசன், சதாசிவன் என்னும் ஐந்து வடிவங்கள் கொண்டு எல்லா உயிர்களுக்கும் பற்றுக்கோடு ஆகி மேலான இன்பத்தைத் தருபவன்.

எனவே, பரப் பிரம்மத்திலிருந்து மாயையும், மாயையில் இருந்து அவித்தை எனப்படும் அறியாமையையும் (அஞ்ஞானம்) அந்த அறியாமையிலிருந்து அகங்கார ஆற்றலும், அகங்காரத்திலிருந்து சுவை, ஒளி, ஊறு, ஓசை, நாற்றம் எனப்படும் ஐந்து நுண் பொருட்களான பஞ்ச தன் மாத்திரைகளும், அவற்றிலிருந்து நிலம், நீர், நெருப்பு, காற்று, ஆகாயம் எனப்படும் பருப் பொருள்களான ஐம்பெரும் பூதங்களும், அப்பஞ்ச பூதங்களினால் பிரபஞ்சமும்
பிராணிகளும் உண்டாயின. மாயையினால் உண்டான பிரபஞ்சமும், மாயா சரீரமும் தோன்றி மறைந்து, தோன்றி மறைந்து உயிர்களை மீண்டும், மீண்டும் பிறப்பு இறப்புக்களுக்கு ஆளாக்கிக் கொண்டே வரும். முடிவில் எல்லாம் அழிவுறும் பிரளய காலத்தில், எல்லா நதிகளும் கடல் நீரிலே உண்டாகிக் கடைசியில் கடலிலேயே விழுந்து ஒன்றாகக் கலந்து விடுவது போலவே, பிரும்மா முதல் மனிதர் மிருகங்கள் முதலான சராசரப் பொருட்களெல்லாம் எந்தப் பரப்பிரம்மத்திலிருந்து உண்டாயினவோ அந்தப் பரப்பிம்மத்திலேயே ஒன்று கலந்து ஏகமாய் ஐக்கியமாகிவிடும்.

நம் உடல்:
மனித உடலானது அவரவர் கையினால் எட்டு சாண் அளவு நீளமும், நான்கு சாண் அளவு பருமனும், 96 விரற்கடைப் பிரமாணமும் உள்ளதாகும். இந்த மனித உடலில் 96 தத்துவங்கள் அடங்கி இருக்கின்றன.

பூதங்கள்: 5 (ஐம்பூதங்கள்)
1.நிலம் (பூமி, பிருத்துவி, மண்)
2.நீர் (புனல், அப்பு, ஜலம்)
3.நெருப்பு (அனல், தேயு, அக்னி)
4.காற்று (கால், வாயு)
5.ஆகாயம் (விசும்பு, விண்)

இவற்றை பஞ்ச பூதங்கள் எனவும், ஐந்து பருப்பொருள்கள் என்றும் சொல்வார்கள்.

அண்டத்தில் இருப்பதுதான் பிண்டத்திலும் இருப்பது என்பதை விளக்கக் கீழே.

ஐம்பூதங்களால் உடல் உண்டாதல்:
நிலம், நீர், நெருப்பு, காற்று, விசும்பு எனப்படும் ஐந்து பருப்பொருட்களில், அதாவது பிருதுவி, அப்பு, தேயு, வாயு, ஆகாயம் எனப்படும் ஐம்பெரும் பூதங்களில் ஒவ்வொன்றும் சமஷ்டி, வியஷ்டி என இரண்டு பாகங்களாகி இரண்டு பூதங்களாயிற்று. சமஷ்டி என்றால் ஒன்றாயிருத்தல், இதற்கு உதாரணம் தோப்பு. வியஷ்டி என்றால் வெவ்வேறாக இருத்தல். இதற்கு உதாரணம் மரம். இவற்றில் முதற்பாகப் பஞ்ச பூதங்களே பிரபஞ்சமாயிற்று. இரண்டாவது பாகப் பஞ்ச பூதங்கள் இருபத்தைந்து தத்துவங்களாகி, அவை ஒன்று சேர்ந்து மனித உடல் உண்டாயிற்று.

அதன் விளக்கம்:
முதலில் ஆகாயம்: இரண்டு பாகங்களான போது, முதற்பாதிப் பாகமான சமஷ்டி ஆகாயம் ஞாதாவாயிற்று. அதாவது அதில் தோன்றிய பிரம்மமும், பிரம்மத்தின் பிரதிபிம்பமும் கூடியதே ஞாதாவாகும். இந்த ஞாதாவை அக்‌ஷ்ரன் எனவும் க்‌ஷேத்ரஞ்ஞன் எனவும், புருஷன் எனவும், ஜீவன் எனவும்சொல்வார்கள்.

