Showing posts with label 45. Show all posts
Showing posts with label 45. Show all posts

Sunday, July 19, 2009

திருக்குறள்: 45

அதிகாரம்

:

5 இல் வாழ்க்கை திருக்குறள்

:

45


அன்பும் அறனும் உடைத்து ஆயின், இல்வாழ்க்கை
பண்பும் பயனும் அது.


பொழிப்புரை (Meaning) :
அன்பையும் அறத்தையும் உடையதாக இருக்குமாயின், இல்லற வாழ்க்கையின் பண்பும், பயனும் அதுவே.


விரிவுரை (Explanation) :
ஒருவரின் இல்லற வாழ்க்கை, எல்லோரிடத்தும் அன்பையும், நல் அறத்தையும் செய்யும் தன்மை உடையாதாக இருக்குமானால், அந்த வாழ்க்கையின் உண்மையான குணமும், அதன் பயனாவதும் அவ்விரண்டையும் கொண்டதுவே ஆகும்.

வாழ்வின் இன்பம் என்பதே அனைவரிடத்தும் அன்போடும், நற் பண்போடும் விளங்குதல் தானே. எனவே அதன் பால் அவையே இல்லற வாழ்வில் கடைப்பிடிக்க வேண்டியவை என்பது பொருள்.


குறிப்புரை (Message) :
இல்லற வாழ்க்கையில் பண்பும், பயனும் எனப்படுவது எல்லோரிடத்தும் அன்பும், நற் செயல்களையும் உடையவராக இருத்தலே.


அருஞ்சொற் பொருள் (Synonyms) :
பண்பு - பணிவான அன்பு. நாகரீகம். தன்மையான முறைமை.


ஒப்புரை (References) :

திருமந்திரம்: 276
முன்படைத்து இன்பம் படைத்த முதலிடை
அன்புஅடைத்து எம்பெரு மானை அறிகிலார்
வன்படைத்து இந்த அகலிடம் வாழ்வினில்
அன்புஅடைத் தான்தன் அகலிடத் தானே.

திருமந்திரம்: 279
அன்பின் உள் ளான்புறத்தான் உட லாயுளான்
முன்பின்உள் ளான்முனி வர்க்கும் பிரானவன்
அன்பின்உள் ளாகி அமரும் அரும்பொருள்
அன்பினுள் ளார்க்கே அணைதுணை யாமே.

திருமந்திரம்: 280
இகழ்ந்ததும் பெற்றதும் ஈசன் அறியும்
உகந்தருள் செய்திடும் உத்தம நாதன்
கொழுந்தன்பு செய்தருள் கூரவல் லார்க்கு
மகிழ்ந்தன்பு செய்யும் அருளது வாமே.

திருமந்திரம்: 281
இன்பப் பிறவிக்கு இயல்வது செய்தவன்
துன்பப் பிறவித் தொழில்பல என்னினும்
அன்பிற் கலவிசெய்து ஆதிப் பிரான்வைத்த
முன்பிப் பிறவி முடிவது தானே.

திருமந்திரம்: 282
அன்புறு சிந்தையின் மேலெழும் அவ்வொளி
இன்புறு கண்ணியொடு ஏற்க இசைந்தன
துன்புறு கண்ணி ஐந் தாடும் துடக்கற்று
நண்புறு சிந்தையை நாடுமின் நீரே.

ஔவையார். நல்வழி: 32
ஆறிடும் மேடும் மடுவும்போல் ஆஞ்செல்வம்
மாறிடும் ஏறிடும் மாநிலத்தீர் - சோறிடுந்
தண்ணீரும் வாரும் தருமமே சார்பாக
உண்ணீர்மை வீறும் உயர்ந்து.

***