Sunday, November 29, 2009

திருக்குறள்:152 (தீங்கினைப் பொறுத்தலினும் மறத்தல் நன்று...)

அதிகாரம்

: 16

பொறையுடைமை

திருக்குறள் : 152

தீங்கினைப் பொறுத்தலினும் மறத்தல் நன்று...

In English

பொறுத்தல், இறப்பினை என்றும்; அதனை
மறத்தல் அதனினும் நன்று.

பொழிப்புரை :
பிறர் செய்த எல்லை மீறிய தீங்கினைப் பொறுத்தல் எப்போதும் நன்று; அத்தீங்கை மறத்தல் பொறுத்தலினும் நன்று.

விரிவுரை :
பிறர் அத்துமீறிச் செய்யும் செயலைப் பொறுத்தல் என்றைக்கும் நன்று; அச்செயலை மறத்தல் பொறுத்துக் கொள்வதைக் காட்டிலும் நன்று.

மற்றவர் அத்துமீறிச் செய்யும் தீவினைக்கு, நாமும் எதிர்வினையாக தீங்கினை இழைத்தோமானால் அவரும் தீவினையைத் தொடருவார். இதனால் எதிர்ப்பும், தீவினைக் குற்றங்களுமே தொடரும். என்றும் பகையும், தீராத் துயருமே மிஞ்சும்.

மாறாக அறிந்தோ, அறியாமலோ மற்றவர் ஆற்றும் எல்லை மீறிய தவறைச் சுட்டிக் காட்டி, அதனை மன்னித்துப் பொறுத்துக் கொண்டால் அவர் திருத்திக் கொள்ளவும், திருந்தவும் அஃது வாய்ப்பாகும். உடனடியாக உணராதார் கூட காலம் கடந்து தம் தவறுக்கு நாணி வருந்தும் நாளும் கூடவே விரைவில் வரும். மேலும் இச் செய்கையை நாம் பொறுத்துக் கொண்டதோடு மட்டுமல்லாமல் உடனடியாக மறந்துவிட்டால், அதனால் ஏற்படும் எத் துயரும் நம்மை அண்டாது நன்மை பயக்கும். தீயவற்றை மறத்தலே அறிவுடைமை அல்லவா?

”இறப்பினை” யே அதாவது மரணத்தையே, மரணத்தின் வலியையே நமக்குக் கொடுத்தவராயினும் பொறுத்தல் நன்று. அதாவது நமக்கு உரியவரைக் கொலை செய்திருப்பினும் கூட மன்னித்துப் பொறுத்துக் கொள்ளுதல் நல்லது. அதனினும் நல்லது அச் செயலை அடியோடு மறத்தல் மிகவும் நல்லது என்பது இங்குள்ள மறை பொருள்.

எனவே எக்காலத்திலும் தீங்கிழைத்தவரைத் தண்டிக்கும் சிறந்த வழி அவரின் தீங்கைப் பொறுத்துக் கொண்டு ஒதுக்கித் தள்ளுவதே. அதனினும் சிறந்த செயல், அத் தீங்கை அக்கணமே மறந்து விடுதல்.

குறிப்புரை :
அத்து மீறலைப் பொறுத்தல் எப்போதும் நன்று; அதனை மறத்தல் அதனினும் நன்று.

அருஞ்சொற் பொருள் :
இறப்பினை - எல்லை மீறுதல், வரம்பு கடத்தல், அத்து மீறல், மிகுதி, மரணம்.

ஒப்புரை :

திருமந்திரம்: 540
ஓலக்கம் சூழ்ந்த உலப்பிலி தேவர்கள்
பாலொத்த மேனியன் பாதம் பணிந்துய்ய
மாலுக்கும் ஆதி பிரமற்கும் மன்னவன்.
ஞாலத் திவன்மிக நல்லன்என் றாரே

திருமந்திரம்: 1118.
கன்னியுங் கன்னி அழிந்தனள் காதலி
துன்னியங் கைவரைப் பெற்றனள் தூய்மொழி
பன்னிய நன்னூற் பகவரும் அங்குள
என்னேஇம் மாயை இருளது தானே.

திருமந்திரம்: 1119.
இருளது சத்தி வெளியதுஎம் அண்ணல்
பொருளது புண்ணியர் போகத்துள் இன்பம்
தெருளது சிந்தையைத் தெய்வம்என்று எண்ணில்
அருளது செய்யும்எம் ஆதிப் பிரானே.