ஆகாயத்தின் இரண்டாவது பாதிப் பாகமான வியஷ்டி ஆகாசத்தை நான்கு பாகங்களாக்கி, அவற்றோடு முறையே பஞ்சபூதங்களை கீழ்க்கண்டவாறு சேர்த்தபோது அவ்வவற்றிற்கு எதிரே சொன்னவை பிறந்தன.

முதற்பாகம் & காற்று : சங்கல்பம் (மனஸ்) என்னும் மனத் தத்துவம் பிறந்தது.
2வது பாகம் & நெருப்பு: புத்தி (அறிவு) என்னும் தத்துவம் பிறந்தது
3வது பாகம் & நீர் : சித்தம் (நினைவிறுத்தல்) என்னும் தத்துவம் பிறந்தது
4வது பாகம் & நிலம் : அகங்காரம் (முனைப்பு) என்னும் தத்துவம் பிறந்தது.

இவை நான்கு அந்தக்கரணங்கள் அல்லது அகக்கருவிகள் எனப்படும்.

அடுததாகக் காற்று: இரண்டு பாகங்களாகி அவற்றில் முதற் பாதிப் பாகமான சமஷ்டி வாயுவானது தொழிற் காற்றாக மாறியது.

இரண்டாவது பாதிப்பாகமான வியஷ்டி வாயுவானது கீழ்க்கண்டவாறு நான்கு பாகங்களாகவும், அவ்வவற்றில் குறிப்பிட்டது போலும் சொன்னவை பிறந்தன.

1வது பாகம் & ஆகாசம்: சமான வாயு (நிரவற்காற்று)
2வது பாகம் & நெருப்பு: உதான வாயு (ஒலிக்காற்று)
3வது பாகம் & நீர்: பிராண வாயு (உயிர்க்காற்று)
4வது பாகம் & நிலம்: அபான வாயு (மலக்காற்று)

இவ்வைந்து பஞ்சபிராணன்களாக எல்லா உயிர்களுக்கும் இருந்து வருகின்றன.

அடுத்ததாக நெருப்பு: இரண்டு பாகங்களாகி அவற்றில் முதற்பாதிப் பாகமான சமஷ்டி அக்னி கண்களாயின.

இரண்டாவது பாதிப் பாகம் ஏனைய பூதங்களுடன் சேர்ந்து கீழ்க்கண்டவாறு அவ்வவற்றில் சொன்னவை பிறந்தன.

1வது பாகம் & ஆகாசம்: செவிகள்
2வது பாகம் & காற்று: உடல்
3வது பாகம் & நீர்: வாய் அல்லது நாக்கு
4வது பாகம் & நிலம்: மூக்கு

அடுத்தாக நீர்: இரண்டு பாகங்களாகி, அவற்றில் முதற்பாதிப் பாகமான சமஷ்டி நீர், சுவை (ரசம்) என்னும் தன்மாத்திரை ஆயிற்று. அதாவது ருசி அறிவதாயிற்று. இரண்டாவது பாதிப் பாகமான வியஷ்டி நீர் நான்கு பாகங்களாகி, கீழ்க்கண்டவாறு ஏனைய பூதங்களுடன் சேர்ந்து, அவ்வவற்றில் சொன்னவை பிறந்தன.

1வது பாகம் & ஆகாசம் : ஓசை (சப்தம்)
2வது பாகம் & காற்று: ஊறு (ஸ்பரிசம்)
3வது பாகம் & நெருப்பு: ஒளி/பார்வை (ரூபம்)
4வது பாகம் & மண்: நாற்றம்/வாசனை/நுகர்தல் (கந்தம்)

அடுத்ததாக நிலம்: இரண்டு பாகங்களாகி அவற்றில் முதல் பாதிப் பாகமான சமஷ்டி நிலமானது குதம் (மலத்தைத் தள்ளும் மலவாய்) ஆயிற்று. பிறகு இரண்டாவது பாதிப் பாகமான வியஷ்டி நிலம் மற்றைய பூதங்களுடன் சேர்ந்து கீழ்க்கண்டவாறு, அவ்வவற்றில் சொன்னவை பிறந்தன.

1வது பாகம் & ஆகாயம்: வாக்கு (பேசுவதற்குரிய வாய்)
2வது பாகம் & காற்று: பாணி (கொடுப்பதற்கும் வாங்குவதற்கும் உரிய கை)
3வது பாகம் & நெருப்பு: பாதம் (நடப்பதற்கும் நிற்பதற்கும் உரிய கால்)
4வது பாகம் & நீர்: குய்யம் (அதாவது ஆண் பெண் இன்பத்திற்குரிய மர்மக் குறி)

மேற் கூறிய இருபத்தைந்து தத்துவங்களும் சேர்ந்து உடல் பிறக்கிறது.

