Wednesday, August 12, 2009

திருக்குறள்: 69


அதிகாரம்

: 7

மக்கட் பேறு

திருக்குறள்

: 69
Chapter : 7

Children

Thirukkural

: 69


ஈன்ற பொழுதினும் பெரிது உவக்கும்-தன் மகனைச்
சான்றோன் எனக் கேட்ட தாய்.

பொழிப்புரை :
பெற்ற பொழுதினைக் காட்டிலும் பெரிதும் மகிழ்வார், தன் மகனைச் சான்றோன் எனப் பிறர் சொல்வதைக் கேட்கின்ற தருணத்தில் தாய்.

விரிவுரை :
தன் மகனைக் கல்வி கேள்விகளில் சிறந்த சான்றோன் என ஊரார் சொல்வதைக் கேட்ட தாய், தான் அம் மகனைப் பெற்ற பொழுதில் கிட்டிய மகிழ்ச்சியைக் காட்டிலும் மிக்க உவப்பை, மகிழ்ச்சியை அப்போழ்து கொள்ளுவாள்.

தாய்க்குத் தன் பிள்ளையின் பெருமையை ஒரு வேளை உணர்ந்திருந்தாலும் பிறர் மெச்சக் கேட்பது என்பது சமூக அங்கீகாரத்தைப் பெற்றதை மெய்ப்பித்ததை உணருதலே.

தாயானவள் முன்னூறு நாள் சுமந்து, தன் மகவைப் பெறும்போது வலியுற்று அவதியுற்று பெற்றெடுத்த பின்னர் அக்குழந்தையைக் கண்டு மிகவும் மகிழ்ச்சி கொள்ளுவாள். அபோது அந்த மகிழ்ச்சியில் அவளின் அத்தனைத் துயரும் கரைந்து போகும். அப்படிப்பட்ட தாய்க்கு அதைக்காட்டிலும் மகிழ்ச்சி ஒன்றும் உண்டாம். அதுவே மக்கள் சான்றோராய்த் திகழ்வதை மற்றோர் பேசக் கேட்கும் கணம். கல்வி, கேள்வி, வீர, சாகச, விளையாட்டு, எழுத்து, மருத்துவ, கலை, அதிகார, அறிவியல், நீதி போன்ற எந்தத் துறைகளின் சாதனைகளிலும் சிறந்து விளங்குவோரை மற்றோர் புகழும் போழ்து அதிகம் மகிழுபவள் அவரைப் பெற்ற அன்னையே.

எதையுமே எதிர்பாராது வாழ்நாள் முழுவதும் அன்பை மட்டுமே பொழியும் தாய்க்கு, தனது வாழ்வை அர்ப்பணித்து இவ் உடலையும், உயிரையும், வாழ்வையும் கொடுத்த தாய்க்கு, அவர் மனம் மகிழ்ச்சி கொள்ளும்படி செய்தல் மக்களின் கடமை அல்லவா? அதைக் காட்டிலும் பெற்ற தாய்க்கு நன்றியை மக்கள் வேறு எவ்விதம் காட்டி விட முடியும்?

எனவே குழந்தைகாள் நல் அறம் ஓம்பி, கல்வி கேள்விகளில் தேர்ந்து சிறந்த குடிமகனாய், பிறர் மெச்சும் சான்றோனாய்த் திகழ்ந்து உங்கள் பெற்றோரை மகிழ்விக்க வேண்டும் என்பது பொருள்.

மேலும் தாயின் மகிழ்ச்சி மக்களை இன்னும் மேம்படுத்தும். அவர்களின் வாழ்வு இன்னும் சிறக்கும். இல்லத்தில் இனிமை நிறையும். சென்ற இடம் எல்லாம் புகழ் கிட்டும். நல்லவையே நடக்கும்.

தாய் மனம் குளிர்ந்தால், மகிழ்ந்தால் வெற்றிகள் தொடரும்.

யாரோ சொன்ன இந்த அற்புதமான மொழியை நினைவு கொள்ளுங்கள்: “கடவுள் எல்லா இடத்திலும் இருக்க முடியாது என்பதற்காகவே அன்னையரைஅனுப்பினார்”.


குறிப்புரை :
பிள்ளைகளின் வளர்ச்சியும் அவர்தம் புகழுமே பெற்ற அன்னையர்க்கு உண்மையான மகிழ்ச்சி.

