Saturday, July 18, 2009

திருக்குறள்: 44

அதிகாரம்

:

5 இல் வாழ்க்கை திருக்குறள்

:

44


பழி அஞ்சிப் பாத்து ஊண் உடைத்தாயின், வாழ்க்கை
வழி எஞ்சல், எஞ்ஞான்றும், இல்.


பொழிப்புரை (Meaning) :
பழிக்கு அஞ்சிப் பகுத்து உண்டு வாழும் வாழ்க்கை உடையவராயின், அவர் தம் வாழ்க்கை வழியில் குறைவு என்பது எக்காலத்திலும் இருக்காது.


விரிவுரை (Explanation) :
பழிக்கு அஞ்சித் தான் சேர்த்த பொருளைப் பிறரோடு பகுத்து உண்ணும் வாழ்க்கை உடையப் பெற்றோருக்கு அவர் தம் வழியில் குறைவு என்பது எப்போதும் இல்லை. அதாவது எப்போதும் நிறைவே அவர் தம் வாழ்க்கை வழியில் என்பது பொருள்.

அதாவது பொருள் சேர்ப்பதல்ல நிறைவு; பழிக்கு அஞ்சிச் சேர்த்த பொருளைப் பிறரோடு பகிர்ந்து உண்ணுதலே உண்மையில் ஒருவருக்கு என்றைக்கும் நிறைவைத் தரும் என்பது பொருள். இதுவே பகுத்துண்ணுவதே பண்பிற்கு அழகு என்றானது.

பகிர்ந்து உண்ணுவதால் குறைவு ஏற்படும் என்பது வெளிப் பார்வைக்கு, வெளி எண்ணிக்கை மட்டுமே தோன்றும். உண்மையில் பகிர்தல், ஈதல் என்பதே இருப்பதைக் காட்டிலும் நிறைவைக் கொண்டு தரும் உத்தியாகும்.

ஆக, பழிக்காகவாவது அஞ்சி ஒருவர் முன்னர் சொன்ன மூவர் மற்றும் ஐந்து இடத்தாரோடாயினும் பகிர்ந்து உண்ணுதலை உடையவராயின் அவர்தம் வாழ்வில் குறைவென்பது எப்போதும் இல்லை என்பது வள்ளுவர் வாக்கு.


குறிப்புரை (Message) :
பகுத்து உண்ணுதல் எப்போதும் நிறைவான வாழ்வைத் தரும்.


அருஞ்சொற் பொருள் (Synonyms) :
எஞ்சல் - குறைதல், மிஞ்சுதல்


ஒப்புரை (References) :

திருமந்திரம்: 250
ஆர்க்கும் இடுமின் அவா஢வர் என்னன்மின்
பார்த்திருந்து உண்மின் பழம்பொருள் போற்றன்மின்
வேட்கை உடையீர் விரைந்தொல்லை உண்ணன்மின்
காக்கை கரைந்துண்ணும் காலம் அறிமினே.

திருமந்திரம்: 252
யாவர்க்கு மாம்இறை வற்குஒரு பச்சிலை
யாவர்க்கு மாம்பசு வுக்கொரு வாயுறை
யாவர்க்கு மாம் உண்ணும் போதொரு கைப்பிடி
யாவர்க்கு மாம்பிறர்க்கு இன்னுரை தானே.

திருமந்திரம்: 255
தன்னை அறியாது தான்நலன் என்னாதுஇங்கு
இன்மை அறியாது இளையர்என்று ஓராது
வன்மையில் வந்திடும்கூற்றம் வருமுன்னம்
தன்மையில் நல்ல தவஞ்செய்யும் நீரே.

திருமந்திரம்: 267
இன்பம் இடரென்று இரண்டுற வைத்தது
முன்பவர் செய்கையி னாலே முடிந்தது
இன்பம் அதுகண்டும் ஈகிலாப் பேதைகள்
அன்பிலார் சிந்தை அறமறி யாரே.

திருமந்திரம்: 268
கெடுவதும் ஆவதும் கேடில் புகழோன்
நடுவல்ல செய்து இன்பம் நாடவும் ஒட்டான்
இடுவதும் ஈவதும் எண்ணுமின் இன்பம்
படுவது செய்யின் பசுவது வாமே.

ஔவையார். கொன்றைவேந்தன்: 4
ஈயார் தேட்டைத் தீயார் கொள்வர்.

ஔவையார். கொன்றைவேந்தன்: 70
மருந்தே ஆயினும் விருந்தோடு உண்.

ஔவையார். நல்வழி: 9
ஆற்றுப் பெருக்கற் றடிகடுமந் நாளுமவ்வாறு
ஊற்றுப் பெருக்கால் உலகூட்டும் - ஏற்றவர்க்கு
நல்ல குடிப்பிறந்தார் நல்கூர்ந்தார் ஆனாலும்
இல்லையென மாட்டார் இசைந்து.

***



Friday, July 17, 2009

திருக்குறள்: 43


அதிகாரம்

:

5 இல் வாழ்க்கை திருக்குறள்

:

43


தென்புலத்தார், தெய்வம், விருந்து, ஒக்கல், தான், என்று ஆங்கு
ஐம்புலத்து ஆறு ஓம்பல் தலை.


பொழிப்புரை (Meaning) :
மறைந்த மூதாதையர் (பிதிரர்), தெய்வம், விருந்தினர், சுற்றத்தார் மற்றும் தான் என்று ஆங்கே ஐ வகையினரையும் ஒழுகி ஓம்புதல் தலையாய கடமை.


விரிவுரை (Explanation) :
வாழ்ந்து மறைந்த மூதாதையர் அதாவது பிதிரர், இறை, வருகை தந்துள்ள விருந்தினர், சுற்றத்தார் எனும் சொந்தங்கள் மற்றும் தான் எனும் இந்த ஐ வகையினரையும் நெறி கெடாமல் ஒழுகி ஓம்புதல் தலையானது, இல் வாழ்க்கையில்.

தென் புலத்தார் என்பது தன் குலத்தின் இறந்த முன்னோர்களைக் குறிக்கும். தென் திசை கடல் கோள்களால் ஆட்பட்டமையால் அத் திசை இறந்தோருக்கு என்றாகியது. இறந்தோருக்குச் செய்யப் படும் நீர்க் கடன்கள் என்பவை அவர்களின் ஆத்ம சாந்திக்காக என்றாலும் அது உண்மையில் அவர்களை நினைவு படுத்திக் கொள்ளும் ஓர் அறச் செயலாகும். அதைப் போலவே இறை ஒழுகுதலின் அவசியத்தை ஏற்கனவே பேசி இருக்கின்றார். விருந்தினர் எனப்படுபவர் நாடி வந்துள்ள நண்பர்கள் அன்பர்கள் எனவே அவர்களை மனம் புண்படாத வாறு ஓம்புதல் பண்பு. சுற்றத்தார் என்பது தம்மைச் சுற்றியுள்ளோர் என்று பொருள் படும்படியான பிறப்பு மற்றும் திருமணத்தினால் உண்டான இயற்கையான உறவுகள், தொடர்புகள். அவர்களே உண்மையில் ஒருவரின் உடனடிச் சமூகம். இறுதியில் சொல்லப்பட்ட ’தான்’. அதாவது மற்றவர்களுக்கு முதலில் மதிப்பு, பிறகே தான் என்பதைக் குறித்தல் வேண்டும் என்பது ஒரு கலாச்சாரத்தின் பண்பு. ஆகவே வள்ளுவர் ‘தான்’ என்பதை இறுதியில் கூறி உள்ளார். ஆனால் உண்மையில் தன்னைப் பேண வேண்டியது ஒருவரின் முதல் கடமை. தான் நன்றாக இருந்தாலே மற்றவர்களைப் பேண இயலும்.

எனவே இந்த வகையிலான ஐந்து இடத்தோரையும் பேணி ஒழுகுதல் இல்லறத்தானின் தலையாய கடமை ஆகும் என்கின்றார் வள்ளுவர்.


குறிப்புரை (Message) :
முன்னோர், தெய்வம், விருந்தினர், சுற்றத்தார் மற்றும் தன்னைப் பேணுதல் இல்லறம் ஒழுகுபவரின் தலையாய கடமை.


அருஞ்சொற் பொருள் (Synonyms) :
தென்புலத்தார் - பிதிர்கள், சொந்த மூதாதையர்
ஒக்கல் - சுற்றத்தார்
ஆறு - ஒழுக்கம்


ஒப்புரை (References) :

திருமந்திரம்: 254
அழுக்கினை ஓட்டி அறிவை நிறையீர்
தழுக்கிய நாளில் தருமமும்செய்யீர்
விழித்திருந்து என்செய்வீர் வெம்மை பரந்து
விழிக்கஅன்று என்செய்வீர் ஏழைநெஞ்சீரே.

திருமந்திரம்: 286
நம்பனை நானா விதப்பொரு ளாகுமென்று
உம்பரில் வானவர் ஓதுந் தலைவனை
இன்பனை இன்பத் திடைநின்று இரதிக்கும்
அன்பனை யாரும் அறியகி லாரே.

திருமந்திரம்: 287
முன்பு பிறப்பும் இறப்பும் அறியாதார்
அன்பில் இறைவனை யாம்அறி வோம்என்பர்
இன்பப் பிறப்பும் இறப்பும் இலான்நந்தி
அன்பில் அவனை அறியகி லாரே.

திருமந்திரம்: 288
ஈசன் அறியும் இராப்பக லுந்தன்னைப்
பாசத்துள் வைத்துப் பரிவுசெய் வார்களைத்
தேசுற்று இருந்து செயலற் றிருந்திடில்
ஈசன்வந்து எம்மிடை ஈட்டிநின் றானே.

திருமந்திரம்: 289
விட்டுப் பிடிப்பதென் மேதகு சோதியைத்
தொட்டுத் தொடர்வன் தொலையாப் பெருமையை
எட்டும் என் ஆருயி ராய்நின்ற ஈசனை
மட்டுக் கலப்பது மஞ்சனம் ஆமே.

ஔவையார். மூதுரை: 17
அற்ற குளத்தின் அறுநீர்ப் பறவைபோல்
உற்றுழித் தீர்வார் உறவல்லர் - அக்குளத்திற்
கொட்டியும் ஆம்பலும் நெய்தலும் போலவே
ஒட்டி யுறுவார் உறவு.

ஔவையார். நல்வழி: 10
ஆண்டாண்டு தோரும் அழுது புரண்டாலும்
மாண்டார் வருவரோ மாநிலத்தீர் - வேண்டா
நமக்கும் அதுவழியே நாம்போம் அளவும்
எமக்கென்னென் றிட்டுண் டிரும்.

Thursday, July 16, 2009

திருக்குறள்: 42

அதிகாரம்

:

5 இல் வாழ்க்கை திருக்குறள்

:

42


துறந்தார்க்கும், துவ்வாதவர்க்கும், இறந்தார்க்கும்,
இல்வாழ்வான் என்பான் துணை.


பொழிப்புரை (Meaning) :
துறவிகளுக்கும், வறியவருக்கும், இறந்த மூதாதையோருக்கும் இல்லற வாழ்வை ஒழுகுபவரே துணை ஆகும்.


விரிவுரை (Explanation) :
இல்லறம் மற்றும் பொருள் இன்பங்களைத் துறந்தவருக்கும், உண்பதற்கு வழியற்ற வறியவர்களுக்கும், இறந்த மூதாதையருக்கும் அதாவது முன்னோர் மற்றும் இறந்துபட்ட உறவினருக்கும் இல் வாழ்க்கை நடத்துபவனே துணை ஆவான்.

பற்றுக்களைத் துறந்த துறிவியருக்கும் வாழ்வாதாரத் தேவைகள் உண்டு. அதைப் போலவே திக்கற்ற வறியவருக்கும் இல் வாழ்க்கை நடத்துபவனே பரிவையும், ஆதாரத்தையும், ஆகாரத்தையும் நல்குபவன். மேலும் இறந்தாருக்கு நீர்க்கடன் செய்பவனும் அவனே.

துறவிகளுக்கும், வறியவருக்கும் கேடு ஏதும் விளைவிக்காது மாறாக அவர்களுக்குத் தேவையான பாதுகாப்புத் தந்து துணை தருவதும் இல் வாழ்க்கை ஒழுகுபவனே.

அதாவது துறவிகளும், வறியவர்களும் இல் வாழ்வானையே சார்ந்திருக்க இயலும் என்பதே இயற்கையான சார்பு நிலை என்பது தெளிவு.

மேலும் இவ்வாறாக ஏனையோரை ஆதரித்து தமது இல் அறத்தை ஒழுக வேண்டியது இல் வாழ்க்கை வாழ்பவனின் கடமை என்பது வள்ளுவர் கூறும் மறை பொருள்.


குறிப்புரை (Message) :
துறவிகளுக்கும், வறியவருக்கும், இறந்தாருக்கும் இல்லற வாழ்வினனே துணை ஆக இருக்க வேண்டியவன்.


அருஞ்சொற் பொருள் (Synonyms) :
துவ்வாதார் - இல்லாதவர், தரித்திரர்


ஒப்புரை (References) :

திருமந்திரம்: 297
வழித்துணை யாய்மருந் தாயிருந் தார்முன்
கழித்துணை யாம்கற் றிலாதவர் சிந்தை
ஒழித்துணை யாம்உம் பராய்உல கேழும்
வழித்துணை யாம்பெருந் தன்மைவல் லானே.

திருமந்திரம்: 312
நில்லா நிலையை நிலையாக நெஞ்சத்து
நில்லாக் குரம்பை நிலையென்று உணர்வீர்காள்
எல்லா உயிர்க்கும் இறைவனே ஆயினும்
கல்லாதார் நெஞ்சத்துக் காணஒண் ணாதே.

***