சுவை, ஒளி, ஊறு, ஓசை, நாற்றம் என்னும் ஐந்து குணங்களுடைய நிலத் தத்துவத்தினால் தாவர ஜங்கம உருவங்களான பிரபஞ்சம் அனைத்தையும் பிரும்ம தேவன் படைக்கிறார்.

ஓசை, ஊறு, ஒளி, சுவை என்னும் நான்கு குணங்களை உடைய நீர் தத்துவத்தினால் பிரபஞ்சங்கள் அனைத்தையும் மகாவிஷ்ணு காத்தருள்கிறார்.

ஒலி, ஊறு, ஒளி என்னும் மூன்று குணங்களுடைய நெருப்புத் தத்துவத்தினால் பிரபஞ்சங்கள் அனைத்தையும் ருத்திரர் அளிக்கிறார்.

ஒலி, ஊறு என்னும் இரண்டு குணங்களுடைய காற்றுத் தத்துவத்தினால் மகேஸ்வரர் மாயா சம்பந்தமுள்ள உயிர்களுக்கெல்லாம் பிரமையை உண்டாக்குகிறார்.

ஒலி எனும் ஒரே குணமுள்ள ஆகாசத்தினால் உயிர்களுக்கு ஞானத்தை (அறிவை) சதாசிவம் உண்டாக்குகின்றார்.

பஞ்ச ஞானேந்திரியங்கள் (ஐம்பொறிகள்)
1. மெய் 2. வாய் 3. கண் 4. மூக்கு 5. செவி

இவற்றின் இயல்பு:
1. மெய் (உடம்புத் தோல்) வாயுவின் அம்சமாகையால் அதன் தன்மைகளான குளிர்ச்சி, வெப்பம், மென்மை, வன்மை என்னும் நான்கு வித ஸ்பரிசங்களை (ஊறு) உணர்ந்தறியும்

2. வாய் அல்லது நாக்கு: நீரின் அம்சமாகையால் அதன் தன்மைகளான உப்பு, புளிப்பு, இனிப்பு, கைப்பு, கார்ப்பு, துவர்ப்பு என்னும் அறுசுவைகளையும் (ரசத்த) ருசித்தறியும்.

3. கண்: நெருப்பின் அம்சமாகையால் அதன் ஒளியை அதாவது கறுப்பு, சிகப்பு, பச்சை, நீலம், மாசிர நிறம், நீளம், குட்டை, பருமன், மெலிவு முதலான பத்து ரூபங்களையும் (ஒளியை) பார்த்தறியும்.

4. மூக்கு: நிலத்தின் அம்சமாகையால் அதன் தன்மைகளான சுகந்தம், துர்கந்தம் என்னும் வாசனைகளை நுகர்ந்தறியும்.

5. செவி: ஆகாசத்தின் அம்சமாகையினால் அதன் குணங்களான பலவித ஓசையையும் (சப்தத்தையும்) கேட்டறியும்.

இவை ஐந்தின் ஒவ்வொன்றும் ஒவ்வொன்றை அறிவதால் பஞ்ச ஞானேந்திரியங்கள் எனக் கூறப்படுகின்றது.

பஞ்ச கர்மேந்திரியங்கள்:
1.வாய் 2.கை 3.கால். 4. மலவாய் (குதம்) 5. கருவாய் என வகுக்கப்பட்டு ஐந்து தொழில் உறுப்புக்கள் என வழங்கப்படும்.

இவற்றின் செயல்கள் முறையே: 1. சொல்லல் 2. நடத்தல் 3. ஏற்றல், கொடுத்தல் 4. விடுதல் 5. மகிழ்தல் என வழங்கப்படுகின்றன.

1. வாய்: (வாக்கு) இது ஆகாசத்தின் அம்சமாகையால் அதன் குணமாக நின்று பேசுவதால் வாக்கு ஆகும்.
2. கை: (பாணி), இது காற்றின் அம்சமாகையால் கொடுத்தல், வாங்கல், பிடித்தல், விடுதல் முதலானவற்றை செய்யும்
3. கால்: (பாதம்) இது நெருப்பின் அம்சமாகையால் நடத்தல், நிற்றல், அமர்தல், எழுந்திருத்தல் முதலானவற்றைச் செய்யும்.
4. மலவாய் (குதம், பாயுரு) இது நிலத்தின் அம்சமாகையால் மலஜலங்களை வெளியே தள்ளும்.
5. கருவாய் (உபஸ்தம்) அல்லது ஆண் பெண் மர்மக்குறி. இது நீரின் அம்சமாகையால் சிறு நீர் கழிப்பதோடு ஆணின் இன்பச் சுரப்பான சுக்கிலத்தையும், பெண்ணின் இன்பச் சுரப்பான சுரோணிதத்தையும் வெளிப்படுத்தி போகானந்தம் விளைவிக்கும்.

