Monday, August 3, 2009

திருக்குறள்: 60


அதிகாரம்

: 6

வாழ்க்கைத் துணை நலம்

திருக்குறள்

: 60
Chapter : 6

Wife, Life's Partner

Thirukkural

: 60


’மங்கலம்’ என்ப, மனைமாட்சி; மற்று அதன்
நன்கலம் நன் மக்கட் பேறு.

பொழிப்புரை :
மங்கலம் என்பது மனையின் மாண்பே. மேலும் அதற்கு நல் அணிகலன் நல்ல மக்களைப் பெறும் பேறே.

மற்றவர்களிடம் இருந்து இது முற்றிலும் மாறுபட்ட விளக்கம் என்பதை அறியவும்.

விரிவுரை :
இல்லறத்தில் மங்கலம், சுபம் என்பதே இல்லத்தின், மனையின் மாண்பே. அதாவது இல்லத்திற்குப் பெருமை ஒழுக்கமுடைய இல்லத்தவரும், இல்லாளும் இணைந்து இனிதே நடத்தும் வாழ்க்கை ஆகும். மேலும் அதற்கு நல்ல கலம், அணிகலன் என்பது நல்ல மக்கட் பேறே.

நன் கலம் என்பதன் மூலம் மக்களே இல்லத்தின் மாண்பை அடையத் துணை செய்யும் கருவி என்பதுடன், அதுவே சிறந்த அணிகலன் எனும் பொருள்படி வள்ளுவர் அமைத்திருப்பது கவி நயம் உடையது.

வாழ்க்கைத் துணை நலம் என்பது எவ்விதமாக இரு பாலருக்கும் பொதுவானதோ, அதைப் போன்றே மனை மாட்சி என்பதும் இரு பாலருக்கும் பொதுவானதே. கற்புடனும், புகழுடனும் திகழும் இல்லாளும், கடமை தவறாக் கணவனும் கருத்தொருமித்து நடத்தும் இல்லறம் என்பது அவர்களின் இல்லத்திற்கு அழகு. அதற்கு மேலும் அணி தருவது அவர்கள் பெறும் மக்கட் பேறு.

எனவே புனிதமானது, சுபமானது, மங்கலமானது இல்லத்தின் மாண்பே. அதற்கு மேலும் சுகம் தருவது அவர் பெறும் மக்கட் பேறே.

குறிப்புரை :
இனிது நடத்தும் இல்லறமே சுபம். அதை மேலும் நல் வழிச் செலுத்தத் தேவை மக்கட் பேறு.

அருஞ்சொற் பொருள் :
மங்கலம் - சுபம், புனிதம்
மாட்சி - மாண்பு
நன் - நல்ல
கலம் - கலம் எனும் நீந்திக் கடத்தும் கருவியையும், அணியும் கலனையும் ஒருங்கே குறிக்கும் சொல்.

ஒப்புரை :

திருமந்திரம்: 408
நாதன் ஒருவனும் நல்ல இருவருங்
கோது குலத்தொடுங் கூட்டிக் குழைத்தனர்
ஏது பணியென் றிசையும் இருவருக்
காதி இவனே அருளுகின் றானே

திருமந்திரம்: 409
அப்பரி செண்பத்து நான்குநூ றாயிரம்
மெய்ப்பரி செய்தி விரிந்துயி ராய்நிற்கும்
பொய்ப்பரி செய்திப் புகலும் மனிதர்கட்
கிப்பரி சேஇருள் மூடிநின் றானே

திருமந்திரம்: 470
உடல்வைத்த வாறும் உயிர்வைத்த வாறும்
மடைவைத்த ஒன்பது வாய்தலும் வைத்துத்
திடம்வைத்த தாமரைச் சென்னியுள் அங்கிக்
கடைவைத்த ஈசனைக் கைகலந் தேனே

திருமந்திரம்: 1589.
தரிக்கின்ற பல்லுயிர்க் கெல்லாந் தலைவன்
இருக்கின்ற தன்மையை ஏதும் உணரார்
பிரிக்கின்ற இந்தப் பிணக்கறுத் தெல்லாங்
கருக்கொண்ட ஈசனைக் கண்டுகொண் டேனே.

ஔவையார். ஆத்திச்சூடி:
ஒப்புரவு ஒழுகு (உலக நடையை அறிந்து ஒழுகு). 10
ஞயம்பட உரை (இனிமையுடன் பேசு). 17
தந்தை தாய் பேண்.20
தக்கோன் எனத்திரி. 54
தூக்கி வினைசெய். 59
நேர்பட ஒழுகு. 72
புகழ்ந்தாரைப் போற்றி வாழ். 80
பூமி திருத்தி உண். 81
பெரியாரைத் துணைக்கொள். 82

ஔவையார். கொன்றைவேந்தன்: 66
பேதைமை என்பது மாதற்கு அணிகலம்

ஔவையார். நல்வழி:21
நீரும் நிழலும் நிலம்பொதியும் நெற்கட்டும்
பேரும் புகழும் பெருவாழ்வும் - ஊரும்
வருந்திருவும் வாழ்நாளும் வஞ்சமில்லார்க் கென்றும்
தரும்சிவந்த தாமரையாள் தான்.

***


0 comments:

Post a Comment

குறைகளைச் சுட்டினால் நிறை செய்ய இயலும்...