திருமந்திரம்: 1120.
ஆதி அனாதியும் ஆய பராசக்தி
பாதிபராபரை மேலுறை பைந்தொடி
மாது சமாதி மனோன்மணி மங்கலி
ஓதும்என் உள்ளத்து உடன்முகிழ்த் தாளே.

திருமந்திரம்: 1121.
ஓதிய வண்ணம் கலையின் உயர்கலை
ஆதியில் வேதமே யாம்என்று அறிகிலர்
சாதியும் பேதமும் தத்துவ மாய்நிற்பன்
ஆதியென்று ஓதினள் ஆவின் கிழத்தியே.

திருமந்திரம்: 1122.
ஆவின் கிழத்திநல் ஆவடு தண்துறை
நாவின் கிழத்தி நலம்புகழ்ந்து ஏத்திடும்
தேவின் கிழத்தி திருவாம் சிவமங்கை
மேவும் கிழத்தி வினைகடிந் தாளே.

திருமந்திரம்: 1123.
வினைகடிந் தார்உள்ளத்து உள்ளொளி மேவித்
தனைஅடைந் தோர்க்கெல்லாம் தத்துவ மாய்நிற்பள்
எனைஅடிமை கொண்ட ஏந்திழை ஈசன்
கணவனைக் காண அனாதியும் ஆமே.

மாணிக்கவாசகர். திருவாசகம்:
10. திருக்கோத்தும்பி - சிவனோடு ஐக்கியம் :

நாயேனைத் தன்னடிகள் பாடுவித்த நாயகனைப்
பேயேன துள்ளப் பிழைபொறுக்கும் பெருமையனைச்
சீயேதும் இல்லாதென் செய்பணிகள் கொண்டருளந்
தாயான ஈசற்கே சென்றூதாய் கோத்தும்பீ.

மாணிக்கவாசகர். திருவாசகம்:
6. நீத்தல் விண்ணப்பம்
(திருஉத்தரகோசமங்கையில் அருளியது- கட்டளைக் கலித்துறை)

கடையவ னேனக் கருணையி னாற் கலந் தாண்டுகொண்ட
விடையவ னேவிட் டிடுதிகண்டாய்விறல் வேங்கையின் தோல்
உடையவ னே மன்னும் உத்தரகோசமங்கைக்கரசே
சடையவ னேதளர்ந் தேன்எம் பிரான்என்னைத் தாங்கிக்கொள்ளே. 105

ஔவையார். ஆத்திசூடி:
36. குணமது கைவிடேல்.
37. கூடிப் பிரியேல்.

ஔவையார். கொன்றை வேந்தன்:
16. கிட்டாதாயின் வெட்டென மற.

ஔவையார். மூதுரை:
அடுத்து முயன்றாலும் ஆகும் நாள் அன்றி
எடுத்த கருமங்கள் ஆகா - தொடுத்த
உருவத்தால் நீண்ட உயர்மரங்கள் எல்லாம்
பருவத்தால் அன்றிப் பழா. 5

***

In English:

Chapter : 16

Forbearance

Thirukkural : 152

Forgetting harm is better than forgiving it...




In Tamil

poRuththal, iRappinai enRum; athanai
maRaththal athaninum nanRu.

Meaning :
Forgiving the trespasser's evildoing is good at always. Forgetting that evildoing is still better than that of forgiving.

Explanation :
Forgiveness for others trespassed evildoing is good always. Forgetting such act is much better than just forgiving it.

For others overstepped evil deed, if we retaliate through another evil act, they will continue their evil doings. Because of that only sinful offenses will continue. Only enmity and never ending sorrow will remain.

On the other hand, when you forgive other's ignorant or known intruded evil act by pointing the mistake and bearing it, it gives opportunity for them to correct themselves. Even if they do not get rectified immediately, for them to feel shame and realize the days will come soon. Also when we not only bear up with their evil acts but forget it, then we shall be in goodness without affecting by its grievances. Forgetting the bad thing is the intelligence, is it not?

Though they shown us the "death" that is though they inflict the pain like death, it is good to bear with it. That is though they have committed murder on our dear ones too, forgiving and forbearing is only good. Even better is to forget the same is implicit meaning here.

Therefore, always the best way to punish the offenders is to bear their evil act and ignore the same. Still better deed is to forget their evil act instantly at that moment.

Message :
Forgiving trespasses is good always; Forgetting them is still better though.

***

0 comments:

Post a Comment

குறைகளைச் சுட்டினால் நிறை செய்ய இயலும்...