இவை ஐந்தில் ஒவ்வொன்றும் ஒவ்வொரு காரியம் செய்வதால் கர்மேந்திரியங்கள் எனப்பட்டன.

பஞ்ச தன்மாத்திரைகள்:
1. சுவை 2. ஒளி 3. ஊறு 4. ஓசை 5. நாற்றம் என வகுக்கப்பட்டு ஐந்து நுண்ணிய பொருள்கள் எனப்படும்.

இவற்றின் இயல்புகள்:
1. சுவை (ரசம்): நீரின் தன் மாத்திரையான இது நாவில் நீர் சம்பந்தமிருப்பதால் அந்த நாவிலிருந்து அறு சுவைகளின் பேதங்களை உணர்விக்கும்.

2.ஒளி (ரூபம்): நெருப்பின் தன்மாத்திரையான இது, கண்களில் நெருப்பின் இயல்பு சம்பந்தமிருப்பதால் பத்து விதமான உருவங்களையும் விழிவழியே காண்பிக்கும்.

3.ஊறு (ஸ்பரிசம்) காற்றின் தன்பாத்திரையான இது உடலில் பிராணன் முதலான வாயுக்கள் அனைத்தோடும் வியாபித்திருப்பதால் தொட்டுக்காட்டும் ஊறு குணத்தை உடலிலிருந்து உணர்த்தும்

4. ஓசை (சப்தம்) ஆகாயத்தின் தன் மாத்திரைகளான இது காதின் உட்புறத்திலுள்ள மெல்லிய ஜவ்வின் வழியாக ஓசையை உணர்விக்கும்.

5. நாற்றம் (கந்தம்) நிலத்தின் தன் மாத்திரையான இது மூக்கில் மண் சம்பந்தமிருப்பதால் அந்த மூக்கின் வழியே நறுமணம், துர்கந்தமான வாசனைகளை அறிவிக்கும்.

ஒலியானது ஆகாயத்திலும் செவியிலும் ஒடுங்கும்
ஊறானது காற்றிலும் உடலிலும் ஒடுங்கும்
ஒளியானது நெருப்பிலும் கண்ணிலும் ஒடுங்கும்
சுவையானது நீரிலும் நாவிலும் ஒடுங்கும்
நாற்றமானது மண்ணிலும் மூக்கிலும் ஒடுங்கும்
வாக்கானது (வசனமானது) ஆகாயத்திலும் வாயிலும் ஒடுங்கும்
உணர்வானது (கமனமானது) காற்றிலும் காலிலும் ஒடுங்கும்
வழங்குதலானது, (தானமானது) நெருப்பிலும், கையிலும் ஒடுங்கும்
விடுதலானது (விசர்க்கமானது) நீரிலும், குதத்திலும் ஒடுங்கும்
இன்பமானது (ஆனந்தமானது) மண்ணிலும், குய்யத்திலும் ஒடுங்கும்

அந்தக்கரணங்கள் (அகக்கருவிகள்)
1.மனஸ் 2. புத்தி 3.சித்தம். 4 அகங்காரம் தமிழில் 1.மனம் 2.அறிவு, 3. நினைவு 4.முனைப்பு. என வகுக்கப்பட்டுள்ளன.

இவற்றின் இயல்புகள்:
மனம் நினைக்கும், புத்தி நிச்சயிக்கும். அகங்காரம் கொண்டெழுப்பும், சித்தம் மூன்றுக்கும் காரணமாக இருக்கும்.

1. மனம் - இது வாயுவின் அம்சமாகையால் தன் சொரூப குணமான நினைப்பு, மறப்பு என்னும் சங்கல்ப, விகல்பங்களைச் செய்து கொண்டு காற்றைப் போலவே அலைந்து திரியும். இதற்கு அதிதேவதை-சந்திரன். ஸ்தானம்-நாபி (கொப்பூழ், உந்தி)

2. புத்தி: இது நெருப்பின் அம்சமாகையால் பொருட்களின் சுய உருவை நிச்சயிக்கும் உருவ விருத்தியே புத்தியாகும். மேலும் இது செயல்களையும் பொருள் வகைகளையும் நன்மை தீமைகளையும் ஆராய்ந்து நிச்சயித்து உணரும். இதற்கு அதிதேவதை-பிரமன். ஸ்தானம்-முகம்.

