Monday, August 3, 2009

திருக்குறள்: 60


அதிகாரம்

: 6

வாழ்க்கைத் துணை நலம்

திருக்குறள்

: 60
Chapter : 6

Wife, Life's Partner

Thirukkural

: 60


’மங்கலம்’ என்ப, மனைமாட்சி; மற்று அதன்
நன்கலம் நன் மக்கட் பேறு.

பொழிப்புரை :
மங்கலம் என்பது மனையின் மாண்பே. மேலும் அதற்கு நல் அணிகலன் நல்ல மக்களைப் பெறும் பேறே.

மற்றவர்களிடம் இருந்து இது முற்றிலும் மாறுபட்ட விளக்கம் என்பதை அறியவும்.

விரிவுரை :
இல்லறத்தில் மங்கலம், சுபம் என்பதே இல்லத்தின், மனையின் மாண்பே. அதாவது இல்லத்திற்குப் பெருமை ஒழுக்கமுடைய இல்லத்தவரும், இல்லாளும் இணைந்து இனிதே நடத்தும் வாழ்க்கை ஆகும். மேலும் அதற்கு நல்ல கலம், அணிகலன் என்பது நல்ல மக்கட் பேறே.

நன் கலம் என்பதன் மூலம் மக்களே இல்லத்தின் மாண்பை அடையத் துணை செய்யும் கருவி என்பதுடன், அதுவே சிறந்த அணிகலன் எனும் பொருள்படி வள்ளுவர் அமைத்திருப்பது கவி நயம் உடையது.

வாழ்க்கைத் துணை நலம் என்பது எவ்விதமாக இரு பாலருக்கும் பொதுவானதோ, அதைப் போன்றே மனை மாட்சி என்பதும் இரு பாலருக்கும் பொதுவானதே. கற்புடனும், புகழுடனும் திகழும் இல்லாளும், கடமை தவறாக் கணவனும் கருத்தொருமித்து நடத்தும் இல்லறம் என்பது அவர்களின் இல்லத்திற்கு அழகு. அதற்கு மேலும் அணி தருவது அவர்கள் பெறும் மக்கட் பேறு.

எனவே புனிதமானது, சுபமானது, மங்கலமானது இல்லத்தின் மாண்பே. அதற்கு மேலும் சுகம் தருவது அவர் பெறும் மக்கட் பேறே.

குறிப்புரை :
இனிது நடத்தும் இல்லறமே சுபம். அதை மேலும் நல் வழிச் செலுத்தத் தேவை மக்கட் பேறு.

அருஞ்சொற் பொருள் :
மங்கலம் - சுபம், புனிதம்
மாட்சி - மாண்பு
நன் - நல்ல
கலம் - கலம் எனும் நீந்திக் கடத்தும் கருவியையும், அணியும் கலனையும் ஒருங்கே குறிக்கும் சொல்.

ஒப்புரை :

திருமந்திரம்: 408
நாதன் ஒருவனும் நல்ல இருவருங்
கோது குலத்தொடுங் கூட்டிக் குழைத்தனர்
ஏது பணியென் றிசையும் இருவருக்
காதி இவனே அருளுகின் றானே

திருமந்திரம்: 409
அப்பரி செண்பத்து நான்குநூ றாயிரம்
மெய்ப்பரி செய்தி விரிந்துயி ராய்நிற்கும்
பொய்ப்பரி செய்திப் புகலும் மனிதர்கட்
கிப்பரி சேஇருள் மூடிநின் றானே

திருமந்திரம்: 470
உடல்வைத்த வாறும் உயிர்வைத்த வாறும்
மடைவைத்த ஒன்பது வாய்தலும் வைத்துத்
திடம்வைத்த தாமரைச் சென்னியுள் அங்கிக்
கடைவைத்த ஈசனைக் கைகலந் தேனே

திருமந்திரம்: 1589.
தரிக்கின்ற பல்லுயிர்க் கெல்லாந் தலைவன்
இருக்கின்ற தன்மையை ஏதும் உணரார்
பிரிக்கின்ற இந்தப் பிணக்கறுத் தெல்லாங்
கருக்கொண்ட ஈசனைக் கண்டுகொண் டேனே.

