Tuesday, July 21, 2009

திருக்குறள்: 47


அதிகாரம்

:

5 இல் வாழ்க்கை திருக்குறள்

:

47


இயல்பினான் இல்வாழ்க்கை வாழ்பவன் என்பான்
முயல்வாருள் எல்லாம் தலை.


பொழிப்புரை (Meaning) :
இல் வாழ்க்கையை நல் இயல்பான நன் நெறிகளோடு வாழ்பவன் என்போன், முக்தியாகிய வீடு பேற்றை முயல்வோர் எல்லாருள்ளும் தலைமையானவன் ஆவான்.


விரிவுரை (Explanation) :
இல்லற வாழ்க்கையை அதன் நல் இயல்போடு; நல் அறத்தோடு வாழ்கின்றவன், வீடு பேறு முக்தியினை முயல்கின்ற அனைவருள்ளும் தலைமை ஆனவன் ஆவான். அதாவது இல் வாழ்வை நல் இயல்போடு வாழும் முறைமையே முக்தியைப் பெறும் வழிகளில் தலை சிறந்தது என்பது பொருள்.

முக்தியினைப் பெறுவதே மனித வாழ்வின் நோக்கம். எனவே அதுவே அனைவரின் முயற்சியும் ஆகும். ஆயின் அதை அனைத்தையும் துறந்து முயற்சிப்பதைக் காட்டிலும் அன்றில் இல்லறமற்ற வேறு எத்தகைய முயற்சிகளைக் காட்டிலும், நல் இல்லற வாழ்வோடு முயற்சிப்பதே மிகவும் சிறப்பு மிக்கதாகும். பற்றறுத்தவர்கள், பிரம்மச்சாரிகள், தவசிகள் இவர்கள் எல்லாரையும் விட இல்லறத்தானின் முயற்சியே தலை சிறந்தது என்பது பொருள்.

காரணம் இல் வாழ்வானே இயற்கை நியதியாகிய மனிதத் தொடர்ச்சிக்கு வித்திடுபவன். அத்தோடு இல் வாழ்க்கையையே தவமாகச் செய்கின்றவன். சந்தடி வாழ்க்கையை ஒதுக்கி அமைதி தேடப் பற்றறுக்காமல், வாழ்வியல் பிரச்சினைகளின் ஊடே அமைதியைப் பேணி வாழ்வதே இயல்பான வாழ்க்கை முறை. அம்முறையிலும் ஒழுக்கத்துடன் திகழ்ந்து அனைவரையும் பேணி, தன்னை நம்பியோருக்கும் வாழ்வு அளித்து, மற்றையோரைக் காட்டிலும் அதிகச் சுமைகளைத் தாங்கி செயல்படுகின்றான். எனவே அவன் முக்திக்கு முயலுவானே ஆகில் அவனுக்கே முன்னுரிமை என்பது நியாயம் தானே.


குறிப்புரை (Message) :
ஒழுங்கான இல்லற வாழ்வே வீடு பேற்றினைத் தரும் சிறந்த வழி.


அருஞ்சொற் பொருள் (Synonyms) :
இயல்பினான் - இயல்பை ஒழுகினான்


ஒப்புரை (References) :

திருமந்திரம்: 326
காமமும் கள்ளும் கலதிகட் கேயாகும்
மாமல மும்சம யத்துள் மயலுறும்
போமதி யாகும் புனிதன் இணையடி
ஓமய ஆனந்தத் தேறல் உணர்வுண்டே.

திருமந்திரம்: 327
வாமத்தோர் தாமும் மதுவுண்டு மாள்பவர்
காமத்தோர் காமக்கள் ளுண்டே கலங்குவர்
ஓமத்தோர் உள்ளொளிக் குள்ளே உணர்வர்கள்
நாமத்தோர் அன்றே நணுகுவர் தாமே.

திருமந்திரம்: 328
உள்ளுண்மை ஓரார் உணரார் பசுபாசம்
வள்ளன்மை நாதன் அருளினன் வாழ்வுறார்
தெள்ளுண்மை ஞானச் சிவயோகம் சேர்வுறார்
கள்ளுண்ணும் மாந்தர் கருத்தறி யாரே.

திருமந்திரம்: 329
மயக்கும் சமய மலமன்னு மூடர்
மயக்கு மதுவுண்ணும் மாமூடர் தேரார்
மயக்குறு மாமாயை மாயையின் வீடு
மயக்கில் தெளியின் மயக்குறும் அன்றே.

***

0 comments:

Post a Comment

குறைகளைச் சுட்டினால் நிறை செய்ய இயலும்...