3.சித்தம்: இது நீரின் அம்சமாகையால் பொருளின் நினைப்பே சித்தமாகும். இது பொறிகளுக்கு சலனத்தை விளைவித்து அதன் வழியே விஷயங்களுக்கு இழுத்துச் செல்லும். சித்தமே மனம். இவ்விரண்டும் ஒரே பொருளாக இருப்பதால் இதற்கும் ஸ்தானம் நாபியாகும். இதற்கு அதிதேவதை திருமால்.

4. அகங்காரம்: இது நிலத்தின் அம்சமாகையால் ஊனுடலை ’நான்’ என்று அபிமானிக்கும் வடிவவிருத்தியே அகங்காரமாகும். இது செயல்களை ஆழ்ந்தாலோசிக்காமல் ‘நான்’ ‘எனது’ என்று அபிமானித்து முனைப்புக் கொண்டு புண்ணிய பாவங்களைச் செய்து கொண்டிருக்கும். இதற்கு அதிதேவதை - ருத்திரன். ஸ்தானம்-இதயம்.

இவை நான்கும் உடலில் வியாபித்து ஞானேந்திரியங்கலையும் கர்மேந்திரியங்களையும் அதனதன் விருத்திகளில் புகுத்துகின்றன.

தாதுக்கள் 7
1.இரசம் (சாரம்) 2. இரத்தம் (உதிரம், குருதி, செந்நீர்) 3. மாமிசம் (ஊன்) 4. மேதஸ் (கொழுப்பு) 5. அஸ்தி (எலும்பு, என்பு) 6. மச்சை (மூளை) 7. ஆணின் சுக்கிலம் அல்லது பெண்ணின் சுரோணிதம் (ஆண் பெண் இன்பச் சுரப்பு, வெண்ணீர்)

பஞ்ச கோசங்கள்: (ஐவுடம்புகள்)
1. உணவுடம்பு அல்லது பருவுடம்பு (அன்னமய கோசம்)
2. காற்று உடம்பு அல்லது வளியுடம்பு (பிராணமய கோசம்)
3. மனவுடம்பு (மனோமய கோசம்)
4. அறிவுடம்பு (விஞ்ஞானமய கோசம்)
5. இன்ப உடம்பு (ஆனந்தமய கோசம்)

இவற்றின் இயல்புகள்:
ஏழு தாதுக்களால் எடுத்தது பருவுடம்பாகும். அன்ன சாரத்தினால் பிராணமும் பலமும் அடங்கியிருக்க்பது காற்று உடம்பு. பிராண பலத்தினால் வந்து தோன்றியிருப்பது மனவுடம்பு. அந்த மனதில் (வித்தை) விஞ்ஞானம் தோன்றுவதால் ஏற்படுவது அறிவுடம்பு. அந்த விஞ்ஞானத்தால் (வித்தையால்) ஆனந்தம் தோன்றும்போது இன்ப உடம்பு ஆகும்.

புளியை அதன் ஓடு மூடிக் கொண்டிருப்பது போல் இவ்வைந்து உடம்புகளும் பரமாத்வாவையும், ஜீவாத்மாவையும் மூடிக் கொண்டு அவற்றைக் காணப்படாமல் செய்வதினால் இவை கோசங்கள் / உடம்புகள் எனப்படுகின்றன.

திருமூலர் தன் அனுபவ வாயிலாகக் கண்ட தத்துவங்கள் 4,00,48,500 எனக் கூறி, அதனைச் சுருக்கி, தொண்ணூற்றாறு என வகைப்படுத்தி, அதனையும் சுருக்கி இருபத்தைந்து எனக் குறிப்பிடுகின்றார்.

திருமந்திரம்: 2138
நாலொரு கோடியே நாற்பத் தெண்ணாயிர
மேலுமோ ரைந்து நூறுவேறா யடங்கிடும்
பாலவை தொண்ணூறோ டாறாட் படுமவை
கோலிய ஐயைந்துளாகும் குறிக்கிலே.

சிவவாகிய சித்தர்: 198
பொய்க் குடத்தில் ஐந்தொதுங்கி போகம்வீ சுமாறுபோல்
இச்சடமும் இந்திரியமும் நீருமேல் அலைந்ததே
அக்குடம் சலத்தை மொண்டு அமர்ந்திருந்த வாறுபோல்
இச்சடம் சிவத்தை மொண்டு உகந்து அமர்ந்திருப்பதே.