ஔவையார். ஆத்திச்சூடி:
ஒப்புரவு ஒழுகு (உலக நடையை அறிந்து ஒழுகு). 10
ஞயம்பட உரை (இனிமையுடன் பேசு). 17
தந்தை தாய் பேண்.20
தக்கோன் எனத்திரி. 54
தூக்கி வினைசெய். 59
நேர்பட ஒழுகு. 72
புகழ்ந்தாரைப் போற்றி வாழ். 80
பூமி திருத்தி உண். 81
பெரியாரைத் துணைக்கொள். 82

ஔவையார். கொன்றைவேந்தன்: 66
பேதைமை என்பது மாதற்கு அணிகலம்

ஔவையார். நல்வழி:21
நீரும் நிழலும் நிலம்பொதியும் நெற்கட்டும்
பேரும் புகழும் பெருவாழ்வும் - ஊரும்
வருந்திருவும் வாழ்நாளும் வஞ்சமில்லார்க் கென்றும்
தரும்சிவந்த தாமரையாள் தான்.

***


Sunday, August 2, 2009

திருக்குறள்: 59

அதிகாரம்

: 6

வாழ்க்கைத் துணை நலம்

திருக்குறள்

: 59
Chapter : 6

Wife, Life's Partner

Thirukkural

: 59



புகழ் புரிந்த இல் இலோர்க்கு இல்லை-இகழ்வார்முன்
ஏறுபோல் பீடு நடை.

பொழிப்புரை :
புகழ் புரிந்த மனை அற்றோருக்கு இல்லை, தம்மை இகழ்ந்து பேசுவார் முன் சிங்கத்தைப்
போன்ற பெருமித நடை.

மற்றவர்களிடம் இருந்து இது முற்றிலும் மாறுபட்ட விளக்கம் என்பதை அறியவும்.

விரிவுரை :
புகழ் புரிந்த இல்லத்தை அற்றவர்களுக்கு, அதாவது இல்லம் உயிரே போலும் புகழ் பெறும் அமைப்பாக குறிக்கப்பட்டது. அதாவது இல்லறத்தை நல்லறமாக ஓம்பாத இல்லத்தைக் கொண்டவர் இகழ்ச்சி அடைவர். அவ்வாறு திகழுவோர் அவரை இகழ்ந்து உரைப்பார் முன் சிங்கத்தை போன்ற பெருமித நடையோடு உலவ முடியாது.

இல் என்பதற்கு வீடு அதாவது இல்லம் என்றும் மனையாள் அதாவது இல்லாள் என்றும் பொருள் கொள்ளலாம். புகழ் புரிதல் என்பது மனையாளிற்கு கற்புடன் திகழ்வது மட்டுமன்று. கணவனுடன் இனிதே இல்லறம் செய்வித்து, நன் மருமகளாய் புகுந்த வீட்டில் திகழ்வது மட்டுமன்று. கணவனும், மனவியும் இருவருக்கும் சேர்கின்ற புகழ் என்பது அவர்களின் கூட்டு முயற்சியின் அடையாளமாய் இனிய இல்லறத்தில் மக்கட் பேறு பெறுவதே. இல்லறம் என்பதின் பல நிலைகளில் முதல் அறமாய் ஒருமித்த கருத்துடன் இருவரும் இனிதே வாழ்ந்து மக்கட் பேறைப் பெறுதல் குலத்திற்கு மகிழ்ச்சியையும், தொடர்ச்சியையும் தரும். அவ்வாறன்றில் பிறரின் ஏளனப் பேச்சுக்களுக்கு இடமளிக்கும், வாரிசு அற்றவர் அன்றில் ஆண்மை அற்றவர் அன்றில் மலடி என்று ஏசுவதற்கு இடமளிக்கும்.

இல்லத்தாள் கருவுற்று அதை உலகம் அறிய முற்படும்போது அவ்வாறாக இகழ்ந்து பேசுவார் முன் ஏறுபோல் அதாவது ஆண் சிங்கத்தைப் போன்று, திமிறி நிற்கும் காளையைப் போன்று பெருமிதத்தோடு உலவ இயலும். அன்றில் அஃது இயலாதே என்பது பொருள்.

அதாவது புகழ் என்பது இயல்பாக விளங்கும் கற்பு நிலையோ அன்றில் இனிய இல்லறம் நடத்துவது மட்டுமோ அல்ல என்பது விளக்கம். அவை இல்லறத்தில் அவசியத் தேவைகள். அவை இல்லை என்றால் இகழ்ச்சி உண்டாகும் மேலும் அவை மட்டும் புகழ் தருபவை அல்ல. அடுத்த கட்டமாகிய மக்கட் பேறே இல்லத்திற்குப் புகழ் சேர்ப்பவை என்பதே தெளிவு.

எனவே புகழ் புரிகின்ற இல்லம் அற்றோருக்கு, தம்மை இகழ்வார் முன்னே ஏறு போல் பீடு நடையோடு உலவ இயலாது.

குறிப்புரை :
புகழைப் புரிந்து திகழ்கின்ற இல்லமே, இல்லாளே இல்லறத்தில் பெருமிதம் தரத் தக்கது.

