Sunday, August 2, 2009

திருக்குறள்: 59

அதிகாரம்

: 6

வாழ்க்கைத் துணை நலம்

திருக்குறள்

: 59
Chapter : 6

Wife, Life's Partner

Thirukkural

: 59



புகழ் புரிந்த இல் இலோர்க்கு இல்லை-இகழ்வார்முன்
ஏறுபோல் பீடு நடை.

பொழிப்புரை :
புகழ் புரிந்த மனை அற்றோருக்கு இல்லை, தம்மை இகழ்ந்து பேசுவார் முன் சிங்கத்தைப்
போன்ற பெருமித நடை.

மற்றவர்களிடம் இருந்து இது முற்றிலும் மாறுபட்ட விளக்கம் என்பதை அறியவும்.

விரிவுரை :
புகழ் புரிந்த இல்லத்தை அற்றவர்களுக்கு, அதாவது இல்லம் உயிரே போலும் புகழ் பெறும் அமைப்பாக குறிக்கப்பட்டது. அதாவது இல்லறத்தை நல்லறமாக ஓம்பாத இல்லத்தைக் கொண்டவர் இகழ்ச்சி அடைவர். அவ்வாறு திகழுவோர் அவரை இகழ்ந்து உரைப்பார் முன் சிங்கத்தை போன்ற பெருமித நடையோடு உலவ முடியாது.

இல் என்பதற்கு வீடு அதாவது இல்லம் என்றும் மனையாள் அதாவது இல்லாள் என்றும் பொருள் கொள்ளலாம். புகழ் புரிதல் என்பது மனையாளிற்கு கற்புடன் திகழ்வது மட்டுமன்று. கணவனுடன் இனிதே இல்லறம் செய்வித்து, நன் மருமகளாய் புகுந்த வீட்டில் திகழ்வது மட்டுமன்று. கணவனும், மனவியும் இருவருக்கும் சேர்கின்ற புகழ் என்பது அவர்களின் கூட்டு முயற்சியின் அடையாளமாய் இனிய இல்லறத்தில் மக்கட் பேறு பெறுவதே. இல்லறம் என்பதின் பல நிலைகளில் முதல் அறமாய் ஒருமித்த கருத்துடன் இருவரும் இனிதே வாழ்ந்து மக்கட் பேறைப் பெறுதல் குலத்திற்கு மகிழ்ச்சியையும், தொடர்ச்சியையும் தரும். அவ்வாறன்றில் பிறரின் ஏளனப் பேச்சுக்களுக்கு இடமளிக்கும், வாரிசு அற்றவர் அன்றில் ஆண்மை அற்றவர் அன்றில் மலடி என்று ஏசுவதற்கு இடமளிக்கும்.

இல்லத்தாள் கருவுற்று அதை உலகம் அறிய முற்படும்போது அவ்வாறாக இகழ்ந்து பேசுவார் முன் ஏறுபோல் அதாவது ஆண் சிங்கத்தைப் போன்று, திமிறி நிற்கும் காளையைப் போன்று பெருமிதத்தோடு உலவ இயலும். அன்றில் அஃது இயலாதே என்பது பொருள்.

அதாவது புகழ் என்பது இயல்பாக விளங்கும் கற்பு நிலையோ அன்றில் இனிய இல்லறம் நடத்துவது மட்டுமோ அல்ல என்பது விளக்கம். அவை இல்லறத்தில் அவசியத் தேவைகள். அவை இல்லை என்றால் இகழ்ச்சி உண்டாகும் மேலும் அவை மட்டும் புகழ் தருபவை அல்ல. அடுத்த கட்டமாகிய மக்கட் பேறே இல்லத்திற்குப் புகழ் சேர்ப்பவை என்பதே தெளிவு.

எனவே புகழ் புரிகின்ற இல்லம் அற்றோருக்கு, தம்மை இகழ்வார் முன்னே ஏறு போல் பீடு நடையோடு உலவ இயலாது.

குறிப்புரை :
புகழைப் புரிந்து திகழ்கின்ற இல்லமே, இல்லாளே இல்லறத்தில் பெருமிதம் தரத் தக்கது.

அருஞ்சொற் பொருள் :
இல் - இல்லம், இல்லாள், மனை, மனைவி
ஏறு - சிங்கம், சிங்கம் போலும் காளை
பீடு - பெருமிதம்
நடை - நடக்கும் தன்மை

ஒப்புரை :
திருமந்திரம்: 429
பாழே முதலா எழும்பயிர் அப்பயிர்
பாழாய் அடங்கினும் பண்டைப்பாழ் பாழாகா
வாழாச்சங் காரத்தின் மாலயன் செய்தியாம்
பாழாம் பயிராய் அடங்கும்அப் பாழிலே

திருமந்திரம்: 430
தீயவைத் தார்மிங்கள் சேரும் வினைதனை
மாயவைத் தான்வைத்த வன்பதி ஒன்றுண்டு
காயம்வைத் தாங்கலந் தெங்கும் நினைப்பதோர்
ஆயம்வைத் தானுணர் வாரவைத் தானே

திருமந்திரம்: 458
ஏற எதிர்க்கில் இறையவன் றானாகும்
மாற எதிர்க்கில் .(1).அரியவன் றானாகும்
நேரொக்க வைக்கின் நிகர்ப்போதத் தானாகும்
பேரொத்த மைந்தனும் பேரர சாளுமே

திருமந்திரம்: 468
இன்புற் றிருவர் இசைவித்து வைத்தமண்
துன்பக் கலசம் அணைவான் ஒருவனே
ஒன்பது நீர்ச்சால் கலசம் பதினெட்டு
வெந்தது சூளை விளைந்தது தானே

ஔவையார். ஆத்திச்சூடி:
ஒப்புரவு ஒழுகு (உலக நடையை அறிந்து ஒழுகு). 10
ஞயம்பட உரை (இனிமையுடன் பேசு). 17
இணக்கமறிந்து இணங்கு. 19
நன்றி மறவேல்.21
கிழமைப்பட வாழ். (உடலும் பொருளும் பிறருக்கென வாழ்). 34
குணமது கைவிடேல். 36
சான்றோர் இனத்திரு. 43
சீர்மை மறவேல். 46
செய்வன திருந்தச் செய். 49
சேரிடம் அறிந்து சேர். 50
தெய்வம் இகழேல். 60.
நிலையிற் பிரியேல். 67
நேர்பட ஒழுகு. 72
நோய்க்கு இடங் கொடேல். 75.
பீடுபெற நில். 79

***

0 comments:

Post a Comment

குறைகளைச் சுட்டினால் நிறை செய்ய இயலும்...