சிவவாக்கிய சித்தர்: 213
அஞ்சும்அஞ்சும் அஞ்சும்அஞ்சும் அல்லல் செய்து நிற்பதும்
அஞ்சும்அஞ்சும்அஞ்சுமே அமர்ந்துளே இருப்பதும்
அஞ்சும்அஞ்சும் அஞ்சுமே ஆதரிக்க வல்லிரேல்
அஞ்சும்அஞ்சும் உம்முளே அமர்ந்ததே சிவாயமே.

சிவவாக்கிய சித்தர்: 262
ஐந்தும்ஐந்தும் ஐந்துமாய் அல்லவத்துள் ஆயுமாய்
ஐந்துமூன்றும் ஒன்றுமாகி நின்ற ஆதிதேவனே
ஐந்தும்ஐந்தும் ஐந்துமாய் அமைந்தனைத்தும் நின்றநீ
ஐந்தும்ஐந்தும் ஆயநின்னை யாவர்காண வல்லரே.

ஆன்ம தத்துவங்கள்: 24
பூதங்கள் ஐந்து: நிலம், நீர், தீ, வளி, விசும்பு (மண், புனல், அனல், கால், வான்)
தன்மாத்திரைகள் ஐந்து: ஓசை, ஊறு, ஒளி, சுவை, நாற்றம் என்பன. மேற்கூறிய பூதங்கள் ஐந்தின் சூக்கும நிலையே தன்மாத்திரைகள். இவையே பஞ்ச பூதங்களுக்குக் காரணமாயும், அவற்றின் உதவியோடு இந்திரியங்கள் நுகர்ச்சியில் தொழிற்பட ஏதுவாக இருக்கின்றன.
ஞானேந்திரியங்கள் ஐந்து: மெய், வாய், கண், மூக்கு, செவி
கன்மேந்திரியங்கள் ஐந்து: வாய், கால், கை, எருவாய், கருவாய் என்றும் வாக்கு, பாதம், பாணி, பாயும், உபந்தம் எனவும் குறிப்பிடப்படும். இவை ஐம்பூதங்களையும் பற்றுக்கோடாகக் கொண்டு பேசல், நடத்தல், கொடுத்தல், விடுத்தல், இன்புறல் என்னும் தொழில்களைச் செய்யும்.
அந்தக் கரணங்கள் நான்கு: மனம், புத்தி, அகங்காரம், சித்தம் என்பன. இந்திரியங்களால் புறத்தே செயல்பட, அவைதரும் பதிவுகளை அகத்தே தொழிற்படுத்தும் அகக்கருவிகள் இவை.

மனம் யாதானும் பொறியுணர்வைப்பற்றி இன்னது இன்னதாகலாம் என ஐயநிலையில் நிற்கும்.புத்தி அதனை இன்னது என நிச்சயிக்கும் , இதைச் சவிகற்பக் காட்சி என்பர். அக்காட்சிக்கு வேண்டிய முயற்சிக்கு உடம்பில் வாயுக்களையும், இந்திரியங்களையும் ஊக்குவிப்பது அகங்காரம். அங்ஙனம் வந்த நிச்சய உணர்வை முன்னரே பெற்றுள்ள உணர்வுகளோடு இணைத்து அதனைப் பொருட் பெற்றி வடிவில் உட்கோடல் சித்தத்தின் தொழில். ஆன்மா, மனம் முதலிய கருவிகளைக் கொண்டு உணரும் போது பற்றுதல், நிச்சயித்தல், ஒருப்பட்டு எழுதல், சிந்தித்தல் என நான்கு வகைப்படும். புத்தி இன்னதென்று நிச்சயிக்கும்போது அதனை முன்னைய பழக்கம் பற்றி வினைக்கீடாக அதை தனக்கு உறவாகவோ, பகையாகவோ, நொதுமலாகவோ உணரும். அந்த உணர்தலால் இன்பம், துன்பம், மயக்கம் எனுக் குணங்கள் ஒன்று பரிணமிக்கும். அதையே ஆன்மா உணரும்.

இந்த ஆன்ம தத்துவம் 24 உடன் கூடிய ஜீவாத்மா என்பதைச் சேர்த்து குறுகிய தத்துவங்கள் 25 எனக் கொள்ளவும்.
இருபத்தைந்து ததுவங்களால் உடம்பு எவ்விதம் தோற்றுவிக்கப்பட்டுள்ளது என்பதை முன்னரே விளக்கியுள்ளது காண்க.

வித்தியா தத்துவம்: ஏழு.
ஊழி, ஊழ், தொழில், அறிவு, விழைவு, ஆள், மருள் எனவும் காலம், நியதி, கலை, வித்தை, அராகம், புருடன், மாயை எனவும் குறிக்கப்பெறும். இவற்றுக்கான விளக்கங்கள் மிகவும் விரிவானவை எனவே இங்கே குறிப்பிட இயலாது.

மாயைப் பற்றி மட்டும் கொஞ்சம். மாயை எனப்படுவது மலங்களுள் ஒன்றன்று. அஃது தூலம், சூக்குமம், பரம் என மூவகைப்படும். தூலமாய் நின்ற அவத்தையில் பிரகிருதி மாயை எனவும், சூக்குமமாய் நின்ற அவத்தையில் அசுத்தமாயை எனவும், பரமாய் (அதிசூக்குமமாய்) நின்ற அவத்தையில் சுத்தமாயை எனவும் அழைக்கப்படும்.

சிவதத்துவம்: ஐந்து.
சுத்தமாயை (தூமாயை)யினின்றே சிவ தத்துவங்கள் ஐந்தும் தோன்றின. இவை சுத்த தத்துவங்கள் எனப்படும். சுத்தவித்தை, ஈசுரம், சாதாக்கியம், சத்திதத்துவம், சிவதத்துவம்.

இதுகாறும் கூறிவந்த முப்பத்தாறு தத்துவங்களும் அகக் கருவிகள் எனப்படும்.

புறக்கருவிகள் : 60.
அவற்றின் கூறுகள் கீழ்க்கண்டவாறு.

நிலம்: மயிர், தோல், எலும்பு, நரம்பு, தசை 5
நீர்: நீர், குருதி, மூளை, கொழுப்பு, வெண்ணீர் 5
தீ: ஊண், உறக்கம், உடனுறைவு, உட்கு, மடி 5
வளி: ஓடல், இருத்தல், நடத்தல், கிடத்தல், தத்தல் 5
வெளி: வெகுளி, இவறன்மை, மயக்கம், செருக்கு, பொறாமை 5
செய்தற்கருவி: பேசல், நடத்தல், உழைத்தல், கழித்தல், மகப்பெறுதல் 5
அறிவுவளி: உயிர்காற்று, மலக்காற்று, தொழிற்காற்று, ஒலிக்காற்று, நிரவு காற்று 5
தொழில்வளி: தும்மற்காற்று, விழிக்காற்று, கொட்டாவிக்காற்று, இமைக்காற்று, வீங்கற்காற்று 5
நாடி: இடப்பால் நரம்பு, வலப்பால் நரம்பு, நடு நரம்பு, இடக்கண் நரம்பு, வலச் செவி நரம்பு, இடச் செவி நரம்பு, உள் நாக்கு நரம்பு, கருவாய் நரம்பு, எருவாய் நரம்பு 10
ஓசை: நுண்ணோசை, நினைவோசை, மிடற்றோசை, செவியோசை 4
முப்பற்று: பொருட்பற்று, புதல்வற்பற்று, பொய்யுலகபற்று 3
(மண், பெண், பொன்)
முக்கணம்: அமைதி, ஆட்சி, அழுத்தல் 3
இவ்வாறாக புறக்கருவிகள் 60
(உட்கு=பயம், இவறன்மை=குரோதம், செருக்கு=ஆணவம்)

ஆக மொத்தம் தத்துவங்கள் தொண்ணூற்றாறு என்பர்.

திருமந்திரம்: 2107
பூதங்கள் ஐந்தும் பொறியவை ஐந்துளும்
ஏதம் படஞ் செய்திருந்த புறநிலை
ஓதும் மலங்குண மாகுமா தாரமோ
டாதிய வத்தை தொண்ணூற் றாரே.

இவற்றை ஞானாமிர்தம் எனும் சைவ சித்தாந்தப் புத்தகத்தில் இலக்கியச் சுவையோடு காணலாம்.

குறிப்புரை (References) :

திருமந்திரம்: 1823
உள்ளம் பெருங்கோயில் ஊனுடம்பு ஆலயம்
வள்ளற் பிரானார்க்கு வாய்கோ புரவாசல்
தெள்ளத் தெளிந்தார்க்குச் சீவன் சிவலிங்கம்
கள்ளப் புலன்ஐந்தும் காளா மணிவிளக்கே.

திருமந்திரம்: 2385
கருதும் அவர்தம் கருத்தினுக்கு ஒப்ப
அரனுரை செய்தருள் ஆகமந் தன்னில்
வருசமயப் புற மாயைமா மாயை
உருவிய வேதாந்த சித்தாந்த உண்மையே.



1. சித்தர் பாடல்கள், அரு. இராமனாதன், பிரேமா பிரசுரம், சென்னை.
2. திருமூலர் திருநெறி, நா. சுப்பிரமணியன், பொன்முடிப் பதிப்பகம், காரைக்குடி.

அதிகாரம்: 2. வான் சிறப்பு - முடிவுரை


அத்தியாயத்தில் பெற்றவை:

11. வான் மழையே உலகை வாழ வைக்கும்அமிழ்தம்.

12. உணவை உண்டாக்கவும் தானும் உணவாகவும் இருப்பது மழையே.


13. மழை பொய்ப்பின் உலகின் பசியைக் கடல் நீரும் தீர்க்க இயலாது.


14. நல்ல மழை இல்லையெனில் உழவுத் தொழில் குன்றிவிடும்.


15. ஆக்கவும், அழிக்கவும் வல்லது மழை.


16. மழையில்லாது பசும்புல்லும் தலை காட்டாது.


17. கருமேகம் உருவாகா விட்டால் பெருங்கடலும் வளம் குன்றும்.


18. வானோருக்குப் படையல் மழை இருந்தாலதான்.


19. தானம், தவம் எல்லாம் மழை இருந்தால் தான்.


20. உலகிற்கும், வாழ்விற்கும் மழை மிக அவசியத் தேவை.


குறிப்புரை (Message) :
மழையைப் போற்று, மதித்து ஒழுகு, நீரைச் சேகரி. பிழைத்துக் கொள்வாய். நன்றாக வாழ்வாய்.

***


அதிகாரம்: 1. கடவுள் வாழ்த்து - முடிவுரை

அதிகாரம்

:

1.

கடவுள் வாழ்த்து

தலைப்பு

:

 

அதிகாரத்தில் பெற்றவை!

 

 

 

In English

 


குறள் எண்.

குறள் குறிப்புரைகள்

1.       

அனைத்து எழுத்துக்களும், மொழிகளும் இறைவனை முன்னிறுத்தியே உலகில் படைக்கப்பட்டு உள்ளன

 

2.       

கல்வியின் நோக்கம் இறைவனின் நற் பாதங்களைத் தொழுது அவர்தம் மெய்யறிவைப் பெறுதலே.

 

3.       

இறைவனின் பாதங்களை இதயப் பூர்வமாய்ப்  பேணினால் இந்நிலத்தே நீண்டு வாழலாம்.

 

4.       

தன்நலமற்ற இறைவனின் பாதங்களைப் பேணின் ஒருபோதும் இடரில்லை.

 

5.       

இறையெனும் மெய்ப்பொருளைப் போற்றுவோருக்கு நல்வினை, தீவினை எச்சங்கள் இல்லை.

 

6.       

ஐம்புலனைக் கட்டுப்படுத்திய இறை நெறியில் ஒழுகினால் நீண்டு நிலைத்து வாழலாம்.

 

7.       

ஒப்பற்ற இறைவனைத் தொழுதலே மனக் கவலைக்கு மாமருந்து.

 

8.       

அறக் கடலாகிய இறைவனைப் பேணியே பொருள், இன்பம் எனும் கடல்களைக் கடக்க இயலும்.

 

9.       

எண் குணத்து இறைவனைச் சிந்தித்துப் பணியாத தலை அர்த்தமற்றது.

 

10.    

இறைவன் அடியைப் பேணியே இப்பிறவி வாழ்வைக் கடைத்தேற இயலும்.

 

 

 

அதிகாரம்

:

1.

கடவுள் வாழ்த்து

தலைப்பு

:

 

அதிகாரக் குறிப்புரை!

 

 

 

In English

 

கடவுளை நம்பு, பணி, தொழு, பேணு. வெற்றி பெறுவாய்!

 

•••

 



Chapter

:

1.

The Praise of The God

Heading

:

 

Gained in the Chapter!

 

 

 

In Tamil

 


 

 

Kural

No.

Kural Messages

1.      

All letters and languages are meant for the Primordial GOD.

2.      

Education's goal is to obtain wisdom by following the blessed feet of the pure knowledge.

 

3.      

Those who pray the GOD in their heart can lead a long life.

 

4.      

Following the unselfish God's feet for no woes what so ever.

5.      

Whoever praises the God, the true wisdom, will not be affected by right and wrong deeds.

 

6.      

Truthful followers of the GOD, who conquered the five senses, will have long life.

7.      

Only through praying the incomparable GOD, one can ease the anxious mind.

 

8.      

Only through clasping the feet of the God, the sea of the Virtue, it is possible to cross the rest of the seas in life.

9.      

The head that does not think and bow the feet of the eight characteristics, the GOD, is useless.

10.   

Only through clasping the God's feet one can cross this ocean like Life.





 

Chapter

:

1.

The Praise of The God

Heading

:

 

Chapter's Message!

 

 

 

In Tamil

 

Believe in GOD. Bow, pray, follow and you will win.

 

••• End of Chapter: 1 •••