அருஞ்சொற் பொருள் :
இல் - இல்லம், இல்லாள், மனை, மனைவி
ஏறு - சிங்கம், சிங்கம் போலும் காளை
பீடு - பெருமிதம்
நடை - நடக்கும் தன்மை

ஒப்புரை :
திருமந்திரம்: 429
பாழே முதலா எழும்பயிர் அப்பயிர்
பாழாய் அடங்கினும் பண்டைப்பாழ் பாழாகா
வாழாச்சங் காரத்தின் மாலயன் செய்தியாம்
பாழாம் பயிராய் அடங்கும்அப் பாழிலே

திருமந்திரம்: 430
தீயவைத் தார்மிங்கள் சேரும் வினைதனை
மாயவைத் தான்வைத்த வன்பதி ஒன்றுண்டு
காயம்வைத் தாங்கலந் தெங்கும் நினைப்பதோர்
ஆயம்வைத் தானுணர் வாரவைத் தானே

திருமந்திரம்: 458
ஏற எதிர்க்கில் இறையவன் றானாகும்
மாற எதிர்க்கில் .(1).அரியவன் றானாகும்
நேரொக்க வைக்கின் நிகர்ப்போதத் தானாகும்
பேரொத்த மைந்தனும் பேரர சாளுமே

திருமந்திரம்: 468
இன்புற் றிருவர் இசைவித்து வைத்தமண்
துன்பக் கலசம் அணைவான் ஒருவனே
ஒன்பது நீர்ச்சால் கலசம் பதினெட்டு
வெந்தது சூளை விளைந்தது தானே

ஔவையார். ஆத்திச்சூடி:
ஒப்புரவு ஒழுகு (உலக நடையை அறிந்து ஒழுகு). 10
ஞயம்பட உரை (இனிமையுடன் பேசு). 17
இணக்கமறிந்து இணங்கு. 19
நன்றி மறவேல்.21
கிழமைப்பட வாழ். (உடலும் பொருளும் பிறருக்கென வாழ்). 34
குணமது கைவிடேல். 36
சான்றோர் இனத்திரு. 43
சீர்மை மறவேல். 46
செய்வன திருந்தச் செய். 49
சேரிடம் அறிந்து சேர். 50
தெய்வம் இகழேல். 60.
நிலையிற் பிரியேல். 67
நேர்பட ஒழுகு. 72
நோய்க்கு இடங் கொடேல். 75.
பீடுபெற நில். 79

***

Saturday, August 1, 2009

திருக்குறள்: 58

அதிகாரம்

: 6

வாழ்க்கைத் துணை நலம்

திருக்குறள்



:
58
Chapter : 6

Wife, Life's Partner

Thirukkural

: 58


பெற்றாற் பெறின் பெறுவர், பெண்டிர், பெருஞ் சிறப்புப்
புத் தேளிர் வாழும் உலகு.

பொழிப்புரை :
துணைவனைக் கணவனாகப் பெற்றவள் அவனுடன் கூடி முயங்கப் பெற்றால், பெற்றாலும் பெறுவர் பெண்டிர், பெருஞ் சிறப்பாகிய புத்துயிர் தரிக்கும், வாழும் உலகு.

மற்றவர்களிடம் இருந்து இது முற்றிலும் மாறுபட்ட விளக்கம் என்பதை அறியவும்.

விரிவுரை :
இல்லறத்தில் கணவனைப் பெற்றவள் அவனுடன் கூடி முயங்கப் பெற்றால் பெற்றாலும் பெறுவர் பெண்டிர், பெருஞ்சிறப்பாகிய புத்துயிர் தரிக்கும், கருவினில் உயிர்கள் வாழும் உலகு. அதாவது தாய்மை ஆகும் நிலை பெற்று, கருவுற்று, புத்துயிர் பெற்றுப் படைக்கும் பெருஞ் சிறப்புப் பெறுவர் என்பது பொருள்.

இல்லறப் பெண்ணிற்குத் தாய்மைப் பேறு பெறுவதே பெருஞ் சிறப்பு, எனவே அன்னிலைக்கான முன் நிலையாக கருவுற்றாலேயே அவர் புத்துயிரைத் தாங்கி அவை வாழும் உலகைப் பெற்றுப் பெருஞ் சிறப்புப் பெற்றுத் திகழுவர் என்பது பொருள்.

