Monday, July 6, 2009

திருக்குறள்: 32

அதிகாரம்

:

4 அறன் வலியுறுத்தல் திருக்குறள்

:

32


அறத்தின் ஊஉங்கு ஆக்கமும் இலை; அதனை
மறத்தலின் ஊங்கு இல்லை கேடு.


பொழிப்புரை (Meaning) :
அறத்தை விஞ்சிய ஆக்கமும் இல்லை; அதனை ஒழுக மறப்பதைக் காட்டிலும் கேடும் இல்லை.


விரிவுரை (Explanation) :
மனிதனுக்கு அறத்தை ஒழுகுவதினால் விளையும் ஆக்கத்தை மீறியது எதுவும் இல்லை. அவனுக்கு அறத்தைப் பேண மறப்பதினால் விளையும் கேட்டை மீறயதும் எதுவும் இல்லை. எனவே அறம் எனும் ஒழுக்கத்தை மனிதன் வழுவாது, தவாறு ஒழுக வேண்டியது அவசியமாகின்றது.

வாழ்க்கையை இப்படித்தான் வாழ வேண்டும் என்று சான்றோராலும், ஆன்றோராலும் உய்த்துணர்ந்து செய்யப்பட்ட ஒழுங்கு முறைகளே அறம் எனப்படும் நெறிகள். அவை
ஒழுகப்படாது போனால் வாழ்வு கெடும் என்பதும் ஒரு நெறியே. உதாரணத்திற்கு தீவிரவாதம் என்பது அறநெறி அல்ல, ஆனால் அந்த முறையைப் பற்றுபவர்களால் அனைவருக்கும், அவருக்குமே அது கேட்டைத்தான் உண்டாக்கும். அவை ஆக்கபூர்வமான வழிகளல்ல.


குறிப்புரை (Message) :
அறத்தை ஒழுகினால் அதுவே மேன்மை; ஒழுகாவிடின் அதுவே பெருங் கேடு.


அருஞ்சொற் பொருள் (Synonyms) :
ஊங்கு - விஞ்சிய, மீறிய, தாண்டிய
ஆக்கம் - செயல்பாடு, தொழில், ஒழுகுதல்.


ஒப்புரை (References) :

ஔவையார். நல்வழி: 1
புண்ணியம்ஆம் பாவம்போம் போனநாட் செய்தஅவை
மண்ணில் பிறந்தார்க்கு வைத்தபொருள் - எண்ணுங்கால்
ஈதொழிய வேறில்லை எச்சமயட் தோர்சொல்லுந்
தீதொழிய நன்மை செயல்.

ஔவையார். நல்வழி: 22
பாடுபட்டுத் தேடிப் பணத்தைப் புதைத்துவைத்துக்
கேடுகெட்ட மானிடரே கேளுங்கள் - கூடுவிட்டிங்
காவிதான் போயினபின்பு யாரே யநுபவிப்பார்
பாவிகாள் அந்தப் பணம்.

சிவவாக்கியர். அறிவு நிலை: 515
யோகசாடை காட்டுவார் உயரவும் எழும்புவார்
வேகமாக அட்டசித்து வித்தைகற்று நெட்டுவார்
மோகம் கொண்டு மாதரின் மூத்திரப்பை சிக்கிப்பின்
பேயது பிடித்தவர் போல் பேருலகில் சாவரே.

பட்டினத்தார். முதல்வன் முறையீடு:
புல்லாகிப் பூடாய்ப் புலந்தநாள் போதாதோ?
கல்லாய் மரமய்க் கழிந்தநாள் போதாதோ? 21

கீரியாய்க் கீடமாய்க் கெட்டநாள் போதாதோ?
நீரியாய் ஊர்வனவாய் நின்றநாள் போதாதோ? 22

பூதமொடு தேவருமாய்ப் போன்நாள் போதாதோ?
வேதனை செய் தானவராய் வீந்தநாள் போதாதோ? 23

அன்னை வயிற்றில் அழிந்தநாள் போதாதோ?
மன்னவனாய் வாழ்ந்து மரித்தநாள் போதாதோ? 24

தாயாகித் தாரமாய்த் தாழ்ந்தநாள் போதாதோ?
சேயாய்ப் பொருடனுமாய்ச் சென்றநாள் போதாதோ? 25

நோய் உண்ண வேமெலிந்து நொந்தநாள் போதாதோ?
பேய் உண்ணப் பேயாய்ப் பிறந்தநாள் போதாதோ? 26

ஊனவுடன் கூன்குருடாய் உற்றநாள் போதாதோ?
ஈனப் புசிப்பில் இளைத்தநாள் போதாதோ? 27

பட்டகளையும் பரதவிப்பும் போதாதோ?
கெட்டநாள் கெட்டேன் என்று கேளாதும் போதாதோ? 28

நில்லாமைக்கே அழுது நின்றநாள் போதாதோ?
எல்லாரும் என்பாரம் எடுத்தநாள் போதாதோ? 29

காமன் கணையால் கடபட்டல் போதாதோ?
ஏமன் சுரத்தால் இடியுண்டல் போதாதோ? 30


***


0 comments:

Post a Comment

குறைகளைச் சுட்டினால் நிறை செய்ய இயலும்...