அருஞ்சொற் பொருள் :
தாய் - அன்னை, அம்மா, தாய், தாயார், பெற்றவள், ஆத்தாள்.

ஒப்புரை :

திருமந்திரம்: 288
ஈசன் அறியும் இராப்பக லுந்தன்னைப்
பாசத்துள் வைத்துப் பரிவுசெய் வார்களைத்
தேசுற்று இருந்து செயலற் றிருந்திடில்
ஈசன்வந்து எம்மிடை ஈட்டிநின் றானே.

திருமந்திரம்: 394
நின்றுயி ராக்கு நிமலன்என் னாருயிர்
ஒன்றுயி ராக்கும் அளவை உடலுற
முன்துய ராக்கும் உடற்குந் துணையதா
நன்றுயிர்ப் பானே நடுவுநின் றானே

திருமந்திரம்: 395
ஆகின்ற தன்மையில் அக்கணி கொன்றையன்
வேகின்ற செம்பொனின் மேலணி மேனியன்
போகின்ற சீவன் புகுந்துட லாய்உளன்
ஆகின்ற தன்மைசெய் ஆண்டகை யானே

திருமந்திரம்: 450
ஆரும் அறியாத அண்டத் திருவுருப்
பார்முத லாகப் பயிலுங் கடத்திலே
நீரினிற் பால்போல நிற்கின்ற நேர்மையைச்
சோராமற் காணுஞ் சுகம்அறிந் தேனே

திருமந்திரம்: 468
இன்புற் றிருவர் இசைவித்து வைத்தமண்
துன்பக் கலசம் அணைவான் ஒருவனே
ஒன்பது நீர்ச்சால் கலசம் பதினெட்டு
வெந்தது சூளை விளைந்தது தானே

திருமந்திரம்: 476
வகுத்த பிறவியை மாதுநல் லாளுந்
தொகுத்திருள் நீக்கிய சோதி யவனும்
பகுத்துணர் வாக்கிய பல்லுயிர் எல்லாம்
வகுத்துள்ளும் நின்றதோர் மாண்பது வாமே

திருமந்திரம்: 1053
அவளை அறியா அமரரும் இல்லை
அவளன்றிச் செய்யும் அருந்தவம் இல்லை
அவளன்றி ஐவரால் ஆவதொன்று இல்லை
அவளன்றி ஊர்புகும் ஆறறி யேனே.

திருமந்திரம்: 1054
அறிவார் பராசத்தி ஆனந்தம் என்பர்
அறிவா ரருவுரு வாம்அவள் என்பர்
அறிவார் கருமம் அவள்இச்சை என்பர்
அறிவார் பரனும் அவளிடத் தானே.

திருமந்திரம்: 1073
ஓங்காரி என்பாள் அவளொரு பெண்பிள்ளை
நீங்காத பச்சை நிறத்தை உடையவள்
ஆங்காரி யாகியே ஐவரைப் பெற்றிட்டு
ரீங்காரத் துள்ளே இனிதிருந் தாளே.

திருமந்திரம்: 1074
தானே தலைவி எனநின்ற தற்பரை
தானே உயிர்வித்துத் தந்த பதினாலும்
வானோர் தலமும் மனமும்நற் புத்தியும்
தானே சிவகதி தன்மையும் ஆமே.

திருமந்திரம்: 1103
தையல் நல் லாளைத் தவத்தின் தலைவியை
மையலை நோக்கும் மனோன்மணி மங்கையைப்
பையநின் றேத்திப் பணிமின் பணிந்தபின்
வெய்ய பவம்இனி மேவகி லாவே.

திருமந்திரம்: 1104
வேயன தோளி விரையுறு மென்மலர்
ஏய குழலி இளம்பிறை ஏந்திழை
தூய கடைமுடிச் சூலினி சுந்தரி
ஏயெனது உள்ளத்து இனிதுஇருந் தாளே.

திருமந்திரம்: 1109
அஞ்சொல் மொழியாள் அருந்தவப் பெண்பிள்ளை
செஞ்சொல் மடமொழி சீருடைச் சேயிழை
தஞ்சமென்று எண்ணித்தன் சேவடி போற்றுவார்க்கு
இன்சொல் அளிக்கும் இறைவியென் றாரே.

திருமந்திரம்: 1110
ஆருயி ராயும் அருந்தவப் பெண்பிள்ளை
காரியல் கோதையுள் காரணி நாரணி
ஊரும் உயிரும் உலகும் ஒடுக்கிடும்
கோரியென் உள்ளம் குலாவிநின் றாளே.