கருவுறுதல் என்பதே இல்லறம் இனிதே நடத்தி தாய்மைக்குத் தயாரானதாய் உலகம் அறியும் அடையாளம். அதுவே இல்லாளுக்குப் பெருஞ் சிறப்பைத் தரும் பெருமை. வாழையடி வாழையாய் குலம் தளைக்க, மனிதம் தொடரக் கிடைக்கும் பேறுதானே இல்லறத்தில் வாழ்க்கைத் துணைவி பெறும் முதல் முக்கியமான பேறு? அதைப் பெற்றுப் புத்துயிர் கொடுக்கும் பேறு பெண்மைக்கே பெருஞ் சிறப்புத்தானே?

அந்தப் பேற்றைப் பெற்ற பெண்டிர் அப்புத்தியிர் வாழும் உலகைத் தன்னுள் பெறும் பெருஞ்சிறப்புப் பெறுவர் என்பது இல்லாளுக்கு வாழ்க்கையில் வீடு பேறு பெறுவதைப் போன்றதே.

குறிப்புரை :
பெண் தாய்மைப் பேற்றிற்காகக் கருவுற்றாலேயே, தனக்குள் உயிர்கள் தரிக்கும் உலகம் பெற்று, இல்லறத்தில் பெருஞ் சிறப்புப் பெற்றுத் திகழுவர்.

அருஞ்சொற் பொருள் :
புத் தேளிர் - புத்துயிர் தளிர்க்கும், தரிக்கும், சிறக்கும், பிறக்கும்
தேளி - ஒரு மீன்வகை
தேளிர் எனப்படுவது கருவின் முதல்/ஆரம்ப நிலையாக இருக்கக் கூடும்.

ஒப்புரை :
திருமந்திரம்: 396
ஒருவன் ஒருத்தி விளையாடல் உற்றார்
இருவர் விளையாட்டும் எல்லாம் விளைக்கும்
பருவங்கள் தோறும் பயன்பல வான
திருவொன்றிற் செய்கை செகமுற்று மாமே

திருமந்திரம்: 397
புகுந்தறி வான்புவ னாபதி அண்ணல்
புகுந்தறி வான்புரி சக்கரத் தண்ணல்
புகுந்தறி வான்மலர் மேலுறை புத்தேள்
புகுந்தறி யும்முடிக் காகிநின் றாரே

திருமந்திரம்: 416
அன்பும் அறிவும் அடக்கமு மாய்நிற்கும்
இன்பமும் இன்பக் கலவியு மாய்நிற்கும்
முன்புறு காலமும் ஊழியு மாய்நிற்கும்
அன்புற ஐந்தில் அமர்ந்துநின் றானே

திருமந்திரம்: 417
உற்று வனைவான் அவனே உலகினைப்
பெற்று வனைவான் அவனே பிறவியைச்
சுற்றிய சாலுங் குடமுஞ் சிறுதூதை
மற்றும் அவனே வனையவல் லானே

திருமந்திரம்: 418
உள்ளுயிர்ப் பாயுட லாகிநின் றான்நந்தி
வெள்ளுயி ராகும் வெளியான் நிலங்கொளி
உள்ளுயிர்க் கும்உணர் வேயுட லுட்பரந்
தள்ளுயி ராவண்ணந் தாங்கிநின் றானே

திருமந்திரம்: 420
அணுகினுஞ் சேயவன் அங்கியிற் கூடி
நணுகினும் ஞானக் கொழுந்தொன்று நல்கும்
பணுகினும் பார்மிசைப் பல்லுயி ராகித்
தணிகினும் மண்ணுடல் அண்ணல்செய் வானே

திருமந்திரம்: 459
ஏயங் கலந்த இருவர்தஞ் சாயத்துப்
பாயுங் கருவும் உருவா மெனப்பல
காயங் கலந்தது காணப் பதிந்தபின்
மாயங் கலந்த மனோலய மானதே

திருமந்திரம்: 463
ஒழிபல செய்யும் வினையுற்ற நாளே
வழிபல நீராடி வைத்தெழு வாங்கிப்
பழிபல செய்கின்ற பாசக் கருவைச்
சுழிபல வாங்கிச் சுடாமல்வைத் தானே

திருமந்திரம்: 475
அருளல்ல தில்லை அரனவன் அன்றி
அருளில்லை யாதலி னவ்வோர் உயிரைத்
தருகின்ற போதிரு கைத்தாயர் தம்பால்
வருகின்ற நண்பு வகுத்திடுந் தானே

திருமந்திரம்: 476
வகுத்த பிறவியை மாதுநல் லாளுந்
தொகுத்திருள் நீக்கிய சோதி யவனும்
பகுத்துணர் வாக்கிய பல்லுயிர் எல்லாம்
வகுத்துள்ளும் நின்றதோர் மாண்பது வாமே

ஔவையார். கொன்றைவேந்தன்: 65
பெற்றோர்க்கு இல்லை சுற்றமும் சினமும்

***