Showing posts with label நீர் இன்று. Show all posts
Showing posts with label நீர் இன்று. Show all posts

Sunday, June 21, 2009

திருக்குறள்: 20


அதிகாரம்: 2. வான் சிறப்பு. திருக்குறள்: 20


நீர் இன்று அமையாது உலகுஎனின், யார்யார்க்கும்
வான் இன்று அமையாது ஒழுக்கு.


பொழிப்புரை (Meaning) :
நீர் இன்றி அமையாது உலகு என்றால், யாவர்க்கும் மழையின்றி அமையாது ஒழுக்கம்.


விரிவுரை (Explanation) :

நீர் இன்றி அமையாது உலகம் ஆகி விட்டால் உலகம் கெட்டுவிடும். அது போலவே மழையின்றி அவ்வுலகத்தில் யாருக்கும் ஒழுக்கம் நிலைபெறாது கெட்டுவிடுவர். அதாவது மழையற்ற உலகத்தில் எத்தகையவரும் நல் ஒழுக்கத்தைப் பேணார். அதனின்று அறம். பொருள், இன்பம் ஆகிய வாழ்க்கை அறங்கள் ஒழுகப்படாது இவ் உலகம் சீர் கெடும் என்பது துணிபு.

மழை பொய்த்தால் உலகில் உயிர்களும் மக்களின் ஒழுக்கமும் குன்றிவிடும். எனவே இவ் உலக உயிர்களுக்கு உயிர்த்திருக்க மட்டுமல்ல, அவர்களின் முறையான வாழ்விற்கும் மழை அத்தியாவசியமானது என்கிறார் வள்ளுவர்.


குறிப்புரை (Message) :

நிலையான உலகிற்கும், முறையான வாழ்விற்கும் மழை மிக அவசியம்.


அருஞ்சொற் பொருள் (Synonyms) :

யார்யார்க்கும்: யாருக்கும், எவருக்கும், எத்திறத்தார்க்கும், எப்படிப்பட்டவர்க்கும்


ஒப்புரை (References) :


சிவவாக்கியம்:283
நீரிலே பிறந்திருந்து நீர்சடங்கு செய்கிறீர்
ஆரைஉன்னி நீரெலாம் அவத்திலே இறைக்கிறீர்
வேரைஉன்னி வித்தைஉன்னி வித்திலே முளைத்தெழும்
சீரைஉன்ன வல்லீரேல் சிவபதம் அடைவிரே.


ஔவையார்:
நெல்லுக் கிறைத்தநீர் வாய்க்கால் வழியோடி
புல்லுக்கும் ஆங்கே பொசியுமாம் - தொல்லுலகில்
நல்லார் ஒருவர் உளரேல் அவர்பொருட்டு
எல்லார்க்கும் பெய்யும் மழை.