திருமந்திரம்: 1237
நின்றனள் நேரிழை யாளடு நேர்பட
ஒன்றிய உள்ளளி யாலே உணர்ந்தது
சென்ற பிராணிகள் சிந்தையில் வேண்டிய
துன்றிடு ஞானங்கள் தோன்றிடும் தானே.

திருமந்திரம்: 1251
பெற்றாள் பெருமை பெரிய மனோன்மணி
நற்றாள் இறைவனே நற்பயனே என்பர்
கற்றான் அறியும் கருத்தறி வார்கட்குப்
பொற்றாள் உலகம் புகல்தனி யாமே.

பட்டினத்தார்:
தாயாருக்கு தகனக் கிரியை செய்யும்போது பாடியது.

அரிசியோ நான் இடுவேன் ஆத்தாள் தனக்கு
வரிசையிட்டுப் பார்த்து மகிழாமல் - உருசியுள்ள
தேனே அமிர்தமே செல்வத் திரவியப்பூ
மானே என அழைத்த வாய்க்கு?

அபிராமி பட்டர்:
ஆத்தாளை எங்கள் அபிராமவல்லியை; அண்டமெல்லாம்
பூத்தாளை, மாதுளம் பூம் நிறத்தாளை, புவி அடங்கக்
காத்தாளை, அங்கையிற் பாங்குசமும் கருப்பு வில்லும்
சேர்த்தாளை, முக்கண்ணியை தொழுவார்க்கு ஒரு தீங்கில்லையே.

கண்ணதாசன்:
பெற்றெடுத்த உள்ளம் என்றும் தெய்வம், தெய்வம்!

கண்ணதாசன்:
அன்னையைப் போல் ஒரு தெய்வம் இல்லை; அவள்
அடிதொழ மறுப்பவர் மனிதரில்லை, மண்ணில் மனிதரில்லை.

ஔவையார், கொன்றைவேந்தன்:
அன்னையும் பிதாவும் முன்னறி தெய்வம். 1
தந்தை சொல் மிக்க மந்திரமில்லை. 37
தாயிற் சிறந்த கோயிலுமில்லை. 38

ஔவையார். நல்வழி: 34
கல்லானே யானாலுங் கைப்பொருளொன் றுண்டாயின்
எல்லாருஞ் சென்றங்கு எதிர்கொள்வர்-இல்லானை
இல்லாளும் வேண்டாள்மற்று ஈன்றெடுத்த தாய்வேண்டாள்
செல்லாது அவன்வாயிற் சொல்.

மாணிக்கவாசகர், திருவாசகம், போற்றி திருஅகவல்:
யானை முதலா எறும்பு ஈறாய
ஊனம் இல் யோனியின் உள்வினை பிழைத்தும்
மானுடப் பிறப்பினுள் மாதா உதரத்து
ஈனம் இல் கிருமிச் செருவினில் பிழைத்தும்
ஒரு மதித் தான்றியின் இருமையில் பிழைத்தும்
இருமதி விளைவின் ஒருமையில் பிழைத்தும்
மும்மதி தன்னுள் அம்மதம் பிழைத்தும்
ஈர் இரு திங்களில் பேர் இருள் பிழைத்தும்
அஞ்சு திங்களில் முஞ்சுதல் பிழைத்தும்
ஆறு திங்களில் ஊறு அலர் பிழைத்தும 20

ஏழு திங்களில் தாழ் புவி பிழைத்தும்
எட்டுத் திங்களில் கட்டமும் பிழைத்தும்
ஒன்பதில் வருதரு துன்பமும் பிழைத்தும்
தக்க தசமதி தாயொடு தான்படும்
துக்க சாகரம் துயர் இடைப்பிழைத்தும்
ஆண்டுகள் தோறும் அடைந்த அக்காலை
ஈண்டியும் இருத்தியும் எனைப்பல பிழைத்தும்
காலை மலமொடு கடும்பகல் பசி நிசி
வேலை நித்திரை யாத்திரை பிழைத்தும்
கரும்குழல் செவ்வாய் வெள்நகைக் கார்மயில் 30

ஒருங்கிய சாயல் நெருங்கி உள் மதர்த்துக்
கச்சு அற நிமிர்ந்து கதிர்ந்து முன் பணைத்து
எய்த்து இடைவருந்த எழுந்து புடைபரந்து
ஈர்க்கு இடைபோகா இளமுலை மாதர்தம்
கூர்த்த நயனக் கொள்ளையில் பிழைத்தும்
பித்த உலகர் பெரும் துறைப் பரப்பினுள்
மத்தம் களிறு எனும் அவாவிடைப் பிழைத்தும்
கல்வி என்னும் பல்கடல் பிழைத்தும்
செல்வம் என்னும் அல்லலில் பிழைத்தும்
நல்குரவு என்னும் தொல்விடம் பிழைத்தும் 40

....
....
அன்பு எனும் ஆறு கரை அது புரள
நன்புலன் ஒன்றி நாத என்று அரற்றி
உரை தடுமாறி உரோமம் சிலிர்ப்ப
கரமலர் மொட்டித்து இருதயம் மலரக்
கண்களி கூர நுண் துளி அரும்ப
சாயா அன்பினை நாள்தொரும் தழைப்பவர்
தாயே ஆகி வளர்த்தனை போற்றி
மெய் தரு வேதியன் ஆகி வினைகெடக்
கைதரவல்ல கடவுள் போற்றி
ஆடக மதுரை அரசே போற்றி 90
....

***

In English:

Indra pozhuthinum perithu uvakkum - than makanaich
chAndrOn enak kEtta thAy.

Meaning :
Mother rejoices more than the delivered moment of her son when she hears others praises him as the wise.

Explanation :
When a mother hears the praises by others that her son is a scholar and wise, she will rejoice and proud more than the time of birth she gave to him.

Though the mother knew before her son's excellence, she will feel happier when the others say it because it is a proof, approval and recognition at large.

Generally a mother will rejoice at the birth of her child by looking at the newborn after the pregnancy of three hundred days of carrying and the pain she went through during delivery. In her rejoice all the pain she went through will disappear. But for such a mother still there is a happier moment. That is where when her child is appreciated as wise by one and all. All the experts of any discipline say educationists, veterans, players, writers, medicos, artists, governance, managers, scientist, judges when get appreciated by others actually their mothers are the ones who get more happier.

For the mother who is showering her love without expecting anything throughout her life, who has dedicated her life who has given the body, birth and life, is it not the duty of her children to make her happy? Is there any other befitting way by which the children can offer her thanks for everything of the maternal quality?

Therefore this kural message is for the children to practice good disciplines, excel in their studies, to be as good citizens, to be the wise and scholars praised by others to make their respective parents happy.

Also making mothers happy will make the children excel more. Their life will be better. Happiness will fill their home. They get fame wherever they go. All good things will happen.

Success will continue for those who make their mother's happy.

Remember this beautiful quote of somebody 'God cannot be everywhere, that's why he sent mothers'.


Message :
Growth and fame of her child are the true joy for mothers.

***

3 comments:

தமிழ் காதலன் said...

//அன்னையைப் போல் ஒரு தெய்வம் இல்லை; அவள்
அடிதொழ மறுப்பவர் மனிதரில்லை, மண்ணில் மனிதரில்லை.//


நிதர்சனமான உண்மை.

சுப.நற்குணன்,மலேசியா. said...

உங்கள் வலைப்பதிவைத் தொடர்ந்து படித்து வருகிறேன்.. பெரும் பயனடகிறேன்.

மிகவும் அருமையாக எழுதுகிறீர்கள்; பல இலக்கியப் பாடல்கள், தனிப்பாடல்கள், திரைப்பாடல்களை எல்லாம் நன்றாக தொகுத்துக் கொடுக்கிறீர்கள்.

பல நூல்களில் தேடவேண்டியதை உங்கள் பதிவில் ஒரே இடத்தில் படிக்க முடிகிறது.

உங்கள் பணி போற்றுதலுக்குரியது.

குறள் அமுதம் வலைப்பதிவை என்னுடைய திருமன்றில் திரட்டியில் இணைத்துள்ளேன். காண்க.
http://thirumandril.blogspot.com/

நற்றமிழ்ப் பணி தொடர்க!

Uthamaputhra Purushotham said...

பாராட்டுக்களுக்கு நன்றிகள் நண்பர்களே.

சுப. நற்குணன் அவர்களுக்கு, திருமன்றில் இணைத்தமைக்கு கூடுதல் நன்றிகள்.

Post a Comment

குறைகளைச் சுட்டினால் நிறை செய்